Skip to main content

சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன





தமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.

முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள்.  நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன?

இதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்டத்தைப் பற்றியும், இச்சம்பவம் நடந்த பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட போது, சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்தன. அவர்களுடைய ஆட்சி, வடக்கில் பல்லவ சிம்ம விஷ்ணுவாலும், தெற்கில் பாண்டியன் கடுங்கோனாலும் அகற்றப்பட்ட பிறகு சனாதன சமயங்கள் மறுமலர்ச்சி அடையத் துவங்கின. ஆனால், சிம்மவிஷ்ணுவின் குமாரரான மகேந்திர பல்லவர் (பொயு 600 -630) சமண சமயத்தைத் தழுவினார். ஆகவே புத்துயிர் அடைந்த சமணர்கள், சனாதனம் மீண்டும் தலையெடுக்கக்கூடாது என்ற கடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து சைவத்திற்குத் திரும்பிய நாவுக்கரசருக்குப் பெரும் துன்பம் விளைவித்தனர். 'கற்றுணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும்', 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை' போன்ற பாடல்கள் நாவுக்கரசருக்கு சமணர்கள் இழைத்த துன்பங்களுக்கான அகச்சான்றுகளாக விளங்குகின்றன. இப்படி அவருக்குத் துன்பம் தரப்போய், எதிர்பாராதவிதமாக மகேந்திர வர்மரே சைவத்திற்குத் திரும்பும்படி ஆகிவிட்டது சமணர்களுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது.

அடுத்ததாக, பாண்டியர் பரம்பரையில் வந்த நெடுமாற பாண்டியன் (பொயு 640 - 670) சமணத்தைத் தழுவினான். ஆக, தமிழக அரசபரம்பரையில் கடைசிப் பிடியாக சமணர்களுக்கு இது இருந்தது.  அப்போது ஞானசம்பந்தரை, பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசி மதுரைக்குத் தருவித்தார். அப்படிச் செல்கின்றபோதே நாவுக்கரசர், 'பிள்ளாய்! அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை' என்று ஞானசம்பந்தருக்கு எச்சரிக்கை செய்தே அனுப்புகிறார். அவர்கள் கையால் பெரும் துன்பங்களை அனுபவித்தவர் அல்லவா.

சம்பந்தர் மதுரை வந்து சேர்ந்த பிறகு, அவரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் தீ வைத்தனர். இந்த நிகழ்வைப் பற்றி சம்பந்தரே இப்படிக் குறிப்பிடுகிறார்.

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

பாண்டியனை வெப்பு நோய் தாக்க, அதைத் தீர்க்குமாறு சம்பந்தரை வேண்டுகிறார் அரசி. இப்போது சமணர்கள் எங்களாலும் முடியும் என்று சொல்லி, அரசரது இடது பக்கத்தில் உள்ள வெப்பு நோயைத் தீர்க்க மயில்பீலியால் மந்திரம் செய்கிறார்கள். அது உதவவில்லை, எனவே 'மந்திரமாவது நீறு' என்ற பதிகத்தைப் பாடி பாண்டியனின் வலது பக்கத்திலும், பின்பு அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க உடல் முழுவதிலும் உள்ள வெப்பு நோயை சம்பந்தர் நீக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த நெடுமாறன் தாம் சைவநெறிக்கு மாறுவதாக உறுதியளிக்கிறான். இப்போது தங்கள் வசமிருந்த அரசு கைநழுவிப் போனதால் கோபமும் பொறாமையும் வந்து தாக்குகிறது சமணர்களுக்கு சம்பந்தரை வாதுக்கு அழைக்கிறார்கள். முதலில் அனல் வாதம் நடைபெறுகிறது. தனது 'தளரிள வளரொளி' என்ற பதிகத்தில் 'கொற்றவன் எதிரிடை எரியினில் இட' என்று சம்பந்தர் இந்த நிகழ்வைப் பதிவு செய்கிறார்.

அடுத்து ஏடு, ஆற்றின் போக்கை எதிர்த்துச் செல்லுமா என்ற புனல் வாதம் நடைபெறுகிறது. 'வாழ்க அந்தணர்' என்று தான் எழுதிய பதிகத்தில், அந்த ஏடு வெள்ளத்தை எதிரிட்டுச் செல்வதை

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே


என்றும் சம்பந்தர் பதிவு செய்திருக்கிறார். இப்படி இந்த வாது நிகழ்வுகளை அகச்சான்றாகப் பதிவு செய்திருக்கும் சம்பந்தர், கழுவேற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமல்ல, சமகாலத்தவரான அப்பரும், பின்னால் திருத்தொண்டர் புராணம் பாடிய சுந்தரரும் கூட இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சரி, எதிர்தரப்பான சமணர்களாவது இதைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவர்களும் இதைப் பற்றிப் பதிவுசெய்யவில்லை. இத்தனைக்கும், இந்த நிகழ்வு நடந்த பின்னர் பல நூற்றாண்டுகள் பாண்டி நாட்டிலும், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சமணர்கள் வாழ்ந்திருந்தனர். 'யாப்பருங்கலக்காரிகை' போன்ற பல நூல்களை எழுதியிருக்கின்றனர். எந்த ஒரு நூலிலும் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அண்மையில் இந்தக் கழுவேற்றம் பற்றிய நூல் ஒன்றை எழுதிய கோ. செங்குட்டுவன், சமண குருமார்களில் ஒருவரைப் பேட்டி கண்டபோது அவரும் இது தொடர்பான குறிப்புகள் ஏதும் சமணர்களிடம் இல்லை என்றே தெரிவித்திருக்கிறார். அப்படியானால், இந்தத் தொன்மம் எப்படி உருவானது ?

இந்த நிகழ்வைப் பற்றி முதலில் குறிப்பிடுபவர் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த, ராஜராஜனின் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி. 

அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கி 
அமண் கணங்கழு வேற்றி 
என்று சம்பந்தரைப் புகழ்கிறார் அவர். ஆனால் இங்கும் அப்படிக் கழுவேறிய சமணர்களின் எண்ணிக்கை பற்றி அவர் ஏதும் தகவல் தரவில்லை.  அவரது காலத்திற்குப் பின் வந்த  சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் இந்த நிகழ்வை விரிவாகவே தொகுத்து அளிக்கிறார். அதுவும் புனல் வாதத்தில் நாங்கள் தோற்றால், நாங்களே கழு ஏறுவோம் என்று சமணர்கள் பொறாமையின் காரணமாகச் சொன்னார்கள் என்று குறிக்கிறார் அவர்.

அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே ‘தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங் கழு ஏற்றுவான் இவ் வேந்தனே’ என்று சொன்னார்

அப்படித் தோற்ற பிறகு, 'எண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்' என்றும் குறிக்கிறார் சேக்கிழார்.

இங்கு எட்டாயிரம் என்பது மிகை, இடைப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு மாறுபாடுகள் அடைந்த தொன்மத்தின் விளைவே என்று சிலர் கூறுகிறார்கள்.  இந்த எண்ணாயிரவர் என்பது எட்டாயிரம் ஆட்களல்ல. மதுரையைச் சுற்றி எட்டு குன்றங்களில் வாழ்ந்த 'எண்ணாயிரம்' என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

எப்படியிருந்தாலும் 'எட்டாயிரம் பேரைக் கழுவேற்றிய' ஒரு நிகழ்வு நடந்திருக்கச் சாத்தியமேயில்லை என்பதைத் தான் இந்த குறிப்புகள் உணர்த்துகின்றன. கழுவேற்றும் நிகழ்வு நடந்திருந்தாலும், அது வாதில் ஈடுபட்ட சில சமணர்களால், அவர்களின் சபதப்படியே நடந்திருக்கும் சாத்தியமே அதிகம் என்பதையும் இது தெளிவாக்குகிறது. இதை வைத்து சனாதன தர்மத்தின் மீதும் சைவத்தின் மீதும் அவதூறு காண்பிக்கவே இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட தரப்பே மறுக்கும் இந்த நிகழ்வில் உண்மை இல்லை என்பதே நிதர்சனம்.














Comments

  1. எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு மிக்க நன்றி ஐயா. சனாதன தர்மத்தின் மீது பொய் பழியினை சுமத்தி அவதூறு பரப்பி வரும் பித்தலாட்டக்காரர்களுக்கு தெளிவான, வரலாற்றுச் சான்றுடன் கூடிய பதில். என்னை போன்ற, சரியான வரலாறு அறியாதவர்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் அருமையான பதிவு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. /இந்த எண்ணாயிரவர் என்பது எட்டாயிரம் ஆட்களல்ல. மதுரையைச் சுற்றி எட்டு குன்றங்களில் வாழ்ந்த 'எண்ணாயிரம்'/

    இந்த எண்னாயிரமா https://en.wikipedia.org/wiki/Ennayiram

    ReplyDelete
  4. தகவலுக்கு மிக்க நன்று,ஐய்யா🙏

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    எண்ணாயிரம் என்பது ஒரு ஊர் என்றும், அங்கு சமணர்கள் அதிகம் இருந்ததாகவும், 'எண்ணாயிரவர்' என்பதே சமண வணிகர்களைக் குறிக்கும் என்றும் விகிபீடியாவில் சொல்லப்பட்டுள்ளதே!

    ReplyDelete
  6. திருசிற்றம்பலம்.
    பல நுனிப்புல்லர்களுக்கு மத்தியில், தீர ஆய்வு செய்து அருமையான உண்மையை உலகுக்கு தெரிவித்தீர் ஐயா. சைவம் செய்த தவம் உங்களைப் போன்ற சமய சஞ்சீவிகள் வந்து உண்மையை உரக்கக்கூறுவது.
    ஓம் நமசிவாயம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ