Skip to main content

உவணச் சேவல் நியமம்

உலகில் நீண்ட நெடு வரலாற்றை உடைய தொல் நகரங்களில் ஒன்று மதுரை. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான நகர் இது. நகரின் எல்லைகள் அவ்வப்போது விரிந்தும் சுருங்கியும் வந்திருந்தாலும், அதன் மையப்பகுதி அதிகமாக மாறவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரில் இரு ஆலயங்கள் தனிச்சிறப்புடையனவாகத் திகழ்ந்தன. அதில் 'மழுவாள் நெடியோன்' என்று மதுரைக் காஞ்சி போற்றும் ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அங்கே திருமாலின் கோவில் எங்கே இருந்தது என்பதை ஆராய்வோம்.




பண்டைக்காலத்தில் மதுரையின் கோட்டை தற்போது ஆவணி மூல வீதி என்று அழைக்கப்படும் வீதியைச் சுற்றியே இருந்தது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையும் சீருர், பூவின் 
இதழகத் தனைய தெருவம்; 
இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

என்ற பரிபாடலின் வரிகள் பூவின் இதழ்களைப் போல வட்டமான தெருக்கள் இருந்தனவென்றும் நடுநாயகமாக ஆலவாய் அண்ணல் கோவில் இருந்தது என்றும் விளக்குகிறது.

இந்தக் கோட்டையின் வெளிப்புறத்தில், நகரின் தென்மேற்கு மூலையில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதி அமைந்திருந்தது. இங்கே தான் திருமாலுக்குப் பெரிய கோவில் ஒன்று அமைந்திருந்தது. சிலப்பதிகாரம் 'உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்'  அதாவது கருடக் கொடி உடையோன் நியமம் என்று கூறுவது இந்தக் கோவில்தான். நியமம் என்பதற்கு கோவில் என்ற பொருள் உண்டு. 

இருந்தையூரில் அமர்ந்த பெருமானைப் பற்றிப் பரிபாடல் பாடும்போது. 

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ


அதாவது வானில் இருந்து மழை பொழிந்து, அதன்மூலம் மலையிலிருந்து நீர் பெருகி வந்து மதுரையை எதிர்கொள்ளும் ஆற்றின் துறையில் உள்ள இருந்தையூரில் அமர்ந்திருக்கும் செல்வனே என்று திருமாலைப் போற்றுகிறது இந்தப் பாடல். மேலும், இந்த ஊரில் ஒரு பக்கம் மலையும், மற்றொரு பக்கம் வயல்களும் இன்னொரு பக்கம் நகரமும் உள்ளது என்றும் அது குறிக்கிறது. இந்த வருணனைக்குச் சரியாகப் பொருந்தி வருவது அக்கால மதுரையில் புறநகரில் இருந்ததும், திருமால் அமர்ந்த கோலத்தில் அருள் செய்து வருவதும், இருந்தையூர் என்ற இடத்தில் உள்ளதால் இருந்த வளமுடையார் என்ற பெருமை பெற்றதுமான தற்போதைய கூடலழகர் கோவில் ஆகும்.





இப்போது தெற்கு மாசிவீதி, மேல மாசி வீதி சந்திப்பிலிருந்து சில அடிகள் தூரமே உள்ள இந்தக் கோவில் அக்காலத்தில் பெரும் கோவிலாக இருந்திருக்கிறது. நாயக்கர் காலத்தில் மதுரைக் கோட்டை விரிவடைந்து அதன் உள் சுவர் தற்போதைய மாசி வீதிகளை ஒட்டியும் வெளிச்சுவர் தற்போதைய வெளி வீதிகளை ஒட்டியும் கட்டப்பட்ட போது இரண்டு சுவர்களுக்கும் இடையே இந்தக் கோவில் வந்துவிட்டது. அடுத்து ஆங்கில ஆட்சியில், வடம்போக்கித் தெருக்களும், மாரட் வீதியும் வந்தவுடன் இந்தக் கோவிலின் பகுதிகள் துண்டாடப்பட்டு விட்டன. இந்தக் கோவிலின் பகுதிகளாக இருந்த சக்கரத்தாழ்வார் கோவில், ஹனுமார் கோவில், மதனகோபால சுவாமி கோவில், வீரராகவப் பெருமாள் கோவில் ஆகியவை தனிக்கோவில்கள் ஆகிவிட்டன. (பார்க்க படம்) 






தற்போது 108 திருப்பதிகளில் ஒன்றாகப் பெருமை பெற்று விளங்கும் மதுரை கூடலழகப் பெருமான் கோவிலின் வரலாறு இதுதான். மதுரை நகரில் ஆலவாய் அண்ணலின் கோவிலும் இருந்தவளமுடையாரான கூடலழகப் பெருமானின் கோவிலும் இருபெரும் ஆலயங்களாகத் திகழ்ந்தன என்பதைத்தான் மதுரைக்காஞ்சி 'ஓவுக் கண்டென்ன இரு பெரு நியமத்து' என்று சுட்டிப் பாடுகிறது. 






Comments

  1. அருமையான பதிவு. சங்க இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள் கூறி எடுத்துரைத்த விதம் ,,👌👌

    ReplyDelete
  2. வழக்கம்போல, புது தகவல்களோடு சிறப்பான இடுகை. நன்றி.

    / ஒரு பக்கம் மலையும்/

    எந்த மலையை குறிக்கிறது?

    இன்மையிலும் நன்மை தருவார் கோவில் மிகவும் பிற்பட்ட கால கோவிலோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் இருக்கவேண்டும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ