Wednesday 8 April 2020

அனுமனின் பேராற்றல் - மருந்து மலைப் படலம்

இன்று வடநாட்டில் அனுமனின் ஜயந்தி உற்சவம். இந்நன்னாளில் அனுமனது பராக்கிரமத்தில் ஒன்றான சஞ்சீவி மலையைக் கொண்டுவந்தது பற்றி எழுதுவது பொருத்தமானது அல்லவா



(முதலில் ஒரு குறிப்பு. சஞ்சீவி மலை எங்கிருந்தது என்பது பற்றிப் பல தியரிகள் உண்டு. நான் கம்பனில் இருந்து, பெரியவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதியிருக்கிறேன். இது தவறு, சஞ்சீவி மலை என் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளித்தான் இருந்தது என்று சொல்பவர்கள் தயை கூர்ந்து கடந்து செல்லவும்.)

ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்த மருந்து மலைப் படலம் வருகிறது. இந்திரஜித்தால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டு வானரசேனைகள் அனைத்தும் வீழ்கின்றன. லக்ஷ்மணனும் அயர்ந்து வீழ்ந்துவிடுகிறான். அப்போது போர்க்களத்தில் இல்லாதவர்கள் ராமனும் விபீஷணனும். பின்னால் போர்க்களத்திற்கு வந்த ராமன்,  அனுமன் உட்பட அனைவருக்கும் நேர்ந்த கதியைப் பார்த்து திடுக்கிடுகிறான். மூர்ச்சையடைந்து வீழ்கிறான். இப்போது விபீஷணனும் அங்கே வந்து சேருகிறான். அவனுக்கும் அதிர்ச்சி. இது பிரம்மாஸ்திரத்தால் வந்த விளைவே என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. இதைச் சரிசெய்யும் வழி என்ன? யாராவது உயிருடனிருக்கிறார்களா என்று தேடும்போது அனுமனைக் காண்கிறான் விபீஷணன். அனுமனின் களைப்பைத் தெளிவித்த பின் இருவரும் ஆலோசிக்கின்றனர். சாம்பவன் எங்கே இருக்கிறார் என்று அனுமன் வினவ, இருவரும் அவரைத் தேடிச்செல்கின்றனர். வீரர்கள் அனைவரும் வீழ்ந்ததால் மனவருத்தமுற்று சோர்ந்து கிடந்த சாம்பவான் இருவரையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அனைவரும் உயிர்பெற சஞ்சீவனி மூலிகைகளைக் கொண்டுவருவதே சிறந்த வழி, அதைச் செய்து முடிக்கக்கூடியவன் அனுமன் ஒருவனே என்று கூறி, முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அந்தச் செய்தியை முரசறிவித்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிவந்ததால் தனக்கு அந்த மூலிகை கிடைக்கும் இடம் தெரியும் என்று சொல்லி, அந்த மூலிகை இருக்கும் இடமான மருந்து மலைக்கு வழியும் கூறுகிறார் சாம்பவான்முக்கியமாக விடிவதற்குள் அந்த மூலிகைகளை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார் அவர்

எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல்லற மூர்த்தி தானும்,
வழுவல் இல் மறையும், உன்னால்வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி
.

உடனே அந்த மருந்தை விரைவில் எடுத்துவருவேன் எனக்கூறி அனுமன் பேருருவம் கொள்கிறான்

ஓங்கினன் வான் நெடுமுகட்டை யுற்றனன் பொற்றோளிரண்டுந் திசையோ டொக்க
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே யென வளர்ந்தான் வேதம் போல்வன்

அப்படிப் பேருருவம் கொண்டு மிகுந்த வேகத்துடன் வான் வழியாகச் கிளம்பிச் செல்கிறான் ஆஞ்சநேயன். அதைக் கம்பன் வர்ணிக்கும்போது

கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு அகல் வேலை; கிழக்கும் மேற்கும்;
பொழிந்தன,மீன் தொடர்ந்து எழுந்த, பொருப்பு இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன வானவர் மானம், ஆகாயத்திசையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல் கீறின போய்த் திசைகள் எல்லாம்


அப்படி காற்றைக் கிழித்துக்கொண்டு அனுமன் செல்கையில் பேரொலி தோன்றியதாம். தற்போதைய Supersonic விமானங்களை விட விரைந்து சென்றிருப்பான் போலும். அப்படி இலங்கையிலிருந்து கிளம்பிச் சென்ற அனுமன் முதலில் இமய மலையைக் கடக்கிறான். அங்கே கயிலை மலையில் அமர்ந்திருந்த ஈசன் அனுமனை உமாதேவிக்குச் சுட்டிக்காட்டுகிறார். அதன் பிறகு ஹேமகூட மலையைத் தாண்டி, நிடத மலையை அடைகிறான். அதனையும் கடந்து மேரு மலையை அடைகிறான். இந்த மேரு மலை உலகத்திற்கு அச்சு போன்றது என்று கூறப்படுகிறது. அந்த மேரு மலையில்தான் நாவல் மரம் ஒன்று உள்ளது. அதை வைத்தே இப்பெருநிலம் ஜம்புத்வீபம் (நாவலாந்தீவு) என்று அழைக்கப் படுகிறது. அந்த நாவல் மரத்தைக் கண்டு வணங்கி, அதனையும் தாண்டிச் செல்கிறான் அனுமன். அடுத்து உத்தரகுரு எனும் இடத்தை அடைகிறான். அங்கு வந்தவுடன் விடிந்து விடுகிறது.

அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த அண்ணல்,
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், ‘விடிந்தது ‘என்னா ‘முடிந்தது என் வேகம் ‘என்றான்.


ஆகா, விடிவதற்குள் இந்த மூலிகையைச் சென்று சேர்க்க வேண்டியிருந்தது போக, இப்போது விடிந்துவிட்டதே. எனது வேகமும் முடிந்துவிட்டது என்று தளர்ச்சியுற்றான் அனுமன். ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகு அவனுக்கு ஒன்று புலப்படுகிறது. அனுமன் இலங்கையிலிருந்து கிளம்பிச்சென்றது மாலை முடியும் நேரத்தில். அவன் வடதிசை நோக்கிச் செல்கிறான். ஆனால் இப்போது அவனது இடப்பக்கம், அதாவது மேற்குத் திசையில் சூரியன் தோன்றுகிறது. அதெப்படி மேற்கில் சூரியன் உதிக்கும் என்று சிந்தித்தான். தான் வடபகுதியை, அதாவது வடதுருவத்தைத்தாண்டி வந்துவிட்டதால், பூமிக்கு அந்தப்பக்கமாக வந்துவிட்டோம். அங்கே இப்போது பகல் அல்லவா, அதனால்தான் சூரியன் இடப்பக்கம் தோன்றுகிறான் என்று புரிகிறது அவனுக்கு. உடனடியாக உற்சாமடைந்து நீலமலையைக் கடந்து மேலே சென்று மருந்து மலையைக் காண்கிறான். அங்கே உள்ள தெய்வங்களை வேண்டி, மருந்து மலையையே அலாக்காகத் தூக்கி வந்து விடுகிறான். இதிலிருந்து பார்க்கும்போது சஞ்சீவிமலை பூமிக்கு மறு பக்கத்தில், அதாவது அமெரிக்கக் கண்டத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதிலும் மலைகள் பல நிறைந்திருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்தே அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்தான் என்று கூறுபவர்கள் உண்டு.

அப்படி மருந்து மலையை வேகமாக இலங்கைக்கு கொண்டுவருகிறான் அனுமன். இப்போது பூமிக்கு இந்தப்பக்கம் இன்னும் இரவாகவே இருக்கிறது. வந்து, வானரங்களையும், லக்ஷ்மணன் முதலான அனைவரையும் உயிர்ப்பிக்கிறான். இராமனுக்கு பெரும் சந்தோஷம். அனுமனைப் புகழ்ந்து இராமன் கூறுவது.

அழியுங்கால் தரும் உதவி ஐயனே!
மொழியுங்கால் தரும் உயிரின் முற்றுமோ?
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நன் மறையும் காத்தனை


என்னே அனுமனின் பெருமை !!

1 comment:

  1. why dont you write in english or there must be eng translation...may be that can reach to greater mass

    ReplyDelete