Saturday 8 October 2016

சரஸ்வதி அந்தாதி - கம்பர்




காப்புச் செய்யுள் 

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய 
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே 
இருப்பள் இங்கு வாராது இடர். 

படிக நிறமும் பவளச் செவ்வாயும் 
கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும் 
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் 
கல்லும் சொல்லாதோ கவி.  

நூல்- கலித்துறை 

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல் 
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல் 
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் 
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1 

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல் 
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே 
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால் 
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2 

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித் 
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை 
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே 
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3 

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு 
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும் 
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு 
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4 

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும் 
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான் 
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும் 
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5 

மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே 
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூரிருட் கோர் 
வெயிலே நிலவெழுமேனி மின்னே யினி வேறுதவம் 
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே. .. 6 

பாதாம்புயத்தில் பணிவார் தமக்குப் பல கலையும் 
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ் 
சீதாம்புயத்தில் இருப்பாய் இருப்ப என் சிந்தையுள்ளே 
ஏதாம் புவியில் பெறலரிதாவது எனக்கினியே. .. 7 

இனி நான் உணர்வது எண்ணெண் கலையாளை இலகு தொண்டைக் 
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமல அயன் 
தனிநாயகியை அகிலாண்டமும் பெற்ற தாயை மணப் 
பனிநாண் மலருறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8 

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா 
மேவும் கலைகள் விதிப்பாளிடம் விதியின் முதிய 
நாவும் பகர்ந்த தொல்வேதங்கள் நான்கும் நறுங்கமலப் 
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9 

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய மதியமென்கோ 
அந்தியில் தோன்றிய தீபமென்கோ நல அருமறையோர் 
சந்தியில் தோன்றும் தபமென்கோ மணித்தாமமென்கோ 
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10 

ஒருத்தியை ஒன்றும் இலாளன் மனத்தின் உவந்து தன்னை 
இருத்தியை வெண்கமலத்திருப்பாளை யெண்ணெண் கலைதோய் 
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தையெல்லாம் 
திருத்தியை யான்மறவேன் திசைநான்முகன் தேவியையே. .. 11 

தேவரும் தெய்வப்பெருமானும் நான்மறை செப்புகின்ற 
மூவரும் தானவர் ஆகியுள்ளோரும் முனிவரரும் 
யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த 
பூவரும் மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே. .. 12 

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை 
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத் 
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்ற 
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே. .. 13 

வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம் 
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும் 
போதமும் போத உருவாகி ஏங்கும் பொதிந்த விந்து 
நாதமும் நாத வண்டார்க்கும் வெண்டாமரை நாயகியே. .. 14 

நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞான இன்பச் 
சேயகம் ஆன மலரகம் ஆவதும்  தீவினையா 
லே அகம் மாறிவிடும் அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும் 
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே. .. 15 

சரோருகமே திருக்கோயிலும் கைகளும் தாளிணையும் 
உரோருகமும் திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்போல் 
சிரோருகம் சூழ்ந்த வதனமும் நாட்டமும் சேயிதழும் 
ஒரோருகம் ஈரரை மாத்திரையான உரை மகட்கே. .. 16 

கருந்தாமரை மலர் கண்தாமரை மலர் காமருதாள் 
அருந்தாமரை மலர் செந்தாமரை மலர்  ஆலயமாத் 
தருந்தாமரை மலர் வெண்டாமரை மலர் தாவிலெழில் 
பெருந்தாமரை மணக்குங் கலை கூட்டப் பிணை தனக்கே. .. 17 

தனக்கே துணிபொருள் என்னும் தொல் வேதம் சதுர்முகத்தோன் 
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும்  இமையவர் தாம் 
மனக்கே தம் மாற்றும் மருந்தென்ப சூடுமலர் என்பன்யான் 
கணக்கேச பந்திக் கலை மங்கை பாத கமலங்களே. .. 18 

கமலந்தனிலிருப்பாள் விருப்போடங் கரங்குவித்துக் 
கமலங் கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக் 
கமலந் தனைக் கொண்டு கண்டொருகால் தம் கருத்துள் வைப்பார் 
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே. .. 19 

காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும் 
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஓர் நான் மருப்பு 
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும் 
ஆரணப் பாவை பணித்த குற்றேவல் அடியவரே. .. 20 

அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும் 
முடிவே தவன முளரிமின்னே முடியா இரத்தின 
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின் 
விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21 

வேறிலை என்றுன் அடியாரிற் கூடி விளங்கு நின்பேர் 
கூறிலையானும் குறித்து நின்றேன் ஐம்புலக் குறும்பர் 
மாறிலை கள்வர் மயக்கால் நின் மலர்த்தாள் நெறியில் 
சேறிலை ஈந்தருள் வெண்டாமரை மலர்ச் சேயிழையே. .. 22 

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும் 
சோதிக்கலாமுறப் போதிக்கலாம் சொன்னதே துணிந்து 
சாதிக்கலாமிகப் பேதிக்கலாம் முத்தி தானெய்தலாம் 
ஆதிக்கலாமயில் வல்லி பொற்றாளை அடைந்தவரே. .. 23 

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் 
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை உபநிடதப் 
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும் 
தொடையாளை அல்லது மற்றிலர் யாரைத் தொழுவதுவே. .. 24 

தொழுவார் வலம் வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்து 
விழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகித்து 
அழுவார் இனுங் கண்ணீர் மல்குவார் என் கண்ணின் ஆவதென்னை 
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே. .. 25 

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்பொருளும் 
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின் 
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் 
உய்க்கும் பொருளும் கலைமாது உணர்த்தும் உரைப்பொருளே. .. 26 

பொருளால் இரண்டும் பெறலாகும்  என்ற பொருள் பொருளோ 
மருளாத சொற்கலைவான் பொருளோ பொருள் வந்து வந்தித்து 
அருளாய் விளங்குமவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு 
இருளாய் விளங்கு நலங்கிளர்மேனி இலங்கிழையே. .. 27 

இலங்கும் திருமுகம் மெய்யிற்புளகம் எழும் விழிநீர் 
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவே 
துலங்கும் முறுவல் செயக்களிகூரும் சுழல்புனல் போல் 
கலங்கும் பொழுது தெளியுஞ்சொல்மானைக் கருதினர்க்கே. .. 28 

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய 
சரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும் 
புரியார்ந்த தாமரையும் திருமேனியும் பூண்பனவும் 
பிரியாவென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29 

பெருந்திருவும் சயமங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில் 
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்  
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளருளும் 
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ் சீர் தருமே. .. 30

1 comment:

  1. இதற்கு உரை உள்ளதா? உரையில்லாமல் இதைப் படித்துப் பயன் தான் என்ன? உரையைக் காணலாமா? நன்றி.

    ReplyDelete