Friday 5 November 2021

சிலப்பதிகாரத்தின் காலம் - 3



சென்ற பகுதியில் கோவலனும் கண்ணகியும் மே 8, 130ம் ஆண்டு புறப்பட்டு கவுந்தியடிகளோடு மதுரை சென்றார்கள் என்று பார்த்தோம். ஆங்காங்கே தங்கி அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி அவர்கள் உறையூர் வந்து அங்கே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து மதுரை செல்லும் வழிகளைப் பற்றிக் கேட்கின்றனர். அவன் கொடும்பாளூரிலிருந்து சிவபெருமானின் சூலாயுதம் போல மூன்று வழிகள் மதுரை நோக்கிச் செல்கின்றன என்று கூறுகிறான். ஒன்று தற்போதைய ரயில் பாதை, அதாவது திண்டுக்கல் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழி, இரண்டு நத்தம், திருமாலிருஞ்சோலை வழியாக மதுரை செல்லும் வழி. மூன்று மேலூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதைய தேசிய நெடுஞ்சாலை). இதில் மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்து பயணிகள் செல்கின்றனர். இடைப்பட்ட காலக்குறிப்புகள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 11, 130

புகாரிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் பாண்டிய நாட்டில் உள்ள ஒரு பாலை நிலத்தை அடைகின்றனர். இது மேலூருக்கு அருகில் உள்ள பகுதியாக இருக்கக்கூடும். இன்னும் இது வறண்ட நிலமாகவே உள்ளது. காலை 'செங்கதிர் வெம்மையின் தொடங்க', வெய்யில் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள ஐயையின் கோட்டத்தை அடைகின்றனர். இது எந்தக் கோவில் என்பது ஆய்வுக்குரியது. அங்கே வேட்டுவ வரி நிகழ்கின்றது. மாலை வருகிறது. அதன்பின் கவுந்தியடிகள் கண்ணகியிடம் ஆறுதல் சொல்லத்தொடங்கி " வேனில் திங்களும் வேண்டுதி" என்கிறார். அதாவது இளவேனிலின் பொழுது கணவனைப் பிரிந்து இருந்த உனக்கு இந்த முதுவேனில் சந்திரன் வேண்டும் போலும் என்கிறார். இதிலிருந்து அது முதுவேனில் என்பது தெளிவாகிறது (ஆனி -ஆடி முதுவேனில் காலம்). இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால் 'குடும்பத்தில் குழப்பம்' வந்துவிடும் என்பதைக் கண்ட கோவலன் சரி கிளம்பலாம் என்று சொல்கிறான். இரவு முழுவதும் நடந்து காலையில் 

"கான வாரணம் கதிர் வரவு இயம்ப" ....கோழி கூவும் வேளையில் "மறைநூல் வழக்கத்துப் புறைநூல் மார்பர் உறை பதி" - அந்தணர்கள் வாழும் ஒரு ஊரைச் சென்று அடைகின்றனர். வேதபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட திருவாதவூராகவே இது இருக்கக்கூடும். 

ஜூலை 12, 130

கண்ணகியையும் கவுந்தியடிகளையும் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு கோவலன் நீர்க்கடன்களை அளிக்க நீர்நிலை ஒன்றைத் தேடிச் செல்கிறான். அங்கே கௌசிகன் என்ற வேதியனைப் பார்க்கிறான். 'பாசிலைக் குருகின் பந்தலைப் பொருத்தி' - குருக்கத்தி இலைகளால் ஆன நிழலில் இருவரும் உரையாடுகின்றனர். பூக்களெல்லாம் உதிர்ந்ததால் குருக்கத்தி உள்ள நிழல், அதாவது முதுவேனில் என்பது இவ்வரிகளால் மேலும்  உறுதியாகிறது. அதன்பின் கோவலன் திரும்பி வந்து பாணர்களோடு அன்றைய பொழுதைக் கழிக்கிறான். அவர்களிடம் மதுரை எவ்வளவு தொலைவு என்று கேட்க, நகரின் வாசம் இப்போது காற்றில் வருவதால் அருகில்தான் இருக்கிறது என்று பாணர்கள் கூற. 'முன் நாள் முறைமையின் இருந்தவ முதல்வியோடு' - முதல் நாளைபோலவே இரவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலையில் மதுரையின் எல்லையை அடைகின்றனர். 

ஜூலை 13, 130

ஊருக்கு வெளியில் உள்ள புறஞ்சேரி ஒன்றில் மூவரும் தங்குகின்றனர். சூரியன் உதிக்கிறது. கோவலன் கவுந்தியடிகளிடம் அனுமதி கேட்டு மதுரையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான். இங்கே இரண்டு குறிப்புகள் வருகின்றன.

"குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்" அதாவது மேல் திசையிலிருந்து காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கொடிகள் அசைகின்றன. ஆகவே தென்மேற்குப் பருவக்காற்று வேகமாக வீசும் ஆடி மாதம் அது என்பது தெளிவாகிறது. மேலும் 

"வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர

ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்"

என்கிறார் இளங்கோவடிகள். வேனில் காலத்தில் அரசன் வேறு இடத்திற்குச் செல்லவிருக்கின்ற கடை நாள், அதாவது முதுவேனிலின் கடைசிப் பகுதி என்கிறார். ஆடி மாதக் கடைசி இது என்பது இந்த ஜூலை 13ம் தேதிக்குப் பொருந்தி வருகிறது. ஆவணி அவ்வருடம் 23ம் தேதி பிறந்துவிடுகிறது  

மாலை வீடு திரும்புகின்ற கோவலனையும் கண்ணகியையும் ஆயர் குல மகளான மாதரியிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கிறார் கவுந்தியடிகள். மாதரி ஒரு வீட்டை அவர்களுக்கு ஒதுக்குகிறாள். கண்ணகி இரவு உணவு சமைத்துப் போடுகிறாள். அன்று இரவே கோவலன் சிலம்பை விற்கப் புறப்படுகிறான். பொற்கொல்லன் வஞ்சம் செய்ததும் அதனால் கோவலன் இரவோடு இரவாகப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்த விஷயம்.

ஜூலை 14, 130

காலையில் கண்ணகியிடம் செய்தி சொல்லப்படுகிறது. கோவலனைப் பார்த்துக் கதறுகிறாள். அதன்பின் அவன் உயிர்பெற்று வானுலகம் செல்கிறான். பிறகு கண்ணகி பாண்டியன் அரண்மனை செல்கிறாள். அங்கே வழக்கு நடைபெறுகிறது. உண்மை தெரிந்து பாண்டியனும் பாண்டிமாதேவியும் உயிர் துறக்கின்றனர்.  கண்ணகி வஞ்சினம் உரைக்கிறாள். அந்தநாள் தான் 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து, அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளி வாரம்

இது ஜூலை 14, 130க்கு பொருந்தி வருவதைப் பார்த்தோம். ஆகவே இதுவரை காலக்கணக்குச் சரியாகவே வருகிறது. 

இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பொயு 130ல் நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இது சிலம்பின் காலத்தை சுட்டியது மட்டுமல்லாமல், சங்க காலப் பாண்டியர் வம்சத்தின் கால வரிசையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்  


சிலப்பதிகாரத்தின் காலம் - 2

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அக்காப்பியத்தில் வந்த வானியல் குறிப்பை வைத்து மதுரை எரிக்கப்பட்ட நாள் ஜூலை 14, 130 என்பதையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தனி மரம் தோப்பாகாது அல்லவா. ஆகவே சிலம்பில் உள்ள மற்ற குறிப்புகளை வைத்துக்கொண்டு அவை இந்த வருடத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய முனைந்தேன். அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்




கண்ணகியும் கோவலனும் "மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட"  திருமணம் செய்து கொள்வதோடு தொடங்குகிறது இந்தக் காப்பியம். அவர்கள் சில ஆண்டுகள் இன்புற்று வாழ்ந்தனர் என்பதை "உரிமைச் சுற்றமோடு....யாண்டு சில கழிந்தன" என்று சொல்லி விட்டுவிடுகிறார் இளங்கோ அடிகள். அதன் பின் அரங்கேற்று காதையில் கோவலன் மாதவியின் மாலையைப் பெற்று அவளோடு போய் விடுகிறான். அங்கும் சில ஆண்டுகள் அவர்கள் இருவரும் வாழ்ந்திருக்கக் கூடும். ஏனெனில் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, அதற்கு தன்னைக் காத்த தெய்வமான மணிமேகலையின் பெயரை வைத்து மகிழ்கிறான் அல்லவா. ஆனால், எத்தனை ஆண்டுகள் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. 

அதன்பின், ஒரு வருடத்தில் இந்திரவிழாவிற்கான அறிவிப்பு வெளியாகிறது. சிலம்பில் அதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அந்த ஒரே ஆண்டில் நடந்தேறிவிடுகின்றன. நாம் பார்த்த பொயு 130க்கு அந்தக் குறிப்புகள் எல்லாம் சரியாக வருமா என்பதைப் பார்க்கவேண்டும். முதலில் இந்திர விழா தொடங்கும் நாள் "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என்று இளங்கோவடிகள் விழாவுக்கான கொடியேற்றுத் திருநாள் நடந்த தினத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி வரும் நாள்.  இது ஒரு அபூர்வமான நிகழ்வு அல்ல என்றாலும் சில சமயம் ஹஸ்த நட்சத்திரத்திலும் அல்லது சுவாதி நட்சத்திரத்திலும் கூட பௌர்ணமி வருவதுண்டு. பொயு 130ம் ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று பௌர்ணமி வந்திருக்கிறது. 


அதாவது ஏப்ரல் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.   ஆகவே இதற்கு ஒரு டிக் போட்டுக்கொண்டு மேலே நகர்வோம். (சதுர்த்தசி என்று எழுதியிருப்பதைப் பார்த்து குழம்பவேண்டாம், அது மதியம் வரைதான் அதன் பின் பௌர்ணமி வந்து விடுகிறது). இந்த வருடமும் அப்படித்தான் வந்திருக்கிறது.



இந்திர விழா எத்தனை நாட்கள் நடந்தது என்பதைப் பற்றிய குறிப்பு சிலம்பில் இல்லை. ஆனால் அதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில் "விழாக்கோள் எடுத்த நாள் ஏழ் நாளினும்" என்ற குறிப்பு உள்ளது. அதாவது கொடி ஏற்றி இருபத்து எட்டு நாட்கள் இந்த விழா நடந்திருக்கிறது. அதன்படி ஏப்ரல் 9, 130ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்திர விழா மே 6, 130 வரை நடந்திருக்கிறது. அதாவது வைகாசி மாதம் மையப்பகுதி வரை. மே 6 தான் நிறைவு நாளான கடல் ஆடு விழா. இப்போதும் கோவில் விழாக்களில் நிறைவு நாள் 'தீர்த்தவாரி' உற்சவமாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கலாம். அதன்படி மே 6ம் தேதி நடந்த கடலாடு விழாவில் கலந்து கொண்டு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் செல்கிறார்கள். அங்கே கானல் வரி நிகழ்கிறது. கோவலன் சண்டை போட்டுக்கொண்டு "பொழுது ஈங்குக் கழிந்தது" என்று தனியே சென்று விடுகிறான். அதனால் மாலை நேரத்தில் அவன் கிளம்பியிருக்கலாம் என்று கருதலாம். மாதவியும் வீடு திரும்பிவிடுகிறாள். அன்று இரவு முழுவதும் காத்திருக்கிறாள். 

மே 7, 130

இளவேனில் காலம் மாதவியை வாட்டுகிறது. "இன் இளவேனில் வந்தது காண்" என்கிறார் இளங்கோ.  தமிழர் காலக் கணக்குப் படி சித்திரையும் வைகாசியும்  இளவேனில் காலம். மதிய உணவு வரை கூட கோவலன் வீடு வரவில்லை என்பதால் கவலை கொண்டு தன் தோழியான வசந்த மலையைத் தூது அனுப்புகிறாள். மாதவியைப் பிரிந்து சென்ற கோவலன் உடனே கண்ணகியிடம் திரும்பச் செல்லவில்லை என்பது தெரிகிறது. இரவு முழுவதும் ஏதாவது மண்டபத்தில் தங்கியிருந்திருக்கக்கூடும். மறு நாள் வெறுப்போடு அலைந்து கொண்டிருந்த கோவலனை வசந்தமாலை கடைத்தெருவில் சந்திக்கிறாள். மாதவி கொடுத்த ஓலையை வசந்த மாலை "கூல மறுகின் கோவலற்கு அளிப்ப" ...அவன் அதை மறுத்து விட்டுச் சென்று விடுகிறான். அதை மாதவிக்குத் தெரிவித்த வசந்த மாலை "மாலை வாரார் எனினும் ...காலை காண்குவாம்" - மாலை வந்துவிடுவான் இல்லையென்றால் காலை வருவான் என்று ஆறுதல் சொல்கிறாள்.

ஆனால் கோவலன் வேறு மாதிரிச் சிந்திக்கிறான். இந்த ஊரில் இனிமேல் இருந்தால் மாதவி தொடர்ந்து தொந்தரவு தரக்கூடும். ஊர்ப் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை அவன். சோழ மன்னரிடம் மாதவி 'Haressment Case' கொடுத்துவிட்டால் பெருத்த அவமானம். குழந்தையை வேறு கொடுத்துவிட்டான். ஆகவே உடனே ஊரை விட்டுச் செல்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்த அவன், கண்ணகி வீட்டிற்குச் செல்கிறான். முன்னிரவு நேரம், தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிற நேரத்தில் போய்ச்சேருகிறான். இருவரும் படுக்கையறையில் சந்திக்கின்றனர். "பாடு அமை சேக்கையிட் புக்கு" என்று இதை அடிகள் குறிப்பிடுகிறார். சுருக்கமாக நாலேவரிகளில் தன் செய்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உடனடியாக மதுரைக்குப் புறப்படவேண்டும் என்று சொல்கிறான். பெண் விஷயத்தில் மாட்டிக்கொண்டால் இப்படித்தான் உடனே கிளம்பவேண்டியிருக்கும் என்பதை கண்ணகி "நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி சிலம்பு உள" என்று சொல்லாமல் சொல்கிறாள். இப்போது அடுத்த வானியல் குறிப்பு வருகிறது. 

"கங்குல் கனை சுடர் கால் சீயா முன்"

"வான் கண் விழியா வைகறை யாமத்து மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க" 

அப்படியென்றால் கங்குல் நேரம், கருக்கல் என்று சொல்வோமல்லவா அந்த அதிகாலை நேரம். சூரியன் உதிக்காத, வெண் மதி நீங்கி விட்ட இருள் நேரம். ஆக அந்த நேரத்தில் சூரியனும் உதிக்கவில்லை, நிலவும் வானில் காணப்படவில்லை. ஆகவே அந்த நாள் வளர் பிறை நாளாகவே இருக்கக்கூடும். ஏனெனில் தேய் பிறையில் பௌர்ணமி தொடங்கி அடுத்த 14 நாட்கள் காலையில் நிலவு தெரியும். இதனால் உரை ஆசிரியர்கள் இதை பூர்வ பட்சக் காலை என்று குறித்தனர். அதன் படி பார்த்தால். மே 7ம் தேதி இரவு - மே 8ம் தேதி திங்கள் கிழமை அதிகாலை, வளர்பிறையின் பதிமூன்றாம் நாளான திரயோதசி . ஆகவே இந்தக் குறிப்பும் சரியாகப் பொருந்தி வருகிறது அல்லவா. அடியார்க்கு நல்லார் இதை ஒரு நாள் நகர்த்தி அதாவது செவ்வாய் அதிகாலை, கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய தீய நாளில் அவர்கள் கிளம்பினர் என்று எழுதியிருக்கிறார். ஆனால் செவ்வாய் அதிகாலை பௌர்ணமி வந்துவிடுகிறது. அப்போது நிலவு அதிகாலையில் தெரியும் நாள் என்பதால், தீய நாள் குறிப்பு இருக்கவேண்டும் என்பதற்காக அவர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மே 8, 130 அதிகாலை வீட்டை விட்டுக் கிளம்பிய கோவலனும் கண்ணகியும் இலவந்திகைப் பள்ளிக்குச் செல்கின்றனர். அப்போது கோவலனிடம் கண்ணகி மதுரைக்குச் செல்ல எத்தனை நாட்கள் என்று கேட்க, அவன் 'ஆறு ஐங் காதம்' என்கிறான். அதாவது முப்பது காதம், கிட்டத்தட்ட 450 கிமீ. பூம்புகாரிலிருந்து கிளம்பினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை திருப்பத்தூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதுபோல) இல்லாததால், அவர்கள் உறையூர் ராஜபாட்டை மூலம் அவ்வூரை அடைந்து அதன்பின் உறையூர்- மதுரை வழி மூலம் மதுரை வந்து சேருகிறார்கள். இது 450 கிமீயை ஒத்திருக்கிறது. 

இருவரும் இலவந்திகைப் பள்ளியை அடைந்து கவுந்தியடிகளோடு மதுரை நோக்கிப் புறப்படுகின்றனர். 

"காவதம் அல்லது கடவார் ஆகி, பல நாள் தங்கி செல் நாள் ஒரு நாள்"

அதாவது ஒரு நாளில் ஒரு காதம் கூடச் செல்லாமல், பல நாட்கள் பல இடங்களில் தங்கித் தங்கிச் சென்றார்களாம். அவர்கள் மதுரையை எப்போது அடைகிறார்கள். பார்ப்போம்.