Skip to main content

சிலப்பதிகாரத்தில் ஆலவாய் அண்ணலும் அம்மையும்

(சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே ஆலவாய் அண்ணலாம் சொக்கநாதரின் கோவில் பெரிதாக விளங்கியது என்ற குறிப்பு இருந்ததைச் சுட்டி ட்விட்டரில் எழுதியிருந்தேன். அப்போது மீனாட்சி அம்மனைப் பற்றிய குறிப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது அல்லவா. எனவே அதையும் சேர்த்து இங்கே எழுதியிருக்கிறேன்)



மதுரை நகருக்கு ஆலவாய் அண்ணலின் கோவிலே பிரதானம் என்பதை சிலப்பதிகாரம் இரண்டு இடங்களில் சுட்டுகின்றது. கோவலனும் கண்ணகியும் மதுரை எல்லையை அடைந்து வைகையைக் கடக்கும் முன்பே கோவிலில் இருந்து எழும் ஓசைகள் அவர்களுக்குக் கேட்கத் தொடங்கிவிடுகின்றன. இது புறஞ்சேரி இறுத்த காதையில் வருகிறது.
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலைமுரசக் கனைகுரல் ஓதையும்


நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்
” அரும் தெறற்கடவுள்,அதாவது அரிதான அழித்தல் தொழிலில் வல்ல சிவபெருமானின் அகன்ற பெருங் கோவில் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.இப்போது போலவே பெரும் கோவிலாக அது இருந்திருக்கிறது. அங்கே நான்கு மறைகளையும் அந்தணர் ஓதுகின்றனர். முனிவர்கள் மந்திரங்களை ஓதுகின்றனர்.


இது தவிர ஊர்காண் காதையிலும் முதல் கோவிலாக "நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்" என்று நெற்றியில் கண்ணுடைய ஆலவாய் அண்ணலின் கோவிலையே பிரதானமாகக் கூறுகிறார் இளங்கோ அடிகள்.





அப்போது அம்மனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்றால், கட்டுரைக் காதையில், கண்ணகி மதுரையை எரித்த பிறகு, மதுராபதித் தெய்வமாக, மீனாட்சி அம்மையாக அவள் முன் தோன்றும் சிறப்பைச் சொல்கிறார் இளங்கோவடிகள். பாடலைப் பார்ப்போம்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் முகத்தி
கடை எயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி

இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி 

தெய்வங்களை வர்ணிக்கும்போது பாதாதி கேசம், அதாவது அடிமுதல் முடிவரை அல்லது கேசாதிபாதம் - முடிமுதல் அடிவரை என்று இரு முறைகளைக் கவிகள் பின்பற்றுவர். இங்கே இளங்கோவடிகள் கேசாதிபாதம் என்ற முறையைக் கையாள்கிறார். 

அம்மன் எப்படி இருக்கிறாள் என்றால் சடையும் அந்தச் சடையில் பிறையும் தாங்கிய முடியினை உடையவளாக, முகத்தில் சிரிப்பு அரும்பும் போது அந்தப் பவளச் செவ்வாயில் கடைவாய்ப் பல் தெரிகின்ற தோற்றம் உடையவளாக, நிலவின் நிறத்தை உடைய முத்துப்போன்ற பற்களை உடையவளாக இருக்கிறாளாம். 

இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்

இங்கே அர்த்தநாரீஸ்வர வடிவமாக அம்மையைக் காண்கிறார் இளங்கோ. இடப்பக்கம் நீல நிறம் ஆனால் வலப்பக்கமோ ஈசனுக்குரிய பொன் நிறம். 

இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
வலக் கை அம் சுடர்க் கொடு வாள் பிடித்தோள்
வலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால் 
தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்

இடக்கையில் தாமரையையும் வலக்கையில் மழுவையும் தாங்கியவள். வலக்காலில் கழலையும் இடக்காலில் சிலம்பையும் கொண்டவள். 


கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன், 
பொன்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்தி


கொற்கையின் தலைவனாகவும், குமரியின் துறையை ஆள்பவனும், இமயத்தை வரம்பாக, எல்லையாகக் கொண்டவனும், பொதிகை மலையை உடையவனுமாகிய பாண்டிய குலத்தின் முதல் தலைவி என்று மதுராபுரித் தெய்வமாகிய மீனாட்சி அம்மையை வாழ்த்துகிறார் இளங்கோவடிகள். 

பாண்டியர் குலத்தின் தன்மையையும், பாண்டியனின் நீதி தவறாத முறையையும், கண்ணகிக்கு இந்தத் தீங்கு நிகழ்ந்தது ஊழ் வினையாலேதான் என்று அத் தெய்வம் கூறி கண்ணகிக்கு வழி காட்டுதல் இந்தக் காதையில் அடுத்துச் சொல்லப்படுகிறது.










Comments

  1. சிம்மக்கல் சொக்கநாதர் கோவிலைப் பற்றி இலக்கியங்களில் குறிப்புண்டா?
    'ஆதி சொக்கநாதர்' அவர் தான் என்று சொல்வழக்கில் குறிப்பிடுவார்கள். என் சின்னஞ்சிறு வாசிப்பில் எப்போதுமே தாமரைக்கு நடுவில் உள்ளது தான் கோவில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. Hence my question.

    ReplyDelete
    Replies
    1. திருவிளையாடல் புராணத்தில் பழைய சொக்கநாதர் கோவிலைப் பற்றிய குறிப்பு உண்டு. சிற்ப சாஸ்திரத்தின் படி ஊருக்கு ஈசான மூலையில் சிவன் கோவில் இருக்கவேண்டும் என்பதனால் அந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்

      Delete
  2. சிலப்பதிகாரத்தில் திருவிளையாடல் குறிப்பிடப்படுகிறது எனில் எந்த படத்தில் குறிப்பிடப்படுகிறது தெளிவுபடுத்தவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ