தங்களுக்கு அரசியல் லாபம் ஏதாவது தேவையென்றால் ராஜராஜ சோழனை சீண்டுவது தமிழகத்தில் சிலரின் வழக்கம். அப்படி தமிழகத்தேர்தலை ஒட்டி (??!!) எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
அதன் லிங்க் இதோ
முதலில் அதில் உள்ள அபத்தங்களைப் பார்த்துவிடுவோம்.
//இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்!//
'காந்தளூர்ச்சாலை கலம் அறுத்து' அந்தக் கல்விக்கூடத்தை ராஜராஜன் அழித்துவிட்டால் பிறகு ஏன் மற்ற சோழ மன்னர்கள் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் காந்தளூர்ச்சாலை கலமறுத்ததைக் குறிப்பிடுகின்றன.
"குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தான்" என்கிறது சடையவர்மன் பராந்தக பாண்டியனின் மெய்க்கீர்த்தி. ஏன் இப்படி ஒரு 'கல்விக்கூடத்தை' ஏன் 'போர் செய்து' பலரும் அழிக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அடுத்து
//இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன்//
நந்திவர்ம பல்லவனின் காலம் பொயு 8ம் நூற்றாண்டு. பெருமாளை வைத்ததை எதிர்த்து தில்லை வாழ் அந்தணர் கலகம் செய்தார்களாம். விஜயாலயன் முதல் தொடர்ந்து சைவர்களாக, சிவபாத சேகரர்களாக, சிவசரண சேகரர்களாக இருந்த பெருமன்னர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் நானூறு ஆண்டுகள் கழித்து பதவிக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன் அதைச் செய்தானாம். எப்படி இருக்கிறது கதை. ஆனால் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை தில்லை வாழ் அந்தணர்கள் வழிபட்டனர் என்று வைணவ ஆழ்வார்களே குறிப்பிடுவதில் இந்தச் சாயம் வெளுத்து விடுகிறது.
"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம் (பெரிய திருமொழி)
“தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்” (குலசேகர ஆழ்வார்)
//சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள்.//
இதற்கெல்லாம் ஆதாரங்கள் என்ன என்று கேட்கக்கூடாது. மூச். வீரநாராயண ஏரியை வெட்டிய ராஜாதித்தர் குறுகிய காலத்திலேயே மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிரான தக்கோலப்போரில் மரணமடைந்துவிட்டார் என்று பொன்னியின் செல்வன் வாசகர்களுக்குக் கூடத்தெரியும். அடுத்து பட்டத்திற்கு வந்தது பரம சைவரான கண்டராதித்தர். அவர் காலத்தில் சேரர்கள் இங்கே குடியேறினார்களாம். மேலும்
//எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள்//
ஒரு வழியாக பாலகுமாரனின் உடையார் கதைக்கு வந்துவிட்டார். கதைக்கு எதற்கு ஆதாரம் ? ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சேர நாட்டவர் என்பதற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.
"பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும். ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம்"