Friday 11 August 2017

களப்பிரர் யார் - 2

களப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள்  சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களும், கர்நாடகாவின் வடபகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களும் தங்கள் அரசை விரிவு படுத்த ஆரம்பித்தனர். இதனால் நெருக்கப்பட்ட கர்நாடகாவின் தென்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அரச மரபினர் தெற்குநோக்கிக் குடிபுகுந்தனர். இவர்கள்தான் களப்பிரர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு இவர்கள் முதலில் ஆட்சி புரிந்துவந்தனர் என்பதை,

அருளுடை பெரும்புகழ் அச்சுதர் கோவே
இணையை ஆதலின் பனிமதி தவழும் 
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே  

என்கிறது அமிர்தசாகரனார் எழுதிய யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலின் விருத்தியுரை மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள் (அச்சுதன் எனும் களப்பிர அரசனைப் பற்றி நான்கு செய்யுள்கள் இதில் உள்ளன). இந்த நந்தி மலையைச் சுற்றிய பகுதிகள் களவர நாடு என்று அழைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள சிக்கபல்லபூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு

"நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு" என்று உறுதி செய்கிறது (Epigraphic Carnatica Vol 10 - Chikballpur Inscription no. 21) 

பொயு பதினோராம் நூற்றாண்டின் நூலான கல்லாடம் "படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநாட வேந்தன் (கல்லாடம் - 56) என்றும்,   பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில்  "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்"  என்றும் களப்பிரர் வடுகர்கள் என்றும் கர்நாடகாவிலிருந்தே வந்தனர் என்றும் கூறுகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசர்களை அகற்றி இவர்கள் ஆட்சியைப் பிடித்தனர் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள்

அளவரிய ஆதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்  (வேள்விக்குடிச் செப்பேடு பாடல் வரி 39)

என்று குறிப்பிடுகின்றன. களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பதை, தளவாய்புரச் செப்பேடுகள்

...தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாறு கவினலங்காற் களப்பாழர் குலங்களைந்தும்

என்று உறுதிசெய்கின்றன.

இப்படி வடக்கிலிருந்து வந்த களப்பிரர் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்டனர்.  இவர்கள் சமண சமயத்தையும் (கர்நாடகாவில் அப்போது பெருமளவில் பரவி இருந்த சமயம்), பௌத்த சமயத்தையும் (உறையூரை ஆண்ட அச்சுதக் களப்பாளன் பௌத்தத் துறவியான புத்ததத்தரை ஆதரித்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் சைவ, வைணவ சமயக் கடவுளர்களையும் வழிபட்டனர்.  நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களப்பிரரே என்பதை திருத்தொண்டர் திருவந்தாதி 'கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே' என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.  ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் களப்பிர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கலியன், கலிகன்றி என்ற அவருடைய அடைமொழிகளால் அறியலாம்.தவிர


'இருளறு திகிரியோடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி'  எனும் யாப்பெருங்கலத்தின் பாடல் வரிகள் திருமாலை வழிபட்டு பெருநிலத்தைக் களப்பிரர் பெற்றதாகக் கூறுகிறது.

களப்பிரர்களின் மொழியைப் பொருத்தவரை, பிராகிருதத்தின் ஒரு பிரிவான சூரசேனி என்ற மொழியையே அவர்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். ஆனாலும், தமிழ் மொழியின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை இவர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. பொயு 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் இவர்களது ஆட்சியை நீக்கியதை

..களப்ரனெனுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பரிதிபோல் பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து   என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இது போலவே பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சோழ நாட்டில் ஆட்சி புரிந்த களப்பிரர்களை வென்றான். அதன்பின், தமிழகத்தின் சில பகுதிகளில் பாண்டிய, பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக களப்பிரர் ஆண்டனர். தமிழர்களோடு ஒன்றாகக் கலந்தும் விட்டனர்.

களப்பிரர் காலத்தை 'இருண்ட காலம்' என்று குறிப்பிடுவது, அவர்களைப் பற்றிய இலக்கிய, கல்வெட்டு, நாணய ஆதாரங்கள் பல நாட்களுக்குக் கிடைக்காததால்தான். சொல்லப்போனால், சங்க இலக்கியங்கள் கிடைக்காதவரை அதற்கு முந்தைய காலம் பற்றிய தகவல்களும் அறியப்படாமல்தான் இருந்தது. தற்போது கிடைக்கப்பட்ட பல இலக்கிய ஆதாரங்களாலும், அண்மையில் பூலாங்குறிச்சி, பொன்னிவாடி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளாலும் களப்பிரர் காலத்தில் வெளிச்சம் பாய ஆரம்பித்திருக்கிறது.  ஒரு இடத்தை மன்னன் ஒருவன் கைப்பற்றி ஆட்சி புரிவதும், அவனை வேறொரு மன்னன் வென்று அந்த இடத்தைக் கைப்பற்றிக்கொள்வதும் அவனை வேறொருவன் வெல்வதும் வரலாற்றில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். தமிழகத்தில் முதலில் மூவேந்தர்கள் ஆண்டார்கள், அவர்களைக் களப்பிரர் வென்றார்கள், அவர்களுக்குப் பின் பாண்டியர்களும் பல்லவர்களும், அதன்பின் சோழர்கள் என்று இப்படிச் செல்லும் வரலாற்றுக்கண்ணியில் களப்பிரர்களும் ஒரு கண்ணி என்பதே நாம் அறியவேண்டிய செய்தி. அவர்களின் புகழை யாரும் குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை. தமிழகத்தை ஆண்ட அரசர்களில் அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. வருங்காலத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடைய வரலாறும் செறிவடையக்கூடும்.


உசாத்துணைகள்

1. புறம் 9 -  http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l12803c0.htm
2. புறம் 367 - http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=367&file=l1280374.htm
3. The Chronology of Early Tamils - by K N Sivaraja Pillai - Page 128 onwards
4. The History of South India - K A Nilakanta Sastri - Page 121
5. களப்பிரர் - நடனகாசிநாதன், தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு
6. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி. கே. இரவீந்திரன் (விகடன் பிரசுரம்)
7. பாண்டியர் செப்பேடுகள் - டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப









Thursday 10 August 2017

களப்பிரர் யார் - 1

'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.



களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது.  பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாமூலனாரின் காலத்தை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த ராசமாணிக்கனார் போன்ற பல வரலாற்றாசிரியர்களின் கருத்து. இது போலத்தான் திருக்குறளின் காலமும் பொயுமு 3ம் நூற்றாண்டிலிருந்து பொயுமு 1ம் நூற்றாண்டு வரை என்பது ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. சிலம்பும் மணிமேகலையும் இயற்றப்பட்டது சங்கம் மருவிய காலமான பொயு 1ம் நூற்றாண்டு, இவை இயற்றப்பட்டது களப்பிரர் வருகை தந்த பொயு 2ம் நூற்றாண்டிற்கு முன்னால். சோழன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் ஆகிய அரசர்களைப் பற்றிப் பேசும் சிலம்பு, களப்பிர மன்னர்களைப் பற்றி, அப்படி ஒரு இனம் இருந்ததைப் பற்றியே எந்தக் குறிப்பையும் தராததை நாம் இங்கு நினைவுகூரவேண்டும். 

இப்படி இலக்கியத்தைப் பற்றி எல்லாக்கணக்கையும் களப்பிரர் காலத்தில் எழுதியதை, போனால் போகிறது என்று மேலே சென்றால் திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தருகிறார் ஆசிரியர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் குடித்தலைவர்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறார். ஏதோ தமிழ்வாணன் நாவலைப் படித்துவிட்டு தூங்காமல் தவித்த இரவில் இதை அவர் எழுதியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் பல்யாக சாலை முதுகுடுமியைப் பற்றிப் பார்ப்போம். ஆய்வாளர்களால் கடைச்சங்க காலத்திற்கு முற்பட்டவராகக் குறிப்பிடப்படுகிறார் இவர். புறநானூற்றின் இப்பாண்டிய மன்னனைப் பற்றி ஐந்து பாடல்கள் உள்ளன. (புறம் 6,9, 12,15, 64). இதில் 

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவினெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம் - 9) 

 என்று நெட்டிமையார் பாடுகிறார். குமரிகண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றின் மணலைக் காட்டிலும் பலகாலம் வாழிய என்று பெருவழுதியை அவர் வாழ்த்துகிறார். பஃறுளி ஆற்றைப் பற்றிய இந்தக் குறிப்பை வைத்து  அவர் கடைச்சங்க காலத்திற்கு முந்தியவர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர். தவிர கடைச்சங்கப் பாண்டிய மன்னர்களின் புகழ்பெற்றவனான தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் புகழைப் பாடும் மதுரைக் காஞ்சி பல்யாகசாலை முதுகுடுமியை நெடுஞ்செழியனின் முன்னோன் என்று குறிக்கிறது 

பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறை போக்கிய
தொல்லாணை நல் ஆசிரியர்  (மதுரைக் காஞ்சி)

பல்சாலை முதுகுடுமியைக் களப்பிரர் படுகொலை செய்த பிறகு பெருவீரனான நெடுஞ்செழியன் எப்படி  மதுரையை ஆண்டான் என்பது கட்டுரை ஆசிரியருக்கே வெளிச்சம். ஏதோ யாகம் செய்தான் என்பதற்காக ஒரு பெருவீரனான தமிழ் மன்னனை ஆசிரியர் படுகொலை செய்துவிட்டார் பாவம். 

இப்போது ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கு வருவோம். கடைச்சங்ககாலத்திற்கு மூத்தவரான பல்சாலை முதுகுடுமிக்கு நேரெதிராக, கடைச்சங்ககாலத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் இவன். புறம் 367ல் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோரோடு இணைந்து ஔவையாரால் பாடப்படும் மன்னன் இவன். இவனை யாரோ கொன்றதாக எந்த ஆதாரத்தை வைத்து ஆசிரியர் சொன்னாரோ தெரியவில்லை. சோழ வம்சம் இவனுக்குப் பின்னும் தொடர்ந்தது. முற்காலச் சோழவம்சத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் கோச்செங்கணான். புறநானூறும் ஒட்டக்கூத்தரின் மூவருலாவும் இதைப் பற்றிக்குறிக்கின்றன. இவனுடைய காலம் பொயு முதல் நூற்றாண்டு.  சேரன் கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணானை பொய்கையார் களவழி நாற்பது பாடி விடுவித்தார் என்பது வரலாறு. இந்தக் களவழி நாற்பது என்பது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. ஆக, முதுகுடுமியையும் பெருநற்கிள்ளியையும் கொன்று விட்டு களப்பிரர் ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். 

அடுத்து மகாவம்சத்தைக் குறிப்பிட்டு பல மன்னர்களின் பட்டியலை ஆசிரியர் அடுக்குகிறார். இவர்கள் எல்லாரும் களப்பிரர் என்பதற்கு என்ன ஆதாரம் என்பது தெரியவில்லை. இதில் எருமையூர், கர்நாடகாவின் நடுப்பகுதி வரைக்கும் தமிழர் பகுதியாக தடாலடியாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டின் எல்லையும் நாட்டில் அடங்கிய பகுதிகளும் தெளிவாக வகுக்கப்பட்டதை அவர் ஏனோ அறியவில்லை. 

'தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண்பூழி, பன்றி, அருவா, அதன் வடக்கு, நன்றாய சீத மலாடு, புனல் நாடு என்று பன்னிரண்டு பிரிவாக தமிழகம் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தமிழ் நிலத்தை சூழ்ந்த இடங்களாக கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம் போன்ற பகுதிகள் நன்னூல் குறிக்கிறது. ஆக கன்னடம் தமிழகத்தின் பகுதி என்று கூறுவது தவறான வாதம். அங்கிருந்து வந்த களப்பிரர் தமிழர்களே அல்ல. 

கட்டுரையை அவர் எப்படி முடிக்கிறார் என்று பார்ப்போம். 

//மகேந்திரபல்லவன் எல்லா களப்பிரப் பகுதிகளையும் கைப்பற்றி பல்லவ சாம்ராச்சியத்தை உருவாக்கினான். இந்தப் பல்லவர்களும் முதலில் பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் மகேந்திர பல்லவன் காலத்தில் சைவ சமயத்திற்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம்//

வரலாறு சொல்வது 

- களப்பிரர்களை வென்றவர்கள் பாண்டியர்கள் (ஆதாரம் வேள்விக்குடிச் செப்பேடுகள்) பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணு வடபகுதியில் ஆண்ட சில களப்பிரச் சிற்றரசர்களை வென்றார். மகேந்திரன் களப்பிரர்களோடு போர் புரியவேயில்லை. சாளுக்கியப் புலிகேசியோடு பொருதுவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. 

- பல்லவ அரசைத் தோற்றுவித்தவன், 'சிவஸ்கந்த வர்மன்'. அடுத்து வந்த அரசர்களில் ஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் ஆகியோர் உண்டு. இவர்கள் எப்படி பௌத்த மதத்தவர் ஆனார்கள்? சிம்மவிஷ்ணு விஷ்ணுவின் சிறந்த பக்தர் என்று உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மகேந்திரவர்மனும் முதலில் சார்ந்திருந்தது சமண சமயத்தை. அவனைச் சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்ற வேளாளர். 

ஆக உண்மை என்பதை பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டியிருந்த இந்தக் கட்டுரையை விடுத்து, களப்பிரர் என்பவர்கள் யார், தமிழக வரலாற்றின் அவர்கள் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

 (அடுத்து) 







Sunday 6 August 2017

சத்யபுத்திரர்கள் யார்?

தமிழ் வரலாற்றில் சங்க கால நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ள இலக்கியங்களே பெரிதும் உதவியாக இருக்கின்றன. கல்வெட்டுகளோ / செப்பேடுகளோ இன்ன பிற ஆவணங்களோ அக்காலத்தில் இல்லை. இருந்தாலும் அதிகம் அறியப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அசோகரது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட கல்வேட்டு ஒன்று பெரும் ஆய்வுக்கு உட்பட்டது.
குஜராத்தில் உள்ள கிர்நார் மலைச்சரிவில் (சிங்கங்களது சரணாலயம் இருக்கிறதே, அதே கிர்நார்தான்) அசோகரது கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. தமது அரசின் எல்லைகளை குறித்து சாஸனம் செய்திருக்கும் அவர். அரசின் எல்லைப்புற மன்னர்களாக “சோட, பாட, சத்யபுதோ, சேரபுதோ, தம்மபாணி” என்று குறித்திருக்கிறார். அசோகர் குறிக்கும் தமிழக மன்னர்களை சோட – சோழ, பாட – பாண்டிய, சேரபுதோ- சேர என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தம்மபாணி என்பது இலங்கை அரசர்களைக் குறிப்பதாகும். இதில் சத்யபுதோ யார் என்பது பற்றி குழப்பம் நிலவியது. ஏனெனில் தமிழ் இலக்கியங்களோ, வேறு ஆவணங்களோ இப்படி ஒரு மன்னர்குலம் இருப்பதை பதிவுசெய்யவில்லை. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர்களே சத்யபுத்திரர்கள் என்று சொன்னார்கள். இன்னும் சிலர், மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்யபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர். கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ் வரலாற்றாசிரியர்கள், மற்ற தமிழ் மன்னர்களோடு சேர்ந்து வருவதால், இவர்கள் ஒரு தமிழ் மன்னர் குலத்தவராகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இந்தக் குழப்பத்துக்கு முடிவாக திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் பொது வருடங்களுக்கு முன்பான முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் ப்ராமியில் இருந்த இந்தக்கல்வெட்டைக் கீழே காணலாம்.

இந்தக் கல்வெட்டில் எழுதியிருப்பது இதுதான்
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி”
அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்யபுத்திரர் பரம்பரையில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்யபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. யாருக்கு அஞ்சி இதைக் கொடுத்தான் என்று கேட்டுவிடாதீர்கள். நெடுமான் அஞ்சி என்பது அந்த மன்னனின் பெயர்.
தகடூரை ஆண்ட அதியமான்களே சத்யபுத்திரர் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியதுமட்டுமல்லாமல் அசோகரின் கல்வெட்டில் இடம்பெறும் அளவுக்கு மூவேந்தர்களுக்கு இணையாக இவ்வரசன் விளங்கினான் என்பதையும் பதிவுசெய்கிறது இந்த ஜம்பை கல்வெட்டு.