Wednesday, 17 February 2016

சாளுக்கியர்களும் முருகப் பெருமானும்

முருகக்கடவுளின் வழிபாடு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வடநாட்டிலும் பெருமளவு பரவியிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்து வந்தேயிருந்திருக்கின்றன. ஆனால், வட இந்திய அரசர்கள் பெரும்பாலும் சிவன், விஷ்ணு மற்றும் சக்தி வழிபாட்டையே பெருமளவு பின்பற்றியிருக்கிறார்கள். தங்களது கல்வெட்டுகளில் குறிப்பிட்டும் வந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு விதிவிலக்காக அண்மையில் நான் பார்த்த ஒரு கல்வெட்டுச் செய்தி இருக்கிறது. அதை  இங்கே வாசித்துவிடுங்கள்.

சாளுக்கிய அரசன் முதலாம் கீர்த்திவர்மன், பிரசித்தி பெற்ற இரண்டாம் புலிகேசியின் தந்தை. இவன் மறைந்தபோது, புலிகேசியும் அவன் சகோதரர்களும் சிறுவர்களாக இருந்ததால், கீர்த்திவர்மனின் சகோதரன் மங்களேசன் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்தான். கீர்த்திவர்மனின் ஆட்சிக்காலத்தில், இளவரசனாக இருந்த மங்களேசன்  வெட்டுவித்த கல்வெட்டுத்தான் இது.   திருமாலின் கோவிலைக் கட்டுவதற்காகவும் கொடுக்கப்பட்ட நிவந்தங்களுக்காக எழுப்பபட்ட இந்தக் கல்வெட்டு முருகப்பெருமானின் பாதார விந்தங்களைத் தொழுதே ஆரம்பிக்கிறது. குறிப்பாக சாளுக்கியர்கள் முருகப்பெருமானின் திருவடிகளைத் தொழுபவர்கள் என்பதே இந்தக் கல்வெட்டு அளிக்கும் செய்தி. அதே சமயம் இந்தக் கல்வெட்டில் மங்களேசன் தன்னைத் திருமாலின் அடியவனாகக் கூறிக்கொள்கிறான். ஆக, சைவ, வைணவப் பிரிவுகள் அக்காலத்தில் பெரிதும் பேணப்படவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. 

இப்படி இந்து மதத்தைப் பின்பற்றிய சாளுக்கியர்களை, என்ன காரணத்தாலோ சமண மதத்தவர்களாக சிவகாமியின் சபதத்தில் கல்கி சித்தரித்திருந்தார். இதற்கான காரணமும் ஆராயப்படவேண்டிய ஒன்று. 

இந்தக் கல்வெட்டில் கிடைக்கும் இன்னொரு சுவையான விஷயம், மங்களேசன் தன் தமையனான கீர்த்திவர்மனின் மீது கொண்டுள்ள மரியாதை. இந்தக் கோவிலைக் கட்டிய புண்ணிய பலன் தனது தமையனுக்குச் சேரவேண்டும் என்று கோரும் அவன், தமையனுக்குப் பணிவிடை செய்த பலன் தனக்குச் சேரவேண்டும் என்றும் வேண்டுகிறான். தமையன் மீது இவ்வளவு பக்தி கொண்டிருந்தாலும் அவனது மறைவுக்குப் பிறகு, ஆட்சியை முறைப்படி புலிகேசிக்கு அளிக்காமல், தானே கைப்பற்றிக்கொண்டு, புலிகேசியையும் அவனது சகோதர்களையும் காட்டிற்கு விரட்டிவிட்டதாக வரலாறு சொல்கிறது. பிற்பாடு வயதுவந்தபின், புலிகேசி தனது சிற்றப்பனுடன் போர் புரிந்து ஆட்சியை மீட்டுக்கொண்டான். 

பதவி ஆசை  எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது ?

சேரநாடும் தமிழும்



சேர நாட்டில் பேசப்பட்டு வந்த தமிழ் எப்படி மாறியது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால்,  சேர நாடு என்று சொல்லப்படும் நிலப்பரப்பைக் கவனிப்போம்.  தெற்கே நாகர்கோவிலிலிருந்து வடக்கே பாலக்காடுக் கணவாய் வரை சேர நாடு பரவியிருந்தது. அவர்களின் தலைநகரம் தற்போதைய கரூர் என்கிறார் ராகவையங்கார்.  இது விவாதத்திற்கு உட்பட்டே வந்தாலும், சேர நாடு பெரும்பாலும் புவியியல் ரீதியாக தமிழகத்தை விட தனித்தே இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் நடுவிலிருந்த மேற்குத் தொடர்ச்சி மலைதான். எனவே தமிழகத்தின் மற்ற இரு பேரரசுகளுக்கும் சேர நாட்டுக்கும் தொடர்பு குறைவாகவே இருந்தது. சங்க காலத்தைப் பொறுத்த வரை தமிழகத்தில்  சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர வேளிர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே.  இதில் சேர நாட்டின் தென்பகுதியில் ஆய் வேளிர் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். களப்பிரர்கள் படையெடுப்பின் போது மூவேந்தர்களும் மறைந்துவிட்டாலும் இந்த ஆய் வேளிர்கள் மட்டும் தங்களது ஆட்சியைத் தொடர்ந்தனர்.

பல்லவர்களும் பாண்டியர்களும் களப்பிரர் ஆட்சியை அகற்றிய போது, இயற்கைத் தடை இல்லாத சேர நாட்டின் வடபகுதியிலிருந்து கதம்பர்களும் கங்கர்களும் சாளுக்கியர்களும் சேர நாட்டின்மீது படையெடுத்துவந்தனர். அவர்களுடைய மொழியின் தாக்கத்தால் சேர நாட்டில் பேசப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உருமாறத் தொடங்கியது. அதைத்தவிர பெரும் எண்ணிக்கையில்  சேர நாட்டின் வட பகுதியில் நம்பூதிரிப் பிராமணர்கள் வந்து குடியேறத் துவங்கினர்.  அவர்களுடைய வரலாறு அவர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பேசிய சமஸ்கிருத மொழி சேர நாட்டிலுள்ள தமிழுடன் கலந்து மலையாளம் உருவாகத் தொடங்கியது .  அவர்களும் அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்தவர்களுடன் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டதால், புது இனங்கள் உருவாயின. தாய் வழி உரிமை (மருமக்கள் தாயம்) சமூகக் கோட்பாடாக ஆகியது.

இதற்கு விதிவிலக்காக இருந்தது தென் சேர நாட்டில் ஆய் மன்னர்கள் ஆண்டுவந்த பகுதிதான். சங்க காலத்தில் குறு நில மன்னர்களாக இருந்த அவர்கள், களப்பிரர் காலத்திற்குப் பிறகு சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினர்.  ஆனால் இடைக்காலப் பாண்டியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. நெடுமாற பாண்டியன், கோச்சடையான் ரணதீரன் ஆகியோர் ஆய் மன்னர்களைத் தோற்கடித்தனர். முடிவில் ஜடில பராந்தகன் இவர்களை பாண்டிய நாட்டின் சிற்றரசர்களாக ஆக்கிவிட்டார்.

இதற்கிடையில் சேர நாட்டின் வட பகுதியில் குலசேகர வம்சம் ஆட்சியைப் பிடித்தது. இவர்களின் தோற்றத்தைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. மகோதயம் (தற்போதைய கொடுங்கோளூர்) என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்யத் துவங்கிய இவர்களுக்கு நம்பூதிரிப் பிராமணர்களின் ஆதரவு இருந்தது. குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்த வம்சத்தில் வந்தவர்கள்தான். 'வர்மன்' என்ற பெயரை இவர்கள் ஆட்சிப் பெயராக வைத்துக்கொண்டனர். இவர்கள் ஆட்சியில் மலையாளம் மேலும் வளர்ச்சியடைந்தது. ஆதித்த சோழன் காலத்தில் சோழர்களுக்கு உதவியாக இருந்த இந்த சேர அரசர்கள், (ஸ்தாணு ரவி வர்மன்) பிற்பாடு பாண்டிய மன்னர்களுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். ஆய் மன்னர்கள் மீது போரிட்டு அவர்களது நாட்டையும் கைப்பற்றிக்கொண்டனர். இதனால் மலையாளம் தென் சேர நாட்டிலும் பரவியது.

பிற்காலத்தில் ராஜராஜ சோழன், பாஸ்கர ரவி வர்மன் காலத்தில் சேர நாட்டின்மீது படையெடுத்து அவர்களின் முக்கியப்  படை கேந்திரங்களை அழித்த பிறகு, தமிழக அரசியலில் தலையிடாமல்  சேரர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.  தமிழும் அவர்களின் பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போயிற்று.

Sunday, 7 February 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - தற்போதைய வடிவம்

தமிழ் பிராமியிலிருந்து ஆரம்பித்து பிறகு பல்லவ கிரந்தம், வட்டெழுத்து வழியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்து வடிவம், சோழர்கள் காலத்தில் தற்போதைய வரிவடிவத்துக்கு இணையாக மாற்றப்பட்டது.
பொ. யு. 8ம் நூற்றாண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த வடிவம் 11ம் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் பரவியது. அன்றிலிருந்து இன்றுவரை சிற்சில மாற்றங்களுடன் இப்போது பயன்பாட்டில் உள்ளது.
தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை க என்று எழுத்து அது தொடர்பான எல்லா ஒலிக்கும் பயன்படுத்தப் படுவது. ஹிந்தி முதலான மொழிகளில் க, க்க என்று ஒலிகளை மாறுபடுத்தும் எழுத்துக்கள் உண்டு. இந்தத் தமிழ் வடிவத்தில் இது மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டது.
தமிழ் மொழி எழுத்து வரிவடிவங்களின் வளர்ச்சி கீழே உள்ள படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

historyofscript

Wednesday, 3 February 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - வட்டெழுத்து

வட்டெழுத்து முறையில் தமிழில் எழுதுவது பல்லவ கிரந்தத்திலிருந்து வந்தது என்று சிலரும் தமிழ் பிராமியிலிருந்து பல்லவ கிரந்தத்துக்கு இணையாக வளர்ந்தது வட்டெழுத்து என்று சிலரும் கூறுகின்றனர். வட்ட வடிவமாக சுழித்து எழுதுவாதல்  இந்த முறை வட்டெழுத்து என்ற பெயர் பெற்றது. முதலில் வட்டெழுத்து தென் தமிழகத்தில் தான் அதிகம் பயன்பட்டிருக்கிறது . பாண்டியர்காலக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் வட்டெழுத்து முறையிலேதான் சாசனம் செய்யப்பட்டிருகிறது. வட்டெழுத்தால் எழுதப்பட்ட பாண்டியன் சேந்தனின்  மதுரை வைகை ஆற்றங்கரைக் கல்வெட்டு ஒன்றைக் கீழே காணலாம்.

vattezuthu

இந்தவகை எழுத்து முறை பொ.யு. 8ம் நூற்றண்டிலிருந்து 11ம் நூற்றண்டுவரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Tuesday, 2 February 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - பல்லவ கிரந்தம் 2

இதற்கு முன்னால் இருந்த தமிழ் பிராமியிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டு பல்லவ கிரந்தம் உருவாக்கப்பட்டது. இந்த முறையில் உயிர்மெய்யழுத்துக்கள் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டன. எழுத்துக்களின் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த வரிவடிவம் செயல்பாட்டில் வந்தது. தமிழின் இப்போதைய வரிவடிவத்தில் குறிலுக்கும் நெடிலுக்கும் பயன்படுத்தப் படும் சுழிகள் பல்லவ கிரந்தத்தில்தான் முதலில் பயனுக்கு வந்தது.
பல்லவர்களின் கடல் கடந்த வாணிகம் இவ்வகை எழுத்துக்களை  தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கொண்டு சேர்த்தது. பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளின் எழுத்து வடிவங்கள்  பல்லவகிரந்தத்தையே மூலமாகக் கொண்டவை. இந்தியாவில் மலையாள மொழியின் வரிவடிவத்துக்கும் இதுவே மூல வரிவடிவம்.

Monday, 1 February 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - பல்லவ கிரந்தம் 1

தமிழ் பிராமிக்கு அடுத்து தமிழ் வரிவடிவமாக பரவலாகப் பயன்படுத்தப் பட்டது பல்லவ கிரந்தம். அதன் பெயர் தெரிவிப்பதைப் போலவே பல்லவர்களால் ஆறாம் நூற்றாண்டு  வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது பல்லவ கிரந்தம்.
பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், முதலில் ஆட்சி செய்த பல்லவ அரசர்கள்
தமிழோடு சமஸ்கிருதத்தையும் ஆதரித்து வந்தார்கள் என்பது தெளிவு. காஞ்சியில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் கடிகையும்  இருந்தது. தண்டி எழுதிய தசகுமார சரிதம் போன்ற சமஸ்கிருத காவியங்களும் காஞ்சியிலே இயற்றப்பட்டன.  இதனால் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஏற்ற ஒரு வரிவடிவத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் பல்லவர்களுக்கு இருந்தது. இது தவிர சமயம் சார்ந்தவர்களுக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் ஏற்றவாறு ஒரு வரிவடிவத்தைத் தர வேண்டிய அவசியமும் அப்போது இருந்தது.
மேலே பார்ப்போம்