சென்ற பகுதியில் மாலிக்கபூரின் படையெடுப்பைப் பற்றிப் பார்த்தோமல்லவா. அந்தப் படையெடுப்பின் விவரத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, வசாப், பார்னி போன்றவர்கள் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பலர் சொல்வது போல், ஶ்ரீரங்கத்தில் மாலிக்கபூர் நிகழ்த்திய சேதங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. சமயபுரம் வரை வந்த மாலிக்கபூர் ஶ்ரீரங்கத்தை விட்டு வைத்திருக்க முடியாது என்றாலும், "மற்ற கோவில்களையும் கொள்ளையடித்தான்" என்று அமீர் குஸ்ரூ ஒரே வரியில் முடிப்பதால், கோவிலில் பெரும் கொள்ளை நடந்திருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளலாம். இதே போலத்தான் மதுரையிலும். செல்வங்கள் கொள்ளை போயினவே தவிர கோவிலுக்கு அதிகம் சேதமில்லை என்றே நாம் கருதலாம். மாலிக்கபூர் சிதம்பரம் கோவிலைச் சேதப்படுத்திய விவரங்கள் மட்டுமே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவன் ராமேஸ்வரம் வரை சென்றான் என்பதற்குக் கூட தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் மாலிக்கபூரின் படையெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாண்டியப் பேரரசை வலுவிழக்க வைத்துவிட்டது. மாலிக்கபூர் அப்பால் சென்றவுடன் வீரபாண்டியன்