பண்டைத் தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு உதவும் ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்று வேள்விக்குடிச் செப்பேடுகள். சங்க காலத்தைப் பற்றிய சித்திரத்தை நமக்கு அக்காலத்திய இலக்கியங்கள் அளிக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு வந்த களப்பிரர் காலத்தைப் பற்றியோ அதிலிருந்து தமிழகம் எப்படி மீண்டெழுந்தது என்பது பற்றியோ நீண்ட காலமாக ஏதும் தெரியாமல் இருந்தது. அந்தக் குறையை ஓரளவுக்கு இந்த வேள்விக்குடிச் செப்பேடுகள் போக்கின. ஆச்சரியகரமாக, வேள்விக்குடிச் செப்பேடுகளைப் பற்றிய விவரங்கள் வெளியே வந்தபோது அது பிரிட்டிஷ் ம்யூசியத்தில் இருந்தது. அதை நேரடியாகப் படித்து விவரங்களை அறிந்து கொள்ள இயலவில்லை. ஆகவே அதன் பிரதிகளையும் மசிப்படியையும் வைத்தே இந்தியத் தொல்லியலாளர்கள் விவரங்களை ஆராயவும் தொகுக்கவும் நேரிட்டது. தமிழில் இதுவரை கிடைத்த செப்பேடுகளிலேயே மிகப் பழமையானவை வேள்விக்குடிச் செப்பேடுகள் ஆகும். அழகான செய்யுள் நடையில் பாண்டியர் வரலாற்றைச் சொல்லும் இந்தச் சாசனத்தில் உள்ள சில செய்திகளை இங்கே பார்க்கலாம். இந்தச் சாசனம் பத்துச் செப்பேடுகளைக் கொண்டது. தற்காலத்திய புத்தகங்களைப் போல முதல் ஏடும் கடைசி ஏடும் உட