Wednesday 23 October 2019

தமிழர்களின் வானியல்



இன்று நண்பரொருவர் பகிர்ந்த, மதுரையில் வைகை நதியில் புதுப்புனல் வரும் படத்தை ட்விட்டரில் போட்டு அதனுடன் சங்க இலக்கியமான பரிபாடலின் ஒரு சில வரிகளையும் கொடுத்திருந்தேன். என்னதான் பாரதத்திலிருந்து தமிழகத்தையும் தமிழர்களையும் தனித்துக்காட்ட ஒரு கும்பல் கூச்சல் போட்டுக் குதித்தாலும், பாரதப் பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழகம் என்பதை நிறுவும் பல சங்க இலக்கியப் பாடல்களுள் இதுவும் ஒன்று என்பதால்  கொஞ்சம் விரிவாகவே அதைப் பார்க்கலாம்.

முதலில் இந்தப் பாடல். பரிபாடல்(கள்) வரிசையில் பதினொன்றாவது. பரிபாடலில் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். பாடியவர் நல்லந்துவனார்.

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, 
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன் 
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை 
மதியம் மறைய, வரு நாளில்  வாய்ந்த 

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி 
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் 
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால் 
புரை கெழு சையம் பொழி மழை தாழ, 
நெரிதரூஉம் வையைப் புனல். 

இந்தப் பாடலில் இந்திய வானியல், வானிலை இயல், சோதிடத்தின் சில கூறுகள் என அனைத்தும் கலந்துவருவதைக் காணலாம். 

விரிகதிர் மதியம், அதாவது நிலவு ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கிற நாளில் - பௌர்ணமியில்
எரி - கார்த்திகை நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட இடபவீதி, சடை - சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுன வீதி, வேழம் - யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேடவீதி  ஆகிய மூன்று வீதிகளைக் கொண்டு
அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம்  இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் பன்னிரண்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில் 
வெள்ளி ஏற்றியல் - தனக்குரிய இடப ராசியை அடைய, வருடை - மேடம், மேஷ ராசியை படிமகனான செவ்வாய் அடைய, புந்தி - புதன் மிதுன ராசியில் நிற்க, புலர் விடியல் - சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்தின் மேலுள்ள கடகத்தில் இருக்க, அந்தணன் - வியாழன் பங்கு - சனியின் துணை இல்லங்களான மகர, கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய, யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலைவை மறைக்க - அதாவது அன்று சந்திரக் கிரகணம் 
அப்படிப்பட்ட ஒரு நாளில், பொதியில் முனிவன் - அகத்தியனுக்கு உரிய நட்சத்திரமான அகத்திய நட்சத்திரம் (Canopus) மிதுன ராசியை அடைந்தது. அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக வையையில் புதுப்புனல் வந்தது. 

ஒரே பாடலில் எவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் பாருங்கள். முதலில் பால்வீதி என்று இன்று அழைக்கப்படும் நமது வான்வெளியை மூன்று தெருக்களாகச் சமைத்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார். 

கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறான். இதைக்கொண்டு அது ஆடி மாதம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுனுடனே பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறார்கள். ஆக, சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன (அதனால்தானோ என்னவோ புலவர் ராசிகளுக்கு இருக்கை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்). சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறார். அதனால் தான் அன்று பௌர்ணமி. போதாக்குறைக்கு ராகு அதனை மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். தோராயமாக அன்று உத்திராட நட்சத்திரமாக இருக்கக்கூடும். 

தவிர அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது.  ஒரு சிலர் இந்தக் கிரக நிலைகளை ஆராய்ந்து, இந்த நாள் பொயுமு 161ம் ஆண்டு வந்திருக்கக் கூடுமென்று  கணித்திருக்கின்றனர். தொல் வானியலில் அதி நவீன மென்பொருட்கள் வந்திருக்கிற இந்தக் கால கட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கணக்கீடு  சரியா என்று தெரிவிக்கலாம். அது பரிபாடலின் காலத்தை அறியவும் உதவும். 

மேற்குறிப்பிட்ட கூறுகள் எல்லாமே நமது பாரதத்தின் வானியலிலும், சோதிட சாஸ்திரத்திலும் காணப்படும் கூறுகளாகும். எனவே தமிழர் மற்ற பகுதிகளைப் போன்றே ஒரு பொதுவான வானியலைப் பின்பற்றியே வந்துள்ளனர் என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா என்ன? 











Sunday 11 August 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3



குஸ்ரூ கான் டெல்லி சென்றதும் நடந்தவை, கிட்டத்தட்ட மாலிக்கபூர் டெல்லி சென்றதும் நடந்ததைப் போலவே, ஒரு ஆக்‌ஷன் ரீப்ளேயாக, இருந்தது. தனது எஜமானனான முபாரக்கை தந்திரமாக வீழ்த்திவிட்டு தான் மன்னனாக முடிசூட்டிக்கொண்டான் குஸ்ரூ கான். ஆனால் இது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. காஸி மாலிக் என்பவன் குஸ்ரூவை வீழ்த்திவிட்டு தானே சுல்தான் என்று பிரகடனம் செய்துகொண்டான். கியாசுதீன் துக்ளக் என்ற பெயருடன் டெல்லியில் துக்ளக் வம்சத்தை ஸ்தபித்தான். 

தொடர்ந்த குழப்பங்களால் சீர்கெட்டிருந்த டெல்லி நிர்வாகத்தைச் சீரமைக்கத்தொடங்கிய கியாசுதீன், தன் மகனான உலூக் கானை அடுத்த வாரிசாக அறிவித்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் 'பிரசித்தி பெற்ற' முகமது பின் துக்ளக். வாரிசாக நியமிக்கப்பட்ட உலூக்கானின் பார்வை முதலில் தக்காணத்தின்பால் திரும்பியது. காகதீயர்கள் போர்க்கொடி தூக்கியதால் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்த உலூக்கான் முதலில் தோல்வியையே சந்தித்தான். தேவகிரிக்குப் பின்வாங்கி, பிறகு மீண்டும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாரங்கல்லின் மீது படையெடுத்து, காகதீயர்களைத் தோற்கடித்தான். 'மாபாரின்' செல்வங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த உலூக்கான், அந்த செல்வங்களைக் கொள்ளையடிக்க மட்டும் எண்ணாமல், துக்ளக்கின் ஆட்சியை மதுரைவரை நீட்டிக்க ஆசை கொண்டான். எனவே தமிழகத்தின் மீது தனது தாக்குதலைத் தொடங்கினான். வடபகுதியில் அவனை எதிர்க்க வலுவான ஆட்சியாளர்கள் இல்லாததால், கண்ணனூர்க் கொப்பம் வரை உலூக்கானால் எளிதாக முன்னேற முடிந்தது. 

பொயு 1323ம்  ஆண்டு, பங்குனித் திருவிழா ஶ்ரீரங்கத்தில் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.  பங்குனி எட்டாம் திருநாள் உற்சவத்தில் நம்பெருமான் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளினார். அருகிலுள்ள சமயபுரம் வரை உலூக்கானின் படைகள் வந்துவிட்டதை எண்ணி மனம் கலங்கினர் ஆலய நிர்வாகிகள். திருவிழாவைத் தொடர்வதா, நிறுத்துவதா என்று பெருமாளிடம் உத்தரவு கேட்கப்பட்டது. தொடர்ந்து நடத்துமாறு உத்தரவும் வந்தது.  விழா நடப்பதை அறிந்த உலூக்கானின் படைகள் ஆற்றைக் கடந்து விரைந்து வந்தன. காரியம் கைமீறிவிட்டதை அறிந்த பட்டர்கள், பிள்ளை லோகாச்சாரியாரிடம் நம்பெருமான் விக்ரகத்தை ஒரு பல்லக்கில் ஏற்றி ஒப்படைத்து தெற்கு நோக்கி அனுப்பிவைத்தனர். விக்ரகத்தைக் காணாததால் ஆத்திரமடைந்த டெல்லிப் படைகள் திருவிழாவில் கூடியிருந்தோரை, ஆண், பெண் சிறுவர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். ஶ்ரீரங்கம் நகரின் மீதும் படையெடுத்து கோவிலைத் தாக்கியழித்தனர். நிராயுதபாணிகளான பலரின் தலை வெட்டப்பட்டு குருதி ஆறு ஓடியது. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்' என்று இந்நிகழ்ச்சி குருபரம்பரைச் சரிதத்தில் குறிப்பிடப்படுகிறது. தெற்கு நோக்கிப் பயணித்த நம்பெருமான், கேரளா வழியாக மேல்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டதும்,  பின் குமார கம்பண்ணர் மதுரையை மீட்டபின் ஶ்ரீரங்கம் எழுந்தருளியதும் 'திருவரங்கன் உலா' என்ற கதையில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஶ்ரீரங்கத்தைத் தாக்கியழித்த உலூக்கான் அடுத்து தனது இலக்கான மதுரையை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். அங்கே பராக்கிரம பாண்டியரின் ஆட்சி நடந்துகொண்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். டெல்லிப் படைகள் மீண்டும் வருவதைக் கண்ட பராக்கிரம பாண்டியன் காளையார் கோவில் நோக்கிப் பின்வாங்கினான். ஶ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்ந்த கதையை அறிந்த மதுரை ஸ்தானீகர்கள் மதுரைக் கோவிலைக் காக்க முனைந்தனர். உற்சவ மூர்த்திகளை சிலரிடம் கொடுத்து தென்பாண்டி நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். சுவாமி சன்னதியின் விமானத்தில் மீனாட்சி அம்மையை அஷ்டபந்தனம் செய்து மறைத்து வைத்தனர். சன்னதியின் வாயிலை சுவர் எழுப்பி மூடிவிட்டு அதன் முன் வேறொரு லிங்கத்தை வைத்தனர். மதுரை நகருக்குள் புகுந்த உலூக்கானின் படைகள் பேரழிவை நிகழ்த்தின. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கோவிலுக்கும் பெருத்த சேதம் நிகழ்ந்தது. சன்னதியின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் உடைக்கப்பட்டது. 



                 (உலூக்கானின் படைகளால் சிதைக்கப்பட்ட லிங்கத்திருமேனி)


நகருக்கு நடந்த அழிவைக் கேள்விப்பட்ட பராக்கிரம பாண்டியர், தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு உலூக்கானுடன் மோதினார். ஆனால் அவருக்கு முன்பு போல் வெற்றி கிட்டவில்லை. டெல்லி திரும்பும் போது உலூக்கானால்  சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்ட பராக்கிரம பாண்டியர் வழியிலேயே உயிரிழந்தார். அவரோடு மதுரைப் பாண்டியர் வம்சம் முடிவுக்கு வந்தது. மதுரையை வெற்றி கண்ட உலூக்கான் 'மாபார்' என்ற பெயரோடு அதை துக்ளக் ஆட்சியின் ஒரு மாகாணமாக அறிவித்தான். தன் பிரதிநிதியாக ஜலாலுதீன் ஆசான் கான் என்பவனையும் நியமித்து டெல்லி திரும்பினான். அங்கே முகமது பின் துக்ளக் என்ற பெயரோடு முடிசூடிக்கொண்டான்.  பின்னால் ஆசான் கான் பொயு 1335ல் மதுரையை தனி சுல்தானகமாக அறிவித்ததும், அந்த ஆட்சி சுமார் 43 ஆண்டுகள் நடந்ததும், பின்னர் குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அந்த சுல்தானகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததும் தனிக்கதை. 

எனவே, நடந்த மூன்று படையெடுப்புகளில் தமிழகத்தில் பேரழிவை நிகழ்த்தியதும், சுமார் 43 ஆண்டுகள் தமிழகமும் தமிழர்களும் பெரும் அவதிக்குள்ளாவதற்குக் காரணமாக இருந்ததும் உலூக்கான் நடத்திய இந்த மூன்றாவது படையெடுப்பே ஆகும். குமார கம்பண்ணர் மட்டும் தமிழகத்தை மீட்டிராவிடில், இன்று வடநாடுகளின் பல பகுதிகளைப் போலவே தமிழகமும் தன்னுடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஏன் மொழியையும் கூட இழந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 









Sunday 28 July 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 2



சென்ற பகுதியில் மாலிக்கபூரின் படையெடுப்பைப் பற்றிப் பார்த்தோமல்லவா. அந்தப் படையெடுப்பின்  விவரத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, வசாப், பார்னி போன்றவர்கள் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பலர் சொல்வது போல், ஶ்ரீரங்கத்தில் மாலிக்கபூர் நிகழ்த்திய சேதங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. சமயபுரம் வரை வந்த மாலிக்கபூர் ஶ்ரீரங்கத்தை விட்டு வைத்திருக்க முடியாது என்றாலும், "மற்ற கோவில்களையும் கொள்ளையடித்தான்" என்று அமீர் குஸ்ரூ ஒரே வரியில் முடிப்பதால், கோவிலில் பெரும் கொள்ளை நடந்திருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளலாம். இதே போலத்தான் மதுரையிலும். செல்வங்கள் கொள்ளை போயினவே தவிர கோவிலுக்கு அதிகம் சேதமில்லை என்றே நாம் கருதலாம். மாலிக்கபூர் சிதம்பரம் கோவிலைச் சேதப்படுத்திய விவரங்கள் மட்டுமே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவன் ராமேஸ்வரம் வரை சென்றான் என்பதற்குக் கூட தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் மாலிக்கபூரின் படையெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாண்டியப் பேரரசை வலுவிழக்க வைத்துவிட்டது.

மாலிக்கபூர் அப்பால் சென்றவுடன் வீரபாண்டியன் மீண்டும் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்யத்தொடங்கினான். ஆனால், சேரமான் ரவிவர்மன் குலசேகரன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து அவனைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல், காஞ்சி நகர் வரை தனது படையெடுப்பை மேற்கொண்டு நடுவிலுள்ள பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றினான். பிற்பாடு, பாண்டிய தாயாதி அரசர்கள் பெரும்பாடு பட்டு மதுரையை அவனிடமிருந்து மீட்டனர். அவர்கள் ஒருவனான பராக்கிரம பாண்டியன் பொயு 1315லிருந்து மதுரையை ஆளத்தொடங்கினான்.

ஹொய்சாளர்களின் நிலை இதற்கு எவ்வளவோ மேம்பட்டதாக இருந்தது. நாட்டைத் துரிதமாக புனர்நிர்மாணம் செய்ததாக வீர வல்லாளன் அவனுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறான். துவாரசமுத்திரத்தை மட்டுமல்லாமல், நாட்டின் மேற்கெல்லையில் ஹம்பி நகர் வரை அவன் தன்னுடைய அரண்களை வலுப்படுத்தினான். அது மட்டுமல்லாமல், தலைநகரை விட்டு மேற்கு எல்லையில் தன்னுடைய முகாமை அமைத்துக்கொண்டான்.

இரண்டாம் படையெடுப்பு

தென்னகத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது வடக்கிலும் பெரும் குழப்பம் நிலவியது. பொயு 1311ம் ஆண்டின் இறுதியில் மாலிக்கபூர் டெல்லியைச் சென்று அடைந்தான். அதன்பின் அலாவுதீன் கில்ஜியை தன் கைப்பொம்மையாக ஆட்டி வைத்து, அவனுடைய மகன்களைக் குருடாக்கியும் கொன்றும் பல கொடுமைகள் செய்தான். அலாவுதீனையும் 1315ல் மாலிக்கபூர் கொலைசெய்து விட்டு, அரசைக் கைப்பற்றிக்கொண்டான். ஆனால், இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அலாவுதீனின் மகன்களில் ஒருவனான முபாரக் கான், கபூரைக் கொன்று ஆட்சியைப் பிடித்தான். எப்படி அலாவுதீனுக்கு மாலிக்கபூரோ, அப்படி முபாரக் கானின் அடிமையாக இருந்தவன் குஸ்ரூ கான். இருவருமாகச் சேர்ந்து தக்காணத்தின் மீது படையெடுத்தனர்.

தேவகிரியை வென்ற பிறகு, அவர்களின் கவனம் காகதீயப் பேரரசின்மீது திரும்பியது. டெல்லிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை காகதீய அரசன் பிரதாபருத்திரன் நிறுத்தியிருந்தான். அதனால், குஸ்ரூ கான் வாரங்கல்லின் மேல் படையெடுத்து அதனை வென்றான். இதற்கிடையில் முபாரக் கான் டெல்லி நோக்கித் திரும்பவே, குஸ்ரூ கான் மீதியுள்ள செல்வங்களைக் கொள்ளையடிக்கும் ஆசையில் பொயு 1318ல் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தான்.

குஸ்ரூ கானின் படை அதிக எதிர்ப்பைச் சந்திக்காமல் மதுரை நோக்கி முன்னேறியது. டெல்லிப் படைகள் வருவதை அறிந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு கானப்பேர் (காளையார்கோவில்) சென்று ஒளிந்து கொண்டான். எதிர்ப்பேதும் இல்லாமல் மதுரையைக் கைப்பற்றிய குஸ்ரூ கான் அங்கே சில காலம் தங்கியிருந்தான். அங்கேயிருந்து கொண்டு டெல்லியைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.

அப்போது மதுரையில் கடும் மழைக்காலம் தொடங்கியது. (உண்மைதான் நம்புங்கள்).  தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு வந்து குஸ்ரூ கானை எதிர்த்தான். எதிர்பாராத இந்தத் தாக்குதலாலும், கவனம் டெல்லியில் இருந்ததாலும் குஸ்ரூ கான் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு டெல்லி திரும்பினான். மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வந்தது.  இந்தப் படையெடுப்பைப் பொருத்தவரை, தமிழகம் தனது செல்வங்களை மீண்டும் ஒருமுறை இழந்தாலும் மற்றபடி சேதங்கள் குறைவாகவே இருந்ததது.


                                                                                                                             அடுத்து





தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1

(சுருக்கமான) முன்னுரை

தமிழகத்தின் மீது நடைபெற்ற டெல்லி சுல்தான்களின் படையெடுப்பைப் பற்றி பல்வேறு விதமான கதைகள் / தகவல்கள் உலவுகின்றன. நன்கு கற்றறிந்த நண்பர்களே கூட இவற்றைப் பற்றி எழுதும்போது பல தவறுகளைச் செய்வதைக் காண முடிந்தது. குறிப்பாக 'எல்லாக் கேசையும்' மாலிக்கபூர் மீதே எழுதிவிடுகிறார்கள். கொஞ்ச நாள் முன்பு நான் படித்த கட்டுரை ஒன்றில் வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்த நண்பர் ஒருவரே பல பிழைகளைச் செய்திருந்தார். இதற்கான காரணமாக நான் கருதுவது, ஏதாவது ஒரு ஆதாரக் கட்டுரையை எடுத்துக்கொண்டு கால வித்தியாசங்களைச் சரிபார்க்காமல், மற்ற தரவுகளை ஒப்புநோக்காமல் எழுதுவதே ஆகும்.  முடிந்த மட்டிலும் அதற்கான ஆய்வைச் செய்து, இந்த விஷயத்தில்  ஓரளவுக்கு தெளிவான பார்வையை அளிக்க முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தப் படையெடுப்புகளைப் பற்றி நான் இந்த ப்ளாக்கில் எழுதிய 'சித்திரைத் திருவிழா' கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தத் தகவல்களை கொஞ்சம் விரிவாக இப்போது பார்க்கலாம்.



முதல் படையெடுப்பு

தமிழ்நாட்டின் மீது பொயு 14ம் நூற்றாண்டில் மும்முறை டெல்லி சுல்தான்களின் படைகள் தாக்குதல் நிகழ்த்தின. இதில் மூன்றாவது தாக்குதல்தான் தமிழகத்தை இருளில் அமிழ்த்தியது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அலாவுதீன் கில்ஜி டெல்லியில் ஆட்சி செய்துகொண்டிருந்த போது, அவனது படைத்தலைவனாக இருந்தவன் மாலிக்கபூர்.  மாபார் என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்ட மதுரையின் செல்வ வளத்தைப் பற்றி மார்க்கோ போலோவும், மற்ற தூதர்களும் கில்ஜியிடம் கதை கதையாகச் சொல்லியிருந்தார்கள். பாண்டிய நாட்டில் இருந்த யானைகள் எப்படி வலுவானதாகவும் போர்த்திறன் கொண்டதாகவும் இருந்தன என்பதையும் பற்றி அவனுக்குச் சொன்னார்கள். தவிர, இஸ்லாத்தை தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் பரப்ப வேண்டும் என்ற வேட்கையும் கில்ஜிக்கு இருந்தது. ஆகவே ஏற்கனவே வாரங்கல் வரை வந்து வெற்றியடைந்திருந்த மாலிக்கபூரை தமிழகத்தில் வந்து கொள்ளையடிப்பதற்காக கில்ஜி அனுப்பிவைக்க முனைந்தான்.

பொயு 1310ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படை டெல்லியிலிருந்து கிளம்பியது. இரு மாதங்கள் கழித்து, தக்காணத்திலுள்ள தேவகிரிக்கு வந்து முகாமிட்டது இந்தப் படை. அங்கு சில நாள் தங்கிவிட்டு, கோதாவரியையும் பீமா நதியையும் கடந்து பண்டரிபுரத்தை அடைந்தது அந்தப் படை. அங்கு தங்கி தென்னகத்தின் நிலையை ஆய்வு செய்தான் மாலிக்கபூர். அப்போது துவாரசமுத்திரத்தை (தற்போதைய ஹலேபீடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்தவன் ஹொய்சாள மன்னன் வீர வல்லாளன். தமிழகத்தின் வடபகுதி வரை அவனது ஆட்சி பரவியிருந்தது. தமிழகத்தின் தென்பகுதியை பாண்டியர்கள் ஆண்டுவந்தனர். பாண்டிய சகோதரர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் சகோதரர்களுக்கு இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டு, இளையவனான வீர பாண்டியன், மூத்தவன் சுந்தர பாண்டியனைத் துரத்திவிட்டு மதுரை ஆட்சியைக் கைப்பற்றி இருந்தான். இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைத்த வீர வல்லாளன், தன் படையோடு கிளம்பி பாண்டிய நாட்டின் மீது போர்தொடுக்க வந்துகொண்டிருந்தான்.

இந்த நிலையில், தன் நாட்டின் வட எல்லையில் மாலிக்கபூர் பெரும் படையோடு வந்து தங்கியிருப்பதை அறிந்த வல்லாளன், அவசரமாக பாண்டிநாட்டுப் படையெடுப்பைக் கைவிட்டு தலைநகர் திரும்ப நேரிட்டது. இதற்குள் மாலிக்கபூர் துவாரசமுத்திரத்தை நெருங்கி விட்டான். கில்ஜியின் வலுவான படைகளைக் கண்ட வல்லாளன், சமாதானத்தைக் கோரத் தீர்மானித்தான். இதற்கிடையில், அடுத்து தனக்குத்தான் ஆபத்து வரும் என்று கணித்த வீர பாண்டியன், வல்லாளனோடு இருந்த பகையை மறந்து அவனுக்கு உதவத் தீர்மானித்து ஒரு படையை துவாரசமுத்திரத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால், இந்த உதவியை வீர வல்லாளன் நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், நன்றி மறந்து சுந்தர பாண்டியனுக்கு உதவத் தீர்மானித்தான். தன்னோடு சமாதானமாகப் போனால், மதுரைப் படையெடுப்புக்கு உதவுவதாக மாலிக்கபூருக்கு ஓலை ஒன்றையும் அனுப்பினான் வீர வல்லாளன்.

ஆனால், மாலிக்கபூர் உடனே சமாதானத்தை ஏற்கவில்லை. அரண்மனையிலிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மதத்திற்கு வல்லாளன் மாறவேண்டும் அல்லது ஜிசியா வரியைச் செலுத்துவதாக ஒப்புக்கொள்ளவாவது வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைத்தான். இதை ஏற்றுக்கொண்டு 'தன்னுடைய பூணூலைத் தவிர' மற்ற எல்லாவற்றையும் டெல்லிப் படைகளிடம் ஒப்படைத்தான் வீர வல்லாளன். அந்தச் செல்வத்தோடு வல்லாளனின் மகன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றான். வீர வல்லாளன் மாலிக்கபூருக்கு வழிகாட்ட, கில்ஜியின் படைகள் தமிழகத்தில் நுழைந்தன.

'சர்மலி மற்றும் தபார்' கணவாய்கள் வழியாக இந்தப் படைகள் தமிழத்தில் நுழைந்தன என்று அமீர் குஸ்ரு தெரிவிக்கிறார். இவை, சேர்வராயன் மலைகள் மற்றும் தோப்பூர்க் கணவாயாகவே இருக்கவேண்டும். இவற்றைக் கடந்து காவிரியின் கரையில் அந்தப் படைகள் முகாமிட்டன. துவாரசமுத்திர நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த வீர பாண்டியன், தன் படைகளோடு பாண்டிய நாட்டின் வடக்கெல்லையான ஜெயங்கொண்ட சோழபுரத்தில் முகாமிட்டிருந்தான். அங்கே விரைந்த மாலிக்கபூரின் படைகளுக்கும் பாண்டியப் படைகளுக்கும் கடும் போர் மூண்டது. போரில் தோல்வியடைந்த வீர பாண்டியன் கண்ணனூர் கொப்பத்தை (சமயபுரம்) நோக்கிப் பின்வாங்கினான். கில்ஜியின் படைகள் அங்கேயும் அவனைத் துரத்திச் சென்றன. அப்போது பாண்டியப் படைகளில் இருந்த இஸ்லாமியப் பிரிவு, அவர்களுக்குத் துரோகம் செய்து மாலிக்கபூரிடம் சேர்ந்து கொண்டது.   எனவே இங்கேயும் பாண்டியர்கள் தோல்வியடைந்தனர். இப்போது பாண்டியன் மீண்டும் மேற்கு நோக்கிச் சென்று கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தான். மூன்றாவது முறையாக மாலிக்கபூர் அங்கே அவனைத் தோற்கடித்தான். வீர பாண்டியன் கொல்லி மலைகளுக்குத் தப்பிச் சென்றான். இந்தத் தோல்விகளைப் பற்றி அறிந்த சுந்தர பாண்டியன் இப்போது மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான்.

பாண்டியப் படைகளை நிர்மூலமாக்கியது மட்டுமல்லாமல், போகும் இடங்களையெல்லாம் கொள்ளையடித்த மாலிக்கபூரின் பார்வை இப்போது சிதம்பரத்தை நோக்கித் திரும்பியது. 'பிரும்மஸ்தபுரி' (பிரும்மபுரி - சிதம்பரம்) என்ற இடத்தில் பெரும் செல்வமும், தங்கமும், யானைகளும் இருப்பதாக அறிந்த மாலிக்கபூர் சிதம்பரத்தை இரவில் தாக்கினான். கோவில் தரைமட்டமாக்கப்பட்டது. பொன்னும் பொருளும் 250 யானைகளும் கைப்பற்றப்பட்டன. 'விக்ரக வழிபாட்டாளர்கள், பிராமணர்கள் ஆகியோரின் தலைகள் கழுத்திலிருந்து உருண்டன, இரத்த ஆறு ஓடியது' என்று மாலிக்கபூரோடு வந்த வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். லிங்கத் திருமேனியை உடைத்ததோடு மட்டுமல்லாமல், 'தியோ நாராயண்',  சித்திரகூடப் பெருமாளையும் அவர்கள் வீழ்த்தினர்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, மாலிக்கபூரின் படைகள் 'தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல'  அவனுடைய நண்பனாக இருந்த சுந்தர பாண்டியன் ஆட்சி செய்த மதுரையை நோக்கி விரைந்தன. வழியிலுள்ள ஆலயங்கள் இடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நிலைமையைப் புரிந்து கொண்ட சுந்தர பாண்டியன், மதுரையை விட்டு ஓடிப்போனான். மதுரைக் கோவிலைத் தாக்கி அழித்த மாலிக்கபூர், அங்கிருந்து எண்ணிலடங்கா அளவு பொன்னையும், விலையுயர்ந்த நவமணிகளையும், 512 யானைகளையும், குதிரைகளையும் கைப்பற்றி டெல்லி திரும்பினான்.

                                                                                                                                         (அடுத்து)








Thursday 2 May 2019

The Thai Coronation and Thiruvempavai



Thailand is in a festive mood now. King Maha Vajiralongkorn will be officially crowned as the monarch on March 4th. His coronation name is going to be Rama X.  It must be noted that the present line of Thailand kings are from the Chakri Dynasty, founded by Rama I. The dynasty is ruling the country since 18th Century CE. 

Since historical times, Thailand had close relations with India and the country has cultural and religious links with Bharath. Hence it is no wonder that the coronation ceremony of Thai Kings is quite similar to the coronation ceremony of ancient Indian kings. Despite the fact that the monarchs are Buddhists, most of the coronation ceremony follows Vedic rituals.  The Homas proceeding the coronation date, the Abhisheka similar to the Rajyabhisheka ritual similar to that of Vedic times, reciting of Vedic Mantra are some of the examples of this. In the midst of all these, one notable feature is reciting of Thiruvempavai, part of the Thiruvasagam verses sung by Manickavachagar, during the crowning of the new king. What was the link between Thiruvempavai and Thailand ? Why it is being recited during the ceremony ?

One can easily infer that Thiruvempavai went to Thailand during the Chola era. During their South East Expeditions, Takoba in Thailand named as ‘Thalai Thakkolam’ in Rajendra’s Meikeerthi, was a strategic port from which the Chola army launched lightning attacks on the Sailendra Kingdom. Tamil merchants had many trading bases in Thailand. So it is easy to surmise that the Tamil Siva Brahmins could have also gone with them to perform Poojas in the temples constructed by the merchants and local kings. They have taken the Thiruvempavai along with them. 

The evidence for this can be inferred from the book ‘Tamrab Tao Shri Chulalak’ written by the queen Nang Noppamas of Sukhothai kingdom during 1348 CE. It is mentioned that during the first month of the year, ‘Triyempavai’  festival was celebrated in the family temple of the king. She also writes that ‘a swing’ festival took place during that time and people prayed Shiva and Narayana during that time. In 1461 CE, Royal notes of King Param Trilokanath of Ayutthaya city declares that the Triyempavai festival as the Royal festival  and elaborates the rituals by which the Brahmins enter the Palace with Flowers, Paddy etc during that festival. Like this, Thiruvembavai slowly got ‘customised’ with festivals like ‘Swing festival’ and became part of the Royal life. The current belief is that during the first month of the Thai year, post the new moon period, Shiva comes to earth for ten days and then Narayana (Narai) comes and stays here for five more days. Triyempavai is celebrated during this period. 

Like the tamil version, the Thai Triyempavai has 20 verses of which the first 11 are called as ‘Pothmurai yaai’ and the next 9 are called as ‘Pothmurai klang’.  The first 11 are sung before Shiva and the next 9 before Narayana. However, unlike the tamil way, in which the Thiruvempaavai is sung in a ‘Pan’ - raaga, the Thai triyempaavai is ‘recited’ as a Mantra. For example, the first verse ‘Aadhiyum Andhamum illaa arumperum Chodhiyai yaampaada Keteyum vaalthadangan’  is recited as ‘aadhiyumandhamumilla varunperunyo thipaiyampaa kadket dayumvaadkadan’. 

So what happens during the coronation ceremony. The King is bathed and after the initial rituals, the coronation is performed on a throne of gilded figwood known as ‘Bhadrapitha Throne’. The king will be seated in the throne. A Siva Brahamana then recite the first verse of the Triyempavai and then hand over the crown to the King. The King puts the crown on his head and the rest of the rituals follow. This is one of the continuation of the Tamil influence in Thailand and especially with the Kings of Thailand. 

When King Vajiralongkorn gets crowned in couple of days, we will witness again reciting of our beloved Manickavachakar’s Thiruvempavai in a far away land, a tradition which continues from 13th Century, a moment to be proud of our ancient kings who spread our great religion in far away lands.  

Reference :

1) Siamese State Ceremonies by Quaritch Wales H G
2) Dravidian influence in Thai culture by M E Manickavasagom PIllai