Sunday 20 September 2020

ராஜராஜரின் மெய்க்கீர்த்தி - புதிய தகவல்கள்

முதலில் ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையை இங்கே படித்துவிடுங்கள். சிறிய மெய்க்கீர்த்திதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல, ராஜராஜர் பெற்ற பெருவெற்றிகளைப் பட்டியலிடுகிறது இது. 



இப்படி வெற்றிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ராஜராஜரின் ஆரம்பப் போர்களைப் பற்றி குழப்பமே நிலவுகிறது. அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதைப் போல ஆரம்ப வரியில் உள்ள காந்தளூர்ச்சாலை எது என்பதைப் பற்றிய சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை.  ராஜராஜரின் வெற்றிகளைக் குறிப்பிடும் இன்னொரு முக்கிய ஆவணமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளோ இந்தக் காந்தளூர்ச்சாலையைப் பற்றிக் கூறாமல் பாண்டியன் அமரபுஜங்கனுக்கு எதிராக அவர் அடைந்த வெற்றியோடு ராஜராஜனின் திக்விஜயத்தை ஆரம்பிக்கிறது. 


இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அண்மையில் நான் வாசித்த கல்வெட்டு ஒன்று ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை அளித்தது. கல்வெட்டு என்னவோ புதிதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியகுளம் என்று ஒரு ஏரி உண்டு. இரண்டு பருவமழைக்காலங்களிலும் மழைப்பொழிவு உள்ள இந்த மாவட்டத்தில், இந்த ஏரி அடிக்கடி உடைப்பெடுத்துக்கொண்டது. அதனால் மக்கள் ராஜராஜனிடம் முறையிட, அவனும் அந்த ஊர் கோவிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டிருந்த நிலத்தின் ஒரு பகுதியை இந்த ஏரிக்கு அணை எடுப்பதற்காக ஊர் மக்களிடம் ஒப்படைத்தான். அப்படியே அணை எடுக்கப்பட்டு உடைப்பெடுக்கும் பிரச்சனை தீர்ந்தது. இதை அந்த ஏரியின் கரையில் உள்ள ஒரு கல்லில் கல்வெட்டாகப் பொறித்துக் கொடுத்திருக்கிறான் ராஜராஜன். அந்தக் கல்வெட்டின் பகுதிகள் இங்கே


இது வழக்கமாகச் செய்கிற விஷயம்தான் என்றாலும் இந்தக் கல்வெட்டின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள ராஜராஜனின் மெய்க்கீர்த்தி ஒரு புதிய விஷயத்தைக் கொண்டுள்ளது. மெய்க்கீர்த்திகள் எல்லாக் கல்வெட்டுகளின் ஆரம்பத்திலும் குறிப்பிடப்படுவது வழக்கம்தான் என்றாலும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரிகள் மற்ற கல்வெட்டின் வரிகளோடு சிறிதே மாறுபட்டுள்ளன. அது என்னவென்றால் கங்கபாடியும், நுளம்பபாடியும், தடிகைபாடியும் என்ற வார்த்தைகளுக்குப் பிறகு வரும் “குடமலை நாட்டு கோவில் பள்ளியகமும்” என்ற வார்த்தைகள்தான். இது வேறெங்கும் காணப்படுவதாகத் தெரியவில்லை. குடமலை நாடும் என்பதோடு அந்த வெற்றிச் செய்தி முடிந்துவிடும். இங்கே குடமலை நாட்டு கோவில் பள்ளியகம் என்று குறிப்பிடப்படும் பகுதி எது? 


பள்ளி என்றால் நகரம், அரண்மனை என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ஆக கோவில் நகரம் ஒன்றை ராஜராஜன் வென்றிருக்கிறான் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட கோவில் நகர் எது?

இதற்கு விடைகாண ராஜராஜனின் ஆரம்ப வெற்றிகளைக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் செய்திகளைப் புரட்டிப் பார்த்தேன். சோழர்களைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதிய பண்டாரத்தாரும் நீலகண்ட சாஸ்திரிகளும் இந்த வெற்றிகளைப் பொருத்தவரையில் பல இடங்களில் வேறுபடுகின்றனர். பண்டாரத்தார் சேர மன்னனின் மீது ராஜராஜன் படையெடுத்து அடைந்த வெற்றிதான் காந்தளூர்ச்சாலை என்கிறார். ஆனால் இது தவறான செய்தி என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் இந்தச் சாலை இருந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஆய் குல வேளிர். அவர்கள் பாண்டியர்களோடு நெருங்கிய உறவு பூண்டவர்கள். தவிர இந்தச் செப்பேடு குறிப்பிடும் விழிஞம் துறைமுகம் பொயு 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குள் வந்துவிட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே பாண்டியன் அமரபுஜங்கனை எதிர்த்து வெற்றி பெற்ற போர்களில் ஒன்றாகவே விழிஞம் வெற்றி இருந்திருக்கிறது. அப்போது அவனுக்குத் துணை வந்த ஆய் குல மன்னர்களை வெல்லவே காந்தளூர்ச்சாலை அழிக்கப்பட்டது என்று நிறுவியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். 

ராஜரானுடைய சமகாலத்தவனான சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனின் தென் எல்லையாக கோட்டயம் அருகில் உள்ள பந்தனம் திட்டாதான் இருந்தது என்பதால் இன்னும் தெற்கில் உள்ள காந்தளூர்ச்சாலை சேரனுக்கு எதிரான போரில் அழிக்கப்பட்டது என்பது சரியானதல்ல என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அப்படியிருந்தால் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் பாண்டியனையும் சேரனையும் வென்று கொண்டு வந்த பண்டாரம் என்று குறிப்பிடப்படுவது எந்த வெற்றிகள் ? சேரனை எதிர்த்துப் போர் எப்போது நடந்தது என்று ஆராயவேண்டியிருக்கிறது. 

இதற்கான விடையை பிற்காலத்தில் வந்த ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் ஒட்டக்கூத்தரின் மூவர் உலாவும் அளிக்கின்றன.  கலிங்கத்துப் பரணி 

சதய நாள் விழா உதியர் மண்டிலம்
தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதயபானு ஒத்து உதகை வென்றகோன்

என்று ராஜராஜனைப் புகழ்கிறது. கூத்தர்பெருமானோ

தூதர்க்காப் பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோன்

என்று விக்கிரமசோழன் உலாவிலும் 

ஏறிப்பகலொன்றில் எச்சுரமும் போய் உதகை
நூறித் தன் தூதனை நோக்கினான்

என்று இரண்டாம் குலோத்துங்கன் உலாவிலும் 

மதகயத்தால் ஈரொன்பது சுரமு மட்டித்து
உதகையைத் தீயுய்த்த உரவோன்

என்று இரண்டாம் ராஜராஜன் உலாவிலும் முதலாம் ராஜராஜனைப் புகழ்கிறார். 

இங்கே கூறப்படும் நிகழ்வு என்ன என்று பார்த்தால், ராஜராஜன் அனுப்பிய தூதனை என்ன காரணத்தாலோ சேரன் பாஸ்கர ரவிவர்மன் சிறையில் அடைத்துவிட்டான். இந்த அடாத செயலைத் தண்டிப்பதற்காக உதகை மீது படையெடுத்து அவனை வென்றான் ராஜராஜன் என்று இரு புலவர்களும் கூறுகின்றனர். இந்த உதகை என்பது நாகர்கோவில் அருகில் உள்ளது என்று பண்டாரத்தார் குறிப்பிடுவது தவறான செய்தி. ஏற்கனவே தாம் கைப்பற்றிய பகுதிகளில் மீண்டும் ஏன் ராஜராஜன் படையெடுக்க வேண்டும். அங்கே எப்படி தூதனைச் சிறை செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. தவிர இந்தப் பகுதிகள் சேரநாட்டு எல்லைக்குத் தெற்கில் இருந்தன என்று ஏற்கனவே பார்த்தோம்.

இன்னும் சிலர் இந்த உதகை சேரர் தலைநகரான மகோதை (கொடுங்கோளூர்) என்று கூறுகின்றனர். இதற்குச் சாத்தியம் இருந்தாலும் மாற்று நாட்டு மன்னன்  தலைநகரம் வரை சென்று தான் பெற்ற வெற்றியை ஏன் தன்னுடைய மெய்க்கீர்த்தியில் ராஜராஜன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவனோடு சேர்ந்து பல போர்களில் ஈடுபட்ட அவன் மகனான ராஜேந்திரனும் இந்த வெற்றியைப் பற்றி தன்னுடைய செப்பேடுகளில் (திருவாலங்காடு, ஆனைமங்கலம் போன்ற) ஏன் குறிப்பிடவில்லை என்பதும் முக்கியமான கேள்வி. அடுத்ததாக, கூத்தர் பதினெட்டு (ஈரொன்பது) காடுகளை அழித்து ராஜராஜன் உதகையை வெற்றிகொண்டான் என்று கூறுகிறார். மகோதைக்குச் செல்ல ஏன் பதினெட்டு காடுகளை அழிக்கவேண்டும் ? பாலக்காட்டுக் கணவாய் வழியாக எளிதாக சேரநாட்டில் நுழைந்துவிடலாமே. 

இப்போது சாஸ்திரியார் என்ன கூறுகிறார் என்று பார்த்தால், இந்த உதகை என்பது குடகு நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு இடம் என்று கூறுகிறார் (சோழர்கள் ப-230). இந்த இடம் சேரமன்னனின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. அதற்கு அருகில்தான் தற்போது உதகமண்டலம் என்னும் ஊட்டி நகரும் அமைந்திருக்கிறது. ஆகவே உதகைக் கோட்டை குடகு மலைக்கு அருகில்தான் இருந்திருக்கிறது. அங்கே தான் ராஜராஜன் அனுப்பிய தூதனும் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறான். அடர்ந்த காடுகள் உள்ள இந்தப் பகுதியில்தான் பதினெட்டுக் காடுகளை அழித்து உதகையை வெற்றிகொண்டதாக மூவருலா கூறுகிறது. இதுவே குடமலை வெற்றியாகும். அப்போது குடமலைக் கோவில் பள்ளியகம் எங்கே இருக்கிறது?   குடகு மண்டலப் பகுதியில் வயநாட்டிற்கு அருகில் திருநெல்லி என்ற பிரசித்தி பெற்ற தலம் இருக்கிறது. பாஸ்கர ரவிவர்மனின் காலத்தில் மிகச்சிறந்த நகராக இது விளங்கியிருக்கிறது. இந்தத் தலத்திற்கு பாஸ்கர ரவிவர்மன் விடுத்த நிவந்தங்கள் இரண்டு செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்த கோவிலும் நகரமும் சேர்ந்த இந்த இடமே கோவில் பள்ளியகம் என்று அழைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த வெற்றியே குடமலை நாட்டுக் கோவில் பள்ளியகம் என்று கன்னியாகுமரி பெரியகுளம் மெய்க்கீர்த்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. 


சேரமான் பாஸ்கர ரவிவர்மனுக்கு எதிராக தன்னுடைய தூதனைக் காப்பதற்கு ராஜராஜன் போர்புரிந்த இடம் உதகைக் கோட்டையும் இந்த திருநல்லித் தலமும் ஆகும். பிற்பாடு ராஜேந்திரனுடைய தலைமையில் மீண்டும் குடகு நாட்டிற்குப் படையெடுத்து வந்து கொங்காள்வானை வென்றதெல்லாம் தனிக்கதை. இப்படி ராஜராஜன் பெற்ற ஒரு முக்கிய வெற்றியை சத்தமில்லாமல் தன்னுள்ளே ஒளித்து வைத்திருக்கிறது இந்தக் கல்வெட்டு. 

உசாத்துணைகள்

1. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

2. பிற்காலச் சோழர்கள் - சதாசிவப் பண்டாரத்தார்

3. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்

4. மூவருலா - ஒட்டக்கூத்தர்

5. திருநெல்லி தல வரலாறு - http://thirunellitemple.com/history.php

6. கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் - தொகுதி 6

7. South Indian Inscriptions Volume 2

படங்கள் நன்றி : சதீஷ் பாதிரிமங்கலம் 







Friday 4 September 2020

கிண்ணிமங்கலம் தெரிவிக்கும் வரலாற்றுச் செய்திகள்

கீழடியை விட கிண்ணிமங்கல ஆய்வுகள் முக்கியமானது, அது புதிய வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தப்போகிறது என்று பலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அது இப்போது உண்மையாகிவிட்டது (அது அவர்கள் நினைத்தபடிதானா என்பது வேறு விஷயம்). என்ன மாதிரியான செய்திகள் இப்போது வெளிவந்திருக்கின்றன என்பதை ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம். 

முதலில் கிண்ணிமங்கலம். மதுரைக்கு அருகே, உசிலம்பட்டி சாலையில் வடபழஞ்சியை அடுத்து உள்ள கிராமம் இது. இந்த கிராமத்தில் ஏகநாத சுவாமியின் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஜூலை மாதம் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு துண்டுக் கல் தூணும் சில பொருட்களும் கிடைத்தன. அந்தத் துண்டுக் கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களில் "எகன் ஆதன் கோட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுக் கல்வெட்டு இந்தப் படத்தில் உள்ளது.


இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், தமிழ் பிராமி எழுத்துகளில் 'எ' என்ற எழுத்து |> போன்று முக்கோணத்தைத் திருப்பி வைத்தது போல இருக்கும். இதன் நடுவே ஒரு புள்ளி வைத்துவிட்டால் அது 'ஏ'காரமாக ஆகிவிடும். காலப்போக்கில் இந்தப் புள்ளி தேய்ந்து இருக்கலாம் என்பதை வைத்து இதை 'ஏகன் ஆதன் கோட்டம்' என்று படியெடுத்தனர். எழுத்தமைதியை வைத்து இந்தக் கல்வெட்டின் காலம் பொயுமு 2-1 நூற்றாண்டுகளாக இருக்கலாம் என்பதையும் கணித்தனர்.  ஆதன் என்பதற்குத் தமிழில் தலைவன் என்று பொருள். ஏகம் என்பது வடமொழியில் ‘ஒன்று’ என்பதைக் குறிக்கும். கோட்டம் என்பது இறைவன் உறையும் இடமான கோவில். 'கோழிச் சேவல் கொடியோன் கோட்டம்' என்று சிலப்பதிகாரம் கூறுவதை அறிந்திருப்போம்.  ஆக, ஏகன் ஆதன் கோட்டம் என்பது, ஒரே தலைவனாக இந்த மடத்தைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படும் இறைவன் கோவில் உறுதியாயிற்று. 

அந்த இறைவன் யார் என்பதை அறிய, இந்த ஆய்வில் கிடைத்த மிக முக்கியமான பொருளான சிவலிங்கம் உதவி செய்தது. இன்றும் சைவ மடமாக இருக்கும் இந்தக் கோவில் சிவன் கோவிலாக இருந்ததை இங்கே கிடைத்த சிவலிங்கம் தெளிவுபடுத்தியது. 





இதை மேலும் வலுப்படுத்தியது அங்கே கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று. அதில் 'இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறையிலி என்றால் வரியில்லாத நிலம். ‘ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி’ என்று சொல்லப்படும் இந்தப் பள்ளிப்படை மண் தளிக்கு, அதாவது மண்ணால் அமைக்கப்பட்ட இந்தக் கோவிலுக்கு வரியில்லா நிலம் அளித்திருக்கிறார்கள். இந்தக் கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணித்தார்கள். அக்காலத்தில் குடைவரைக்கோவில்களும் மண்ணால் ஆன கோவில்களுமே பெருமளவு இருந்தன. அப்போதுதான் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கற்றளிகள், அதாவது கல் கோவில்கள் பெருமளவு கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலம். இங்கே பள்ளிப்படை என்று குறிப்பிடப்பட்டதால், இது பள்ளிப்படைக் கோவில் என்பதும் தெளிவாயிற்று. பள்ளிப்படை என்பது சிவ தீக்ஷை பெற்றவர்களின் சமாதியில் கட்டப்படும் கோவில். அந்தச் சமாதியின் மேலே சிவலிங்கத்தை வைத்துப் பூஜிப்பது வழக்கம். ஆகவே இது பள்ளிப்படையான ஒரு மண் கோவிலாக இருந்தது என்பது தெளிவாயிற்று. ஆனால், இதற்கு இறையிலி நிலம் 'ஈந்தது' யார் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. 

அதன்பின் தமிழக தொல்லியல் துறை மேலும் ஆய்வுகள் (19-08-2020) மேற்கொண்டு, நேற்று ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. மேற்சொன்ன இரு கண்டுபிடிப்புகளையும் உறுதி செய்த அறிக்கை மேலும் பல தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அவை என்ன ?


வட்டெழுத்துக் கல்வெட்டு பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதிசெய்யப்பட்டது. பொயு 8ம் நூற்றாண்டு மதுரை இடைக்காலப் பாண்டியர் ஆட்சியில் இருந்தது. அவர்களில் ஒரு அரசன் தான் இந்த இறையிலி தானத்தை அளித்திருக்கவேண்டும். அவன் யார் என்ற கேள்விக்கு அங்கே கண்டெடுக்கப்பட்ட பொயு 1722ஐச் சேர்ந்த விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் கல்வெட்டு விடையளித்தது. இந்தமுறை நடைபெற்ற ஆய்வில் வெளிப்பட்ட இந்த பலகைக் கல்வெட்டு 43 வரிகளைக் கொண்டது. மதுரை நாயக்கர் பரம்பரையில் 12ம் ஆட்சியாளர் இந்த விஜயரங்க சொக்கநாதர். இராணி மங்கம்மாளின் பேரர்.  இவர் ஏற்கனவே பாண்டியர்களால் வழங்கப்பட்ட இறையிலியை உறுதிசெய்து சாசனம் செய்துகொடுத்திருக்கிறார். எப்படி வேள்விக்குடிச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மானியங்களை இடைக்காலப் பாண்டியர் காலத்தில் மீண்டும் சாசனம் செய்து கொடுத்ததோ, எப்படி ராஜராஜன் கொடுத்த அறத்தை அவன் மைந்தன் ராஜேந்திரன் ஆனைமங்கலச் செப்பேடுகளாக மீள் சாசனம் செய்து கொடுத்தானோ, அப்படி மீள்சாசனம் செய்து கொடுக்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு இது. அதன் முக்கியமான சில வரிகளைப் பார்ப்போம். 

..... புனர்பூச சுபதியாக சுபதினத்தில்

சமூகம் மீனாட்சி நாயக்கரவர்கள் ஆகோசேத்திரத்தில்

மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி சன்

னதியில் கிண்ணிமங்கலம் ஶ்ரீ லஶ்ரீ

ஏகநாத குருமடத்தார்க்கு தன்ம சிலா சாசனப் பட்டயம்

எழுதிக்குடுத்தபடிக்கு 

இந்தச் சாசனம் மீனாட்சியம்மன் கோவிலில் செய்யப்பட்டிருக்கிறது. மீனாட்சியின் பரமபக்தர்களான நாயக்கர்கள் சைவ மடத்திற்கு அங்கே மானியம் அளித்ததில் வியப்பில்லை. அடுத்து



....இம்மடத்தார்க்கு பாத்தியப்பட்ட

நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு

திரல் விடையாகவும் நெடுஞ்சடையன் பரா

ந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்ட

டபடி குடும்பத்தாரின் வாரிசுகளால்

ஆதாயம் கையாடிக் கொண்டு இவர்களின்

குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம்

செய்து வரவும்

மேற்குறிப்பிட்ட வரிகளின் மூலம் இந்தச் சாசனத்தை முதலில் செய்து தந்தது பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் என்று தெளிவாகத் தெரிகிறது. நெடுஞ்சடையன் 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னன். அவன் ஆட்சிக்காலத்தில்தான் திருப்பரங்குன்றம், ஆனைமலை போன்ற பல குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டு அவற்றிற்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. வேள்விக்குடி, ஶ்ரீவரமங்கலம் போன்ற செப்பேடுகளை அளித்தவனும் அவனே. இந்தப் பள்ளிப்படைக் கோவிலுக்கு இறையிலியாக மானியம் அளித்ததும் அந்த மன்னனே என்பது தெளிவாகியது. மேலும்

......பரம்பரை சம்பி

ரதாயப்படி பள்ளிப்படை சமாது வைத்து வ

ணங்கி வரவும் 

என்ற வரிகள் இந்த மடத்தைச் சேர்ந்த குருக்களின் சமாதிகள் இங்கே வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கிறது. பெரிய மடங்களில், அந்த மடத்தைச் சேர்ந்த ஆச்சாரியர்கள், ஆதீனங்கள், குருமார்களின் சமாதிகள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். இதுவும் அதே போன்ற வழக்கத்தை அனுசரிக்கும் மடம் போலும். 

இடைக்காலப்  பாண்டியர்கள் தங்கள் முன்னோர்களான பாண்டியர்கள் கொடுத்த அறத்தையும், ராஜேந்திரன் தன் தகப்பன் கொடுத்த அறத்தையும் மீள் சாசனம் செய்ததில் வியப்பில்லை. ஆனால், நாயக்க மன்னர் ஒருவர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டியர் ஒருவர் செய்து கொடுத்த அறத்தை மீள்சாசனம் செய்து கொடுத்ததுதான் போற்றத்தகுந்த விஷயம். 

மேலும் இந்த நாயக்கர் கல்வெட்டு

....இத்தன்மத்துக்கு

விகாதம் செய்த பேர் சிவசன்னதியில் விளக்கை 

நிறுத்தியவன் போற பாவத்துக்குள்ளாவான்

என்றும் எச்சரிக்கிறது. ஆகவே சிவ அபராதத்திற்கு ஈடானது இந்த மடத்திற்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது என்று கூறுகிறது இந்தக் கல்வெட்டு.

இந்தக் கல்வெட்டைத் தவிர 1942ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சிவ, நந்தி அடையாளங்கள் இது சைவப் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதை மேலும் உறுதி செய்கிறது. 



ஆகவே, இது வரை நடந்த ஆய்வுகளிலிருந்து நாம் தெரிந்து  கொள்ளும் தகவல்கள் சுருக்கமாக : 

- தமிழகத்தின் மிகப் பழமையான, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ மடம் இங்கே இயங்கி வந்திருக்கிறது. அந்த மடத்தின் குருமார்களின் பள்ளிப்படைக் கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது. 

- இந்த மடத்திற்கு பாண்டியன் நெடுஞ்சடையன் இறையிலியாக நில மானியத்தை அளித்திருக்கிறான் (பொயு 8ம் நூற்றாண்டு)  

- அந்த மானியத்தை 18ம் நூற்றாண்டில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் உறுதிசெய்து மீள்சாசனம் செய்து கொடுத்திருக்கிறார். 

நம்முடைய சானதன தருமமும் சிவலிங்க வழிபாடும் மகான்களின் சமாதியை பள்ளிப்படைக் கோவிலாக அமைத்துப் போற்றும் வழக்கமும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்ற உண்மையை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறது இந்தக் கிண்ணிமங்கல ஆய்வுகள்

விஷயம் இப்படி இருக்க, இந்தச் செய்திகளையெல்லாம் வெளியிடாமல் 'சாருக்கு ஒரு ஊத்தப்பம்' என்பது போல 'கிண்ணிமங்கலத்தில் நீத்தார் நினைவுத்தூண் கண்டுபிடிப்பு' என்று ஒரு வரியோடு ஊடகங்கள் நிறுத்திக்கொண்டுவிட்டன.   



படங்கள் : நன்றி தொல்லியல் துறை