Wednesday 17 August 2022

திருமுறை கண்ட சோழன் யார்






சமீபகாலமாக ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி கவனப்படுத்தும் வழக்கம் அதிகமாக வருகிறது. அப்படி ஒன்று நேற்று கண்ணில் பட்டது. திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுபவன் ராஜராஜ சோழன் இல்லையாம். ஏனென்றால் அவனுடைய காலத்திற்கு முன்பே கல்வெட்டுகளில் பதிகம் படித்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். அவற்றை வரிசையாக அடுக்கி இந்தக் கேள்வியை ஒருவர் எழுப்பியிருந்தார். இந்த விஷயத்தில் நான் பெரிதும் மதிக்கும் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் சிறிது இடறியிருப்பதால் கொஞ்சம் விரிவாக இதைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததற்காகக் கிடைக்கும் ஒரே சான்று திருமுறை கண்ட புராணம் என்ற நூல்தான். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது. அதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையை மூடி வைத்துவிடலாம். ஏனென்றால் ஒட்டுமொத்த விவாதமும் இந்த நூலை ஒட்டியே இருக்கிறது. அந்த நூலில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

சோழவம்சத்தில் வந்த அரசன் ஒருவன் தேவாரப் பதிகம் ஒன்றைக் கேட்கிறான். அதனால் மனம் உருகி மற்ற பாடல்களையும் கேட்க நினைக்கிறான். ஆனால் யாரிடமும் மொத்தத் தொகுதியும் இல்லை (ஏதோ ஒரு புத்தகத்தின் ஓரிரு பக்கங்களைப் படித்து விட்டு முழுப்புத்தகத்தையும் தேடுவது போன்றது இது). ஒருவழியாக அவனிடம் நம்பியாண்டார் நம்பி எனும் அடியாரைப் பற்றி யாரோ சொல்கிறார்கள். திருநாரையூரைச் சேர்ந்த நம்பி, அவ்வூரின் பொள்ளப்பிள்ளையாரின் (பொல்லாப்பிள்ளையார் இல்லை. சிற்பத்தில் பொள்ளாத - செதுக்காத சுயம்புவான பிள்ளையார்) அருள் பெற்றவர். அவரிடம் சென்ற அரசன் பிள்ளையாருக்கான நைவேத்தியங்களைக் கொடுத்துவிட்டு நம்பியிடம் திருமுறைப் பாடல்கள் எங்கேயிருக்கின்றன என்ற விவரத்தைக் கேட்க வேண்டுகிறான். நம்பியும் பிள்ளையாரிடம் கேட்டு அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் சிதம்பரத்தில் இருப்பதாகக் கூறுகிறார். மன்னன் அதன்பின் சிதம்பரம் சென்றது, மூவர் சிலைகளை வரவழைத்து கோவிலில் இருந்த அறையைத் திறந்தது, செல்லரித்த சுவடிகளைத் தவிர மீதிச் சுவடிகளை எடுத்து நம்பியிடம் கொடுத்துத் தொகுக்கச் சொன்னது எல்லாம் ஓரளவுக்குத் தெரிந்த வரலாறு.

இதில் முக்கிய பாத்திரங்கள் இருவர். ஒருவர் நம்பியாண்டார் நம்பி. இன்னொருவன் சோழ அரசன். அவன் யார் என்பதுதான் கேள்வி. இதற்குப் பதில் தேடுவதற்கு முதலில் நம்பியாண்டார் நம்பியின் காலத்தை வரையறுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாம் குலோத்துங்கனின் சமகாலத்தவரும் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவருமான சேக்கிழார், சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றைக் கொண்டே அந்த நூலை இயற்றியதாகக் குறிப்பிடுகிறார்.

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்

ஆகவே நம்பியாண்டார் நம்பியின் காலம் சேக்கிழாரின் காலத்திற்கு முற்பட்டது என்பது தெளிவு. அவர் காலத்தைப் பற்றி திருமுறைகண்ட புராணம் என்ன சொல்கிறது என்று பார்த்தால்

ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்

முதலில் பத்து திருமுறைகளையும் அதன்பின் மன்னன் கேட்டுக்கொண்டதால் பதினோறாவது திருமுறையையும் நம்பி தொகுத்தார் என்கிறது. இந்தத் தொகுப்பில் ஒன்பதாம் திருமுறையில் சோழ மன்னரான கண்டராதித்தர் பாடிய திருவிசைப்பா உள்ளது. ஆகவே நம்பியின் காலம் கண்டராதித்த சோழனின் காலத்திற்குப் பிறகே என்பதும் தெளிவு. அப்படியானால் திருமுறை கண்ட சோழன் அரிஞ்சய சோழன் காலத்திலிருந்து இரண்டாம் குலோத்துங்கனின் காலம் வரை ஆட்சி செய்த ஏதோ ஒரு சோழமன்னனாகத்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆதித்த சோழனே இந்த மன்னன் என்று பண்டாரத்தார் போன்ற ஆய்வாளர்களின் முடிவு தவறே என்பதும் தெளிவாகிறது. திருமுறைகண்ட புராணத்தை மேலும் பார்த்தால்

ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்

என்று ஒரு இடத்திலும் 

மல்லல்மிகு சேனையுடன் இராசராச
மன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான்

என்று இன்னொரு இடத்திலும் ராஜராஜன் என்ற பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் சிவாச்சாரியார். ராஜராஜன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சோழ மன்னர்களில் இரண்டாம் ராஜராஜன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன். சேக்கிழாரின் காலத்திற்கே பிந்தைய காலத்தைசா சேர்ந்த அவன் நம்பியாண்டார் நம்பியின் சம காலத்தவனாக இருக்க முடியாது. இதனால், தஞ்சைப் பெரிய கோவில் அமைத்த சிவபாத சேகரனான முதலாம் ராஜராஜனே திருமுறை கண்ட சோழன் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிற்காலச் சோழர்களில் தியாகேசர் மீது பெரும் பக்தி கொண்டு பல திருப்பணிகளைச் செய்தவனும் முதலாம் ராஜராஜனே.  தவிர, நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் 

புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடுபடுத்த
குலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன்னிய புகழ்ச் சோழனது என்பர் நகுசுடர்வாள்
வலமன்னிய வெறிபத்தனுக்கு ஈந்ததொர் வண்புகழே

சிங்கள நாட்டை வென்ற சோழனின் குலமுதல்வன் எறிபத்த நாயனார் என்கிறார். இலங்கையை முதலில் வென்ற பெருமை பராந்தக சோழனுக்கு உண்டு என்றாலும், இலங்கையை முழுவதும் வென்று சோழர் ஆட்சியை நிறுவிய பெருமை முதலாம் ராஜராஜனையே சேரும். இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்காத ஆதித்த சோழன் எப்படி நம்பியின் சமகாலத்தவர் என்று சொல்ல முடியும் ?

ராஜராஜனுக்கு முன்பே பதிகங்கள் கோவிலில் ஓதப்பட்டன என்பது உண்மை. அதுபோன்று ஒரு பதிகத்தைக் கேட்டுத்தான் ராஜராஜன், மொத்தத் திருமுறைகளையும் தேட ஆவல் கொண்டான் என்பதுதான் இங்கே சொல்லப்படுவது. அவனுக்கு முன்னால் பதிகங்களே பாடப்படவில்லை என்று யாரும் சொல்லாதபோது அதை ஒரு சான்றாக எடுத்துக்கொண்டு வாதம் சொல்ல முடியாது. இதே போன்று வைணவ குரு பரம்பரையில், நம்மாழ்வாரின் பாசுரங்கள் சிலவற்றைக் கேட்ட நாதமுனிகள் திருக்குருகூர் சென்ற ஆழ்வாரின் அருளைப் பெற்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்பதும் வரலாறு. ஆழ்வார், நாயன்மார்களின் காலத்திற்குப் பிறகு கால ஓட்டத்தில் மறைந்து போய் சிற்சில பாடல்களாக மட்டுமே கிடைத்த பதிகங்களையும், பாசுரங்களையும் சோழர் காலத்தில் ஒட்டுமொத்தமாக மீட்டெடுத்துத் தொகுத்த பெருமை நம்பியாண்டார் நம்பியையும் நாதமுனிகளையும் சேரும்.

சைவ மரபில் அந்தப் பெரும்பணியைச் செய்தவன் முதலாம் ராஜராஜ சோழனே என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்ற விஷயம்.