Skip to main content

அம்மன் காசு




'அவன் கிடக்கான்டா, அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லாத பய' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்வது வழக்கம். அம்மன் சல்லி அல்லது அம்மன் காசு என்று அழைக்கப்படும் இந்தக் காசு யாரால், எப்போது  வெளியிடப்பட்டது ?

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது, அதில் ஒன்றான ராமநாதபுரம் வலுவடைந்து சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் வந்தது. சேதுபதி அரசர்களில் முக்கியமானவரான கிழவன் சேதுபதி (பொயு 1679)  தனது அரசை இரண்டாகப் பிரித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். தனது மைத்துனனான ரகுநாதத் தொண்டைமானை அதற்கு அரசராகவும் நியமித்தார். கிழவன் சேதுபதியின் காலத்திற்குப் பிறகு வந்த தொண்டைமான் அரசர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தனர். அதன் விளைவாக, தங்களுடைய அரசில் சொந்தமாக நாணயம் அச்சிட்டு வெளியிடும் உரிமையையும் பெற்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட நாணயம்தான் அம்மன் காசு.

புதுக்கோட்டை மன்னர்கள் அந்நகரில் உறையும் பிரகதாம்பாள் மேல் பக்தி பூண்டவர்கள். அதன் காரணமாகவே 'பிரகதாம்பாள்தாஸ' என்ற முன்னெட்டையும் தங்கள் அபிஷேகப் பெயரில் சேர்த்துக்கொண்டவர்கள். எனவே அவர்கள் வெளியிட்ட நாணயத்திலும் அந்த அம்மனின் உருவத்தைப் பொறித்தனர். ஒரு புறம் அம்மன் உருவம், மறுபுறம் 'விஜய' என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும்.  மற்றபடி இந்த நாணயங்களில் வெளியிட்ட ஆண்டோ அல்லது யாரால் வெளியிடப்பட்டது என்ற தகவலோ இருப்பதில்லை. ஆனால், 17-18ம் நூற்றாண்டுகளில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

செப்பால் ஆன இந்த நாணயங்கள் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு வந்தன. என்னதான், பிரிட்டிஷ் அரசு உரிமை கொடுத்திருந்தாலும் அதை 'ஓவராகப்' பயன்படுத்திக்கொள்ள விரும்பாத தொண்டைமான்கள் குறைந்த மதிப்பிலேயே இந்த நாணயங்களை வெளியிட்டனர். சல்லி என்று அழைக்கப்பட்ட இந்த நாணயத்தின் மதிப்பு ஒரு அணாவில் பதினாறில் ஒரு பங்கு.  இந்த நாணயமும் மிகச் சிறியதாக, ஒரு சென்டிமீட்டர் அகல அளவிலேயே இருக்கும்.

Comments

  1. நேற்றே படிக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். இன்றுதான் படிக்க முடிந்தது. அருமையான தகவல்.

    சல்லி சல்லியாக நொறுக்குவது என்பதற்குச் சிறியதாகப் பகுப்பது. அப்படிச் சிறியதாக இருப்பதாலேயே நாணயங்கள் சல்லி என்று அழைக்கப்பட்டன.

    இந்த அம்மன் சல்லியில் எனக்கு இப்போது ஒன்று கிடைத்தால் மிக அருமையாக இருக்கும்.

    புதுக்கோட்டையிலேயே அச்சிட்டுக் கொள்ளாமல் கொல்கொத்தாவில் நாணயங்களை அச்சிடுவதற்கு என்ன காரணமாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. அதற்கான வசதிகள் இங்கு இல்லை. மேலும் பிரிட்டிஷ் நாணயங்களை அச்சடிக்கும் இடத்தில் இதையும் அச்சடிப்பது பெருமைதானே

      Delete
  2. இந்த நாணயத்தில் ஒன்று எண்ணிடம் இருப்பது பெருமையாகவே கருதுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ