Sunday 2 July 2017

சீனத் தமிழ் கல்வெட்டு

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பண்டைக்காலத்திலிருந்தே தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்து வந்தார்கள் என்று சங்க இலக்கியம் முதல் வரலாற்றுக் குறிப்புகள் வரை நமக்குத் தெரிவிக்கின்றன. சோழ அரசு சிறப்பான நிலையை ராஜராஜன் காலத்திலிருந்து அடையத் துவங்கியவுடன், வணிகக் குழுக்களின் வீச்சும் விரிவடைந்தது. நானா தேசத்து ஐந்நூற்றுவர் போன்ற குழுக்கள் வலுவடைந்தன.

இந்த வணிகக் குழுக்கள் வெறுமனே கப்பல் மூலம் சென்று துறைமுக நகரங்களில் வணிகம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தாம் செல்கின்ற நாடுகளில் குடியிருப்புகளையும் அமைத்து அந்தந்த நாடுகளில் உள்நாட்டு வணிகத்தையும் விரிவுபடுத்தினர். அப்படி அமைந்ததுதான், தென் சீனாவில், க்வாங்சூ மாகணத்தில், சுவான் சௌ என்ற இடத்தில் ஏற்பட்ட குடியிருப்பும். கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப,  அங்கே ஒரு கோவிலையும் அவர்கள் கட்டினர். அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்தவர் மங்கோலிய வம்சத்தவரும், செங்கிஸ்கானுடைய கொள்ளுப்பேரருமான குப்ளாய் கான். அவரைப் பற்றி மார்க்கோ போலோவின் மூலம் அறிந்துகொண்டிருப்பீர்கள். குப்ளாய் கானுடைய முழுப்பெயர் குப்ளாய் செக்ஸன் கான்.

அவருடைய அனுமதியின் பெயரிலேயே அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டப்பட்டது. அதற்கான அனுமதியை அங்கே கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு விளக்குகிறது.



ஹர : என்ற சிவ வழிபாட்டுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டு, சக சகாப்தம் 1203ம் (பொயு 1281) ஆண்டு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்திரா பௌர்ணமி நாள்), 'தவச்சக்கரவர்த்திகளான சம்பந்தப்பெருமாள்'  செகசை கானுடைய 'பிர்மானின்' (ஆணையின்) படி, அவரது 'திருமேனி நன்றாக' (உடல் நலத்திற்காக), 'உடையார் திருக்கதலீச்சரம் உடையநாயனார்' திருப்பணியைச் செய்ததாக குறிப்பிடுகிறது. செக்ஸன் கான் என்பதே செகசைகான் என்று மருவியிருக்கவேண்டும். கதலீச்சரம் என்பது அந்தக் கோவிலின் பெயராக இருந்திருக்கக்கூடும்.

இது போன்ற இன்னும் சில கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. அவற்றைப் பின்னால் பார்ப்போம்.




1 comment: