இன்று சதயத்திருநாள். இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவரான ராஜராஜனின் பிறந்த நாள். தமிழகத்தின் ஆகச் சிறந்த மன்னனாக அவரைச் சந்தேகமில்லாமல் அறிவிக்கலாம். அப்படி அவர் செய்த செயற்கரிய செயல் என்ன? மற்ற மன்னர்களிடமிருந்து, ஏன் கடல்கடந்து வெற்றிகளைக் குவித்த அவருடைய மகன் ராஜேந்திரனிடமிருந்து கூட ராஜராஜன் மாறுபட்டது எப்படி? பண்டைக்கால (சிறந்த) மன்னர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம், அவர்கள் முடிசூடினார்கள், எதிரிகளை போர்க்களத்தில் வீழ்த்தினார்கள், மக்களைக் கொடுமைப்படுத்தாமல் வாழ்ந்தனர், கோவில்களைக் கட்டினார்கள், குளங்களை வெட்டினார்கள் என்பதுதான். ராஜராஜனும் இவை எல்லாவற்றையும் செய்தார். ஆனால் அவருடைய செயல்முறையின் வேறுபாடே அவரை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது. முதலில் ராஜராஜன் அரியணை ஏறிய விதத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் தமையனான ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தான். சோழ வம்சத்தின் மற்றொரு கிளையின் வாரிசான மதுராந்தகத்தேவன் அரியணை ஏறும் ஆசை கொண்டிருந்தான். இருந்தாலும், அருள்மொழிவர்மனே தங்களது மன்னராக வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதினார்கள். அவர் நி