Wednesday 24 August 2016

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில், மன்னர்கள் அடையும் வெற்றிகளைப் பொருத்து 'வளர்ந்து கொண்டே' வரும். இதை வைத்து எந்த ஆண்டுகளில் எந்த நாடுகள் வெற்றிகொள்ளப்பட்டன என்பதை அறியலாம்.
 
 இப்போது ராஜராஜனின் மெய்க்கீர்த்தி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஸ்வஸ்திஶ்ரீ 
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள்  கோஇராச கேசரி
வன்மரான ஶ்ரீஇராசராச தேவர்க்கு யாண்டு.

மங்கல ஒலியான ஸ்வஸ்திஶ்ரீ என்ற அடைமொழியோடு தொடங்கும் இந்த மெய்க்கீர்த்தி,
'திருமகள் போல பெருநலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள்ள', அதாவது திருமகள் எப்படி ராஜராஜனுடன் இருக்கிறாளோ அதேபோல, பெருநலச் செல்வியான நில மாதையும் தனக்கு உரிமையாக்கிக்கொள்ள நினைத்து,

'காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி' - மெய்க்கீர்த்தியின் இந்த வரி பெரும் ஆராய்ச்சிகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. ராஜராஜன் அடைந்த முதல் வெற்றியாக காந்தளூர்ச்சாலை வெற்றியை இது குறிக்கிறது. ஆனால் காந்தளூர்ச்சாலை என்பது என்ன, கலமறுத்தருளி என்றால் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள், இது திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஒரு கடற்படைத் தளம் என்றும், சேரர்களின் கடற்படை பலத்தை அழிக்கும் ஒரு பகுதியே இந்த காந்தளூர்ச்சாலை கலம், அதாவது கப்பல்களை அழித்த நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இன்னும் சிலர், சாலை என்பது போர்ப்பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றைக்குறிக்கும் என்றும், பயிற்சிப்பள்ளிகளை அழித்து சேரர்களின் வலுவை ராஜராஜன் அழித்ததே இது என்று கூறுகின்றனர். இதற்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களில் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், இது சேரர்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிறுவனம் என்றும், அதை அழித்து தானே சேர நாட்டிற்கும் அரசன் என்று ராஜராஜன் பிரகடனப் படுத்திக்கொண்டான் என்றும் கூறுகின்றனர். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள், இது ஒரு உணவு அளிக்கும் இடம் என்று கூறியிருக்கிறார். எப்படியோ, ராஜராஜன் அடைந்த முதல் முக்கிய வெற்றி இந்த காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தது. ராஜராஜன் மட்டுமன்றி அவனுக்குப் பின்னால் வந்த சோழமன்னர்கள் சிலரும், ஏன் பாண்டிய மன்னர்களும் 'காந்தளூர்ச்சாலை கலம் அறுத்துள்ளார்கள்'

அடுத்து ராஜாராஜன் அடைந்த வெற்றிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, வேங்கை நாடு, அதாவது கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கிடையே உள்ள கீழைச்சாளுக்கியர்களின் வேங்கி நாட்டு வெற்றி, அதற்கடுத்து கர்நாடகாவில் மைசூருக்குத் தெற்கே கங்கர்களின் நாடான கங்கபாடி, அவர்களின் சிற்றரசான நுளம்பபாடி, மைசூருக்கு அருகில் உள்ள இன்னொரு அரசான தடிகைபாடி, குடகு மலை நாடு ஆகிய இடங்களில் அடைந்த வெற்றிகள். பிறகு சேரநாட்டிலுள்ள கொல்லம், இன்றைய ஒரிசாவின் தென்பகுதியான கலிங்க நாடு ஆகிய இடங்களை வெற்றிகொண்டது, முரட்டுத் தொழில் புரியும் சிங்களவர்களின் நாடான இலங்கை வெற்றி, இன்றைய மகாராஷ்ட்டிர மாநிலத்தின் தென்பகுதியான இரட்டை பாடி ஏழரை இலக்கம் என்ற நாடு ஆகிய நாடுகளை வெற்றி கொண்டதை இந்த மெய்க்கீர்த்தி குறிக்கிறது.
அதன்பின் கடற்படை கொண்டு, முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகளை ராஜராஜன் வெற்றி கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கடற்படை அடைந்த முதல் முக்கியமான வெற்றி இது. இந்தப் படையெடுப்பு, சோழ நாட்டு வணிகர்களைப் பாதுகாக்கும் முகமாகவே நடைபெற்றிருக்கவேண்டும். இந்த வெற்றிதான் பின்னால் ராஜேந்திரன் கடாரம் கொள்வதற்கு அடிகோலியது. இத்துடன் ராஜராஜனின் வெற்றிச் செய்திகள் நிறைவடைகின்றன.

அப்படிப்பட்ட 'திறன்மிக்க வெற்றிகளை அடையக்கூடிய படைகளைக் கொண்ட அவர் வாழ் நாளில் எல்லா ஆண்டும் (அவரை) வணங்கக் கூடிய ஆண்டே, செழியர்களான பாண்டியர்களை ஒளி குன்றச் செய்த ராஜகேசரி ராஜராஜ தேவருக்கு ....'   என்று மெய்க்கீர்த்தி ராஜராஜனைப் புகழ்ந்துரைக்கிறது.

இந்த மெய்க்கீர்த்தியின் இன்னொரு சிறப்பம்சம், ராஜராஜன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிட்டாலும், தோல்வியடைந்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், நாடுகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுவிடுவதுதான். இந்த மெய்க்கீர்த்தி பரம வைரிகளான பாண்டியர்கள் மீது அடைந்த வெற்றிகளைக் குறிப்பிடும்போதும், பரம்பரைப் பெயரான 'செழியரைத் தேசுகொள்' என்று குறிப்பிடுகிறதே தவிர, அமரபுயங்கன் பெயரைக் குறிப்பிடாதது இங்கு கவனிக்க வேண்டியது. இந்த வழக்கம் அவர் புதல்வரான ராஜேந்திரர் காலத்திலேயே மாறிவிட்டது. அவருடைய மெய்க்கீர்த்தியில் அவர் வெற்றிகொண்ட மன்னர்களின் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் மெய்க்கீர்த்திகளிலேயே ராஜராஜனுடையது தனித்தன்மை வாய்ந்தது ஆகும். 

4 comments:

  1. அருமையான தகவல்கள். தகவல்களை விரிவாகக் கொடுத்தமைக்கு நன்றி.

    மூன்று நாடுகளிலும் சேரநாடு வளமானது. அப்படியிருக்க காந்தளூர்ச்சாலை என்பது உணவு வழங்கும் இடமாக இருக்க வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது. உண்மையை யார் அறிவாரோ!

    இந்த மெய்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளின் பழைய பெயர்களையும் அவைகளின் தற்போதைய பெயர்களையும் பற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். :)

    ReplyDelete
  2. முரட்டுத் தொழில் புரியும் சிங்களவர்களின் நாடான இலங்கை
    Murattu thozhil enna seithargal sir
    Pls explain

    ReplyDelete
  3. There was a custom for generations to appoint men from war trained Brahmin soldiers as 'Pandian Abathuthavi' force; (Meikaval padai). These men were not the ones who do we think are Satva Guna people. They were professional warriors. Krishnan Raman, brahmin by birth was the Chief General of Rajaraja Chola and Rajendra Chola'.
    Pandia Raja Gurus were from among these people. Pandia Empire had spread to the entire Kerala State before the advent of the later Chola' Dynasty. It had taken long to avenge the murder of Aditha Karikalan to Rajaraja Chola.
    Rajaraja Cholan not only killed all Pandiyan Abathuthavi (Meikaval Padai) personnel named Ravidasan, Soman Sambavan, Parameswaran, Idumban Kari who had executed the killing of Aditha Karikalan. Rajaraja Chola also could have dismantled and set fire to their war training establishment complex, killed many of them in order to avoid future emergence of them.

    ReplyDelete
    Replies
    1. Brahmin soldiers were never appointed as Abathu Uthavees. That’s the fiction of Ponniyin Selvan. Those who killed Aditya karikalan were only the officials of Pandya kingdom. Also. Rajaraja not ‘killed’ any of them but banished them from the country as per Udayarkudi inscription

      Delete