Skip to main content

சிலப்பதிகாரத்தின் காலமும் மதுரை எரிக்கப்பட்ட நாளும்

ஒரு சிறு முன்னுரை 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் எதிராஜன், சிலப்பதிகாரம் பற்றிய என்னுடைய பழைய ட்வீட் ஒன்றைக் குறிப்பிட்டு அது நடந்த காலம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டீர்களா என்று கேட்டிருந்தார். சிலம்பில் இடம்பெற்ற வானியல் குறிப்பு பற்றிய ட்வீட் அது. அதற்கான நல்ல astronomy software ஒன்று வேண்டும் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நேற்று மதிப்பிற்குரிய ஜோதிடர் நரசிம்ம ராவ் அவர்கள் தன்னுடைய ஜெகந்நாத ஹோரா செயலியைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதில் சூரிய சித்தாந்தத்தை வைத்து மகாபாரத காலத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள் என்றும் அது தவறான முறை என்றும் தெரிவித்திருந்தார். தவிர பொயுமு 12899லிருந்து அந்த செயலியைப் பயன்படுத்தி திருக்கணித முறையில் கிரக நிலைகளை அறியலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்தது சிலம்பைப் பற்றிய ஆய்வில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜெகந்நாத ஹோரா செயலியையும் அந்த வானியல் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஆய்வு செய்தேன். அதன் விளைவே இந்தக் கட்டுரை. 



சிலப்பதிகாரத்தின் காலம் 

தமிழ் கூறும் நல்லுலகிற்கே உரிய வழக்கப்படி சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றி ஏகப்பட்ட ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இருப்பினும் பல ஆய்வாளர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களை சிலப்பதிகாரம் நடந்த காலமாக நிறுவுகிறார்கள். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது சிலப்பதிகாரம் நடந்த காலம் வேறு அது ஒரு காப்பியமாக எழுதப்பட்ட காலம் வேறு என்பதை. காப்பியம் நடந்த காலம் எதுவென்ற வேறுபாடு இருந்தாலும், அது எழுதப்பட்டது சமணமும், புத்த மதமும் தமிழகத்தில் தலை தூக்கத் தொடங்கிய சங்கம் மருவிய காலத்தில் என்பதில் பெரும்பாலான ஆய்வாளர்கள் ஒத்துப்போகிறார்கள். இதை கவனத்தில் இருத்திக்கொண்டு சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றிய ஆய்வுகளைக் கவனிக்கலாம்

பொயுமு 3ம் நூற்றாண்டு

சில ஆய்வாளர்கள் பொயுமு 3ம் நூற்றாண்டே சிலப்பதிகாரம் நிகழ்ந்த ஆண்டு என்று வாதிடுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பொயுமு 3ம் நூற்றாண்டு கடைச்சங்க காலத்தின் ஆரம்ப காலம். கடைச்சங்கப் புலவர்களில் மூத்தவர்களில் ஒருவரான மாமூலனார் 'வம்ப மோரியரின்' படையெடுப்பையும் அவர்களைத் தோற்கடித்த செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னனைப் பற்றியும் தன் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சிலப்பதிகாரமோ மூன்று பெரு மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது. சங்க காலச் சோழ மன்னர்களில் சிறந்தவனான கரிகாலச் சோழனின் இமயப் படையெடுப்பையும் அங்கே அவன் புலிக்கொடியைப் பொறித்ததையும் இந்திரவிழவு ஊர் எடுத்த காதை குறிப்பிடுகிறது. ஆகவே கரிகாலச் சோழன் சிலப்பதிகாரம் நடந்த காலகட்டத்திற்கு சற்று முன்னால் வாழ்ந்திருக்கக்கூடும். அதேபோல 'ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின்' ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் சிலப்பதிகாரம் நடந்திருக்கிறது. அடுத்ததாக வரும் சேரன் செங்குட்டுவன் இளையவன். காப்பியத்தின் நிறைவுப் பகுதிகளில் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று கனக விசயர் தலைமேல் கண்ணகிக்குச் சிலை வைக்க கல் கொண்டுவந்தான் என்று சொல்கிறது சிலப்பதிகாரம். 

பொயுமு 3ம் நூற்றாண்டு வட இந்தியாவில் மௌரியப் பேரரசு வலிமையாக இருந்த காலம். மாமூலனார் குறிப்பிடும் வம்ப மோரியரின் படையெடுப்பு பிந்து சாரரின் காலத்தில் நடந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. அவருக்குப் பின்வந்த அசோகர் தமிழ் மன்னர்களோடு நட்புடன் இருந்ததாக தன்னுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே மூன்று பெரிய தமிழ் மன்னர்கள் அடுத்தடுத்து வடநாட்டு மன்னர்களை, அதுவும் வலுவான அசோகரை வென்றதாகச் சான்று ஏதும் இல்லை.தவிர, பொயுமு 3ம் நூற்றாண்டில் நடந்த கதையை ஏன் கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் கழித்து சங்கம் மருவிய காலத்தில் இளங்கோவடிகள் காப்பியமாகப் படைக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், தமிழ் மன்னர்களுடைய காலக்கணக்கின் படி சங்க காலத்தின் ஆரம்பத்தில் இம்மூன்று பெரும் மன்னர்களும் ஆட்சி செய்ததாகக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட காரணங்களால் பொயுமு 3ம் நூற்றாண்டை ஒதுக்கிவிடலாம். 

பொயு 756ம் ஆண்டு 

திவான் பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை என்பவர் சிலப்பதிகாரத்தில் உள்ள வானியல் குறிப்புகளை வைத்து அது பொயு 756ம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வானியல் குறிப்புகள் சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருந்தி வரும் ஒன்று. பொயு 756 என்பது பல வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக நமக்குக் கிடைக்கும் ஒரு காலம். சைவ சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தோன்றி ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய காலம். சமணமும் பௌத்தமும் மறைந்துகொண்டிருந்த காலம். வட தமிழகத்தில் பல்லவர்களும் தென் தமிழகத்தில் பாண்டியர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். இடைக்காலப் பாண்டியர்களின் வம்சாவளி தெளிவாக செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற காலகட்டம் இது. நெடுஞ்செழிய பாண்டியனைப் பற்றியோ அல்லது மதுரை எரிந்தது போன்ற பெரு நிகழ்வைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. ஆகவே வரலாற்றுச் சான்றுகள் அதிகமாக கிடைக்கும் இந்த காலத்தில் சிலப்பதிகாரம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. 

பொயு 2ம் நூற்றாண்டு

மேற்சொன்ன காரணங்களை வைத்துப் பார்க்கும் போது, பல ஆய்வாளர்களின் கருத்தின் படி சிலப்பதிகாரம் நடந்தது பொயு 2ம் நூற்றாண்டு என்பதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வடநாட்டில் மௌரியப் பேரரசு வீழ்ந்து குப்தப் பேரரசு தலைதூக்காத இக்காலகட்டத்தில் பல சிறிய அரசுகள் அப்பகுதியை ஆண்டிருக்கின்றன. ஆகவே தமிழ் மன்னர்கள் வடபுலத்திற்குப் படையெடுத்துச் சென்று வெற்றியடைந்தனர் என்ற செய்தி சரியாகப் பொருந்திவருகின்றது. சிலப்பதிகாரம் இலங்கை மன்னனான கயவாகு கண்ணகிக்குக் கோவில் எடுத்த விழாவில் பங்கேற்றான் என்று குறிப்பிடுகிறது

குடகக் கொங்கரும்மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் - வரந்தரு காதை

இந்தக் கயவாகு அரசாட்சி செய்த காலமாக பொயு 114 - 136ம் ஆண்டுகளை மகாவம்சம் குறிப்பிடுகிறது. அவன் தமிழகத்திலிருந்து திரும்பி வரும்போது 'பத்தினிக் கடவுளின் கால்சிலம்பை' கொண்டுவந்தான் என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே இந்த அரசனை செங்குட்டுவனின் சமகாலத்தவனாகக் கருதலாம். 

மேலும் சாதவகனர்களின் அரசனும் வடபுலத்து மன்னர்களின் எதிரியுமான சதகர்ணி செங்குட்டுவனுக்கு வடநாட்டுப் படையெடுப்பில் உதவினான் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த 

நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே - கால்கோள் காதை

இங்கே நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடப்படுகின்ற சதகர்ணிகளின் ஆட்சிக்காலம் பொயு 2ம் நூற்றாண்டு. ஆகவே இந்தக் குறிப்புகளை வைத்து சிலப்பதிகாரம் பொயு 2ம் நூற்றாண்டில்தான் நடந்தது என்று நாம் கொள்ளலாம்.

வானியல் குறிப்பு

இப்போது சிலம்பில் உள்ள வானியல் குறிப்பிற்கு வரலாம். கண்ணகி மதுரையை எரித்த பிறகு அவள் முன் தோன்றிய மதுராபுரித் தெய்வமான அங்கயற்கண்ணி, 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து

அழல் சேர் குட்டத்துஅட்டமி ஞான்று

வெள்ளி வாரத்துஒள் எரி உண்ண

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்” எனும் 

உரையும் உண்டேநிரை தொடியோயே - கட்டுரை காதை

என்று உரைக்கிறாள். அதாவது ஆடி மாதம், இருள் பக்கமான தேய்பிறையில் அழல் என்ற கார்த்திகை நட்சத்திரம் குட்டமாக, அதாவது சிறிதாக இருக்கும் அஷ்டமி திதி, வெள்ளிக்கிழமை மதுரை எரிக்கப்படும் அரசு கேடு உறும் என்பது ஒரு கூற்று என்று அத் தெய்வம் உரைத்தது. இங்கு குட்டம் என்று குறிப்பிடப்படுவது அதன் நான்காம் பாதம் அதாவது ரிஷப ராசியில் என்று என்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. அது முதற் பாதத்தை, அதாவது ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே குறிக்கும் என்பதை உரையாசிரியர் தெரிவிக்கிறார். 

அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. "ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று

ஆக, நாம் கண்டுபிடிக்க வேண்டியது எந்த வருடத்தில் ஆடிமாதம், தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமை வந்தது என்பதைத்தான். இது ஒரு அபூர்வமான நிகழ்வு. ஏனெனில் ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கின்றான். கடக ராசி புனர்பூசத்தின் நான்காவது பாதத்தையும் பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களையும் கொண்டது. ஆகவே அந்த மாதத்தின் கிருஷ்ண பட்ச அஷ்டமி 6-7 நாட்களுக்கு முன்பு தான் வரும். பெரும்பாலும் அது ரேவதி, அசுவதி அல்லது பரணி நட்சத்திரமாகவே இருக்கும். 

இந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு ஜெகந்நாத ஹோரை செயலியில் தேட ஆரம்பித்தேன் கயவாகுவின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் மேற்குறிப்பிட்டபடி அஷ்டமி அசுவதி-பரணி நாட்களிலேயே பெரும்பாலும் வந்தது. ஜூன் 19, 116ம் ஆண்டு அஷ்டமியும் வெள்ளிக்கிழமையும் வந்தாலும் அன்று ரேவதி நட்சத்திரமாக இருந்தது. இப்படிப் பல ஆண்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், இந்த அபூர்வமான வானியல் நிகழ்வு நடந்திருப்பது ஜூலை 14ம் தேதி, 130ம் ஆண்டு என்று தெரியவந்தது. இந்த நாளில் ஆடி மாதமும் தேய்பிறை அஷ்டமியும் கார்த்திகையின் முதற்பாதமும் சேர்ந்திருந்தன. அன்று இரவுதான் மதுரை கண்ணகியால் எரியூட்டப்பட்டது. 



அதன்பின் நடந்த சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பும், அவனுக்கு உதவி செய்த சதகர்ணியின் காலமும் கண்ணகியின் கோவில் விழாவில் கலந்து கொண்ட கயவாகுவின் காலமும் இதனோடு கச்சிதமாக ஒத்துப்போகின்றன. கடைச் சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் நடந்த  இந்த நிகழ்வுகளை இளங்கோவடிகள் அடுத்த நூற்றாண்டான சங்கம் மருவிய காலத்தில் காப்பியமாகப் பாடியதும் சரியாகப் பொருந்துகிறது. ஆகவே சிலப்பதிகாரம் நடந்த ஆண்டு பொயு 2ம் நூற்றாண்டு. மதுரை எரிந்த நாள் ஜூலை 14, 130 என்பது மேற்சொன்ன ஆய்வின் மூலம் தெளிவாகிறது. 

சரி, அப்படியானால் சிலப்பதிகாரம் நிஜமாகவே நடந்ததா என்று சில நண்பர்கள் கேட்கலாம். என்னைப் பொருத்தவரை சில வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட காப்பியமாகவே அதைக் கருதுகிறேன். பல்வேறு நூல்களால் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் இக்காப்பியத்தை முழுக்க முழுக்கப் புனைவு என்று கருதுவது இயலாத ஒன்று. 






Comments

  1. Wonderful Analysis and Good Read.

    ReplyDelete
  2. Brilliant analysis and presentation is as per research standards. Very insightful. God bless the Scholar.

    ReplyDelete
  3. Fantastic research article. The best part is how the author / researcher has refuted other claims and validated his cleims.

    ReplyDelete
  4. Astounding analysis based on astronomical Data. Wonderful job.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ