சாண்டில்யனுடைய 'மன்னன் மகள்' படித்திருக்கிறீர்களா ? அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக நான் கருதும் புனைவு அது. ராஜேந்திர சோழர் காலத்திய சோழ -சாளுக்கியச் சண்டைகளையும் சோழர்களின் கங்கைப் படையெழுச்சியையும் தொட்டுச் செல்லும் அந்தக் கதையின் நெருடல் கதாநாயகனும் நாயகியுமே கற்பனைப் பாத்திரங்களாக இருப்பதுதான். தற்காலத்தைய 'வரலாற்றுப் புனைவாளர்கள்' பல நிகழ்வுகளையே 'ரூம் போட்டு' அடித்து விடுவதைப் பார்க்கும் போது அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைதான். நிற்க. இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்தக் கதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய அப்பாவுக்கு இதில் வரும் பிரம்மமாராயன் பாத்திரம் மிகவும் பிடித்த ஒன்று. இத்தனைக்கும் பிரம்மமாராயனை மிகவும் அவசரபுத்திக்காரனாகவும் முன்கோபியாகவும் படைத்திருப்பார் சாண்டில்யன். வேங்கி நாட்டில் சோழ நாட்டுத் தூதுவர் பதவியில் இருப்பவன் இந்த பிரம்மமாராயன். அங்கே ராஜேந்திர சோழரின் மருமகனான ராஜராஜ நரேந்திரனை அரியணையில் அமர்த்தும் முயற்சியில் கதாநாயகனான கரிகாலனுக்கும் பிரம்மமாராயனுக்கும் பல சச்சரவுகள் ஏற்படும். பல சமயங்களில் இருவரும் கடுமையாக மோதிக்கொ