Wednesday 8 July 2020

உவணச் சேவல் நியமம்

உலகில் நீண்ட நெடு வரலாற்றை உடைய தொல் நகரங்களில் ஒன்று மதுரை. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான நகர் இது. நகரின் எல்லைகள் அவ்வப்போது விரிந்தும் சுருங்கியும் வந்திருந்தாலும், அதன் மையப்பகுதி அதிகமாக மாறவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரில் இரு ஆலயங்கள் தனிச்சிறப்புடையனவாகத் திகழ்ந்தன. அதில் 'மழுவாள் நெடியோன்' என்று மதுரைக் காஞ்சி போற்றும் ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அங்கே திருமாலின் கோவில் எங்கே இருந்தது என்பதை ஆராய்வோம்.




பண்டைக்காலத்தில் மதுரையின் கோட்டை தற்போது ஆவணி மூல வீதி என்று அழைக்கப்படும் வீதியைச் சுற்றியே இருந்தது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையும் சீருர், பூவின் 
இதழகத் தனைய தெருவம்; 
இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

என்ற பரிபாடலின் வரிகள் பூவின் இதழ்களைப் போல வட்டமான தெருக்கள் இருந்தனவென்றும் நடுநாயகமாக ஆலவாய் அண்ணல் கோவில் இருந்தது என்றும் விளக்குகிறது.

இந்தக் கோட்டையின் வெளிப்புறத்தில், நகரின் தென்மேற்கு மூலையில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதி அமைந்திருந்தது. இங்கே தான் திருமாலுக்குப் பெரிய கோவில் ஒன்று அமைந்திருந்தது. சிலப்பதிகாரம் 'உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்'  அதாவது கருடக் கொடி உடையோன் நியமம் என்று கூறுவது இந்தக் கோவில்தான். நியமம் என்பதற்கு கோவில் என்ற பொருள் உண்டு. 

இருந்தையூரில் அமர்ந்த பெருமானைப் பற்றிப் பரிபாடல் பாடும்போது. 

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ


அதாவது வானில் இருந்து மழை பொழிந்து, அதன்மூலம் மலையிலிருந்து நீர் பெருகி வந்து மதுரையை எதிர்கொள்ளும் ஆற்றின் துறையில் உள்ள இருந்தையூரில் அமர்ந்திருக்கும் செல்வனே என்று திருமாலைப் போற்றுகிறது இந்தப் பாடல். மேலும், இந்த ஊரில் ஒரு பக்கம் மலையும், மற்றொரு பக்கம் வயல்களும் இன்னொரு பக்கம் நகரமும் உள்ளது என்றும் அது குறிக்கிறது. இந்த வருணனைக்குச் சரியாகப் பொருந்தி வருவது அக்கால மதுரையில் புறநகரில் இருந்ததும், திருமால் அமர்ந்த கோலத்தில் அருள் செய்து வருவதும், இருந்தையூர் என்ற இடத்தில் உள்ளதால் இருந்த வளமுடையார் என்ற பெருமை பெற்றதுமான தற்போதைய கூடலழகர் கோவில் ஆகும்.





இப்போது தெற்கு மாசிவீதி, மேல மாசி வீதி சந்திப்பிலிருந்து சில அடிகள் தூரமே உள்ள இந்தக் கோவில் அக்காலத்தில் பெரும் கோவிலாக இருந்திருக்கிறது. நாயக்கர் காலத்தில் மதுரைக் கோட்டை விரிவடைந்து அதன் உள் சுவர் தற்போதைய மாசி வீதிகளை ஒட்டியும் வெளிச்சுவர் தற்போதைய வெளி வீதிகளை ஒட்டியும் கட்டப்பட்ட போது இரண்டு சுவர்களுக்கும் இடையே இந்தக் கோவில் வந்துவிட்டது. அடுத்து ஆங்கில ஆட்சியில், வடம்போக்கித் தெருக்களும், மாரட் வீதியும் வந்தவுடன் இந்தக் கோவிலின் பகுதிகள் துண்டாடப்பட்டு விட்டன. இந்தக் கோவிலின் பகுதிகளாக இருந்த சக்கரத்தாழ்வார் கோவில், ஹனுமார் கோவில், மதனகோபால சுவாமி கோவில், வீரராகவப் பெருமாள் கோவில் ஆகியவை தனிக்கோவில்கள் ஆகிவிட்டன. (பார்க்க படம்) 






தற்போது 108 திருப்பதிகளில் ஒன்றாகப் பெருமை பெற்று விளங்கும் மதுரை கூடலழகப் பெருமான் கோவிலின் வரலாறு இதுதான். மதுரை நகரில் ஆலவாய் அண்ணலின் கோவிலும் இருந்தவளமுடையாரான கூடலழகப் பெருமானின் கோவிலும் இருபெரும் ஆலயங்களாகத் திகழ்ந்தன என்பதைத்தான் மதுரைக்காஞ்சி 'ஓவுக் கண்டென்ன இரு பெரு நியமத்து' என்று சுட்டிப் பாடுகிறது. 






Thursday 2 July 2020

சிலப்பதிகாரத்தில் ஆலவாய் அண்ணலும் அம்மையும்

(சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே ஆலவாய் அண்ணலாம் சொக்கநாதரின் கோவில் பெரிதாக விளங்கியது என்ற குறிப்பு இருந்ததைச் சுட்டி ட்விட்டரில் எழுதியிருந்தேன். அப்போது மீனாட்சி அம்மனைப் பற்றிய குறிப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது அல்லவா. எனவே அதையும் சேர்த்து இங்கே எழுதியிருக்கிறேன்)



மதுரை நகருக்கு ஆலவாய் அண்ணலின் கோவிலே பிரதானம் என்பதை சிலப்பதிகாரம் இரண்டு இடங்களில் சுட்டுகின்றது. கோவலனும் கண்ணகியும் மதுரை எல்லையை அடைந்து வைகையைக் கடக்கும் முன்பே கோவிலில் இருந்து எழும் ஓசைகள் அவர்களுக்குக் கேட்கத் தொடங்கிவிடுகின்றன. இது புறஞ்சேரி இறுத்த காதையில் வருகிறது.
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலைமுரசக் கனைகுரல் ஓதையும்


நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்
” அரும் தெறற்கடவுள்,அதாவது அரிதான அழித்தல் தொழிலில் வல்ல சிவபெருமானின் அகன்ற பெருங் கோவில் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.இப்போது போலவே பெரும் கோவிலாக அது இருந்திருக்கிறது. அங்கே நான்கு மறைகளையும் அந்தணர் ஓதுகின்றனர். முனிவர்கள் மந்திரங்களை ஓதுகின்றனர்.


இது தவிர ஊர்காண் காதையிலும் முதல் கோவிலாக "நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்" என்று நெற்றியில் கண்ணுடைய ஆலவாய் அண்ணலின் கோவிலையே பிரதானமாகக் கூறுகிறார் இளங்கோ அடிகள்.





அப்போது அம்மனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்றால், கட்டுரைக் காதையில், கண்ணகி மதுரையை எரித்த பிறகு, மதுராபதித் தெய்வமாக, மீனாட்சி அம்மையாக அவள் முன் தோன்றும் சிறப்பைச் சொல்கிறார் இளங்கோவடிகள். பாடலைப் பார்ப்போம்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி
கடை எயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி

இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி 

தெய்வங்களை வர்ணிக்கும்போது பாதாதி கேசம், அதாவது அடிமுதல் முடிவரை அல்லது கேசாதிபாதம் - முடிமுதல் அடிவரை என்று இரு முறைகளைக் கவிகள் பின்பற்றுவர். இங்கே இளங்கோவடிகள் கேசாதிபாதம் என்ற முறையைக் கையாள்கிறார். 

அம்மன் எப்படி இருக்கிறாள் என்றால் சடையும் அந்தச் சடையில் பிறையும் தாங்கிய முடியினை உடையவளாக, முகத்தில் சிரிப்பு அரும்பும் போது அந்தப் பவளச் செவ்வாயில் கடைவாய்ப் பல் தெரிகின்ற தோற்றம் உடையவளாக, நிலவின் நிறத்தை உடைய முத்துப்போன்ற பற்களை உடையவளாக இருக்கிறாளாம். 

இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்

இங்கே அர்த்தநாரீஸ்வர வடிவமாக அம்மையைக் காண்கிறார் இளங்கோ. இடப்பக்கம் நீல நிறம் ஆனால் வலப்பக்கமோ ஈசனுக்குரிய பொன் நிறம். 

இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால் 
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்

இடக்கையில் தாமரையையும் வலக்கையில் மழுவையும் தாங்கியவள். வலக்காலில் கழலையும் இடக்காலில் சிலம்பையும் கொண்டவள். 


கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், 
பொன்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி


கொற்கையின் தலைவனாகவும், குமரியின் துறையை ஆள்பவனும், இமயத்தை வரம்பாக, எல்லையாகக் கொண்டவனும், பொதிகை மலையை உடையவனுமாகிய பாண்டிய குலத்தின் முதல் தலைவி என்று மதுராபுரித் தெய்வமாகிய மீனாட்சி அம்மையை வாழ்த்துகிறார் இளங்கோவடிகள். 

பாண்டியர் குலத்தின் தன்மையையும், பாண்டியனின் நீதி தவறாத முறையையும், கண்ணகிக்கு இந்தத் தீங்கு நிகழ்ந்தது ஊழ் வினையாலேதான் என்று அத் தெய்வம் கூறி கண்ணகிக்கு வழி காட்டுதல் இந்தக் காதையில் அடுத்துச் சொல்லப்படுகிறது.