Saturday 9 October 2021

ஆசீவகத் திரிபுகள்

ஒரு டிவிட்டர் விவாதத்தின் போது நண்பர் ஒருவர் இந்தப் பக்கத்தை தமிழகத்தின் தொல்மதம் ஆசீவகம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டினார். அதாவது ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசர் தமிழ்நாட்டுக்காரராம். இதை எழுதியவர் பெரும் ஆராய்ச்சியாளராம். விக்கி பக்கங்களிலெல்லாம் இதைச் சுட்டுகிறார்களாம். அந்தப் பக்கம் கீழே 



சரி அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவருக்கு ஒரு புறநானூறு பாடல் கிடைத்திருக்கிறது. அதில் அறப்பெயர்ச் சாத்தன் என்ற கொடையாளியின் பெயர் கிடைக்கிறது. அவர் பிடவூரைச் சேர்ந்தவர். அடுத்து தற்போது திருப்பட்டூர் என்று வழங்கப்படும் பிடவூரில் ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான். இரண்டுக்கும் சேர்ந்து முடிச்சுப்போட்டு அந்த அறப்பெயர்ச் சாத்தன்தான் இந்த ஐயனார். அவரே மற்கலி கோசர் என்று ஒரே போடாகப் போடுகிறார். இதில் இரண்டு மூன்று கல்வெட்டுகளையும் காட்டுகிறார். 

இதைக் கொஞ்சம் ஆராயலாமே என்று புகுந்தால், அவர் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் 395ஐ எழுதியவர் நக்கீரர். சங்க காலத்துப் புலவரான நக்கீரர் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப் படையையும் எழுதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சமகாலத்தவர். இந்த நெடுஞ்செழியனின் காலத்தைப் பார்த்தால் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். ஆக நக்கீரரும் அதே காலத்தைச் சேர்ந்தவராகிறார். 

அதேபோல, இந்தப் புறநானூற்றுப் பாடலில் தித்தன் என்ற சோழ அரசன் குறிப்பிடப்படுகிறார். சங்க காலத்து இலக்கியங்களில் முதன்முதலில் குறிப்பிடப்படும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி (மாமூலனாரால் பாடப்பட்டவன்) காலத்தில் இருந்து கணக்கிட்டால் இந்த மன்னனும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே இருக்கக்கூடும். இதுவும் இந்தப் பாடலின் காலத்தை உறுதி செய்கிறது. ஆகவே இந்தப் பாடலில் வரும் வள்ளலான அறப்பெயர்ச் சாத்தன் என்பவரும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும். 

ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசரோ பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமண சமயத்தின் தீர்ந்தங்கரரான மகாவீரரின் சமகாலத்தவர். அவரோடு இணைந்து பயணம் செய்தவர் என்றெல்லாம் சமண நூல்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க 2ம் நூற்றாண்டின் அறப்பெயர்ச் சாத்தன் எப்படி மற்கலி கோசராக இருந்திருக்க முடியும். அப்படி ஒரு சமயத்தை உருவாக்கியவரின் பெயர் ஏன் தமிழ் இலக்கியங்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை ? 

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறது என்று மேலும் கவனித்தால் சாத்தன் உள்ள பிடவூர் உறையூரின் கிழக்கில் (உறந்தைக் குணாது) இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

ஐயனார் கோவில் உள்ள திருப்பட்டூரோ உறையூரின் வடக்கில் இருக்கிறது. நக்கீரர் 'திக்குத் தெரியாமல்' ஏதாவது எழுதிவிட்டாரா என்ன? 

அவர் உதிர்த்த மற்றொரு முத்து "பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது"

அட அப்படியா  என்று அடுத்து அவர் சுட்டிய கல்வெட்டுகளைப் பார்த்தால் அவையெல்லாம் பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர்கள் காலத்துக் கல்வெட்டுகள். அவற்றில் ஐயனார் என்ற பெயரே இல்லை. 

'திருப்பிடவூர் நாட்டுத் தேவதான பிரமதேய திருப்பிடவூர் உடைய பிள்ளையாற்கு....'

தேவதானம் என்பது சைவ மரபுக் கோவில்களைக் குறிக்கும் செயல். அப்படியென்றால் இது சிவன் கோவிலோடு இணைந்த கோவில்தானே. பிள்ளையார் என்பது சிவனின் மகனாக ஐயனாரைச் சொல்வது என்று எடுத்துக்கொண்டாலும் ஆசீவகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு ? இந்தக் கல்வெட்டுகள் எதிலும் ஐயனார் என்ற பெயர் மட்டுமல்ல மற்கலி கோசர் அல்லது சாத்தன் என்ற பெயர் கூட வரவில்லை என்பதைக் கவனியுங்கள். இது எப்படி ஒரு ஆதாரமாகும் என்பதும் விளங்கவில்லை. 

சரி வெள்ளானைச் சுருக்கம் என்ன சொல்கிறது என்பதையாவது பார்ப்போம் என்று அதைப் படித்தால் சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலும் (வெள்ளானை) சேரமான் பெருமாள் நாயனார் குதிரையிலும் ஏறி கைலாயம் செல்கிறார்கள். அங்கே சிவபெருமானை வணங்கி எழுந்த பிறகு, சேரமான் பெருமாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் இறைவனைப் பாடுமாறு விண்ணப்பிக்கிறார் 

சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் 'திருஉலாப் புறம்' அன்று
சாரல் வெள்ளி யங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர்; நலத்தாலே.

திரு உலாப்புறம் என்ற அந்தப் பாடலை கைலாய மலையில் கேட்ட சாத்தனார் புவியில் வந்து திருப்பிடவூரில் அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு உரைத்தார் என்கிறது வெள்ளானைச் சருக்கம். பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர் கைலாயம் சென்ற பிறகுதான் அந்த சாத்தனார் இந்த ஊருக்கு வருகிறார் என்று சொல்கிறார் சேக்கிழார். அப்படியிருக்கு பொயுமு 5ம் நூற்றாண்டிலேயே அறப்பெயர்ச் சாத்தன் என்ற மற்கலி கோசர் இருந்ததற்கான ஆதாரமாக இது எப்படி உள்ளது? 

உண்மையில் சாத்தன் என்ற பெயர் சங்ககாலத்தில் புழங்கிய பெயர்களில் ஒன்று சீத்தலைச் சாத்தனார், சாத்தந்தையார், கருவூர் பூதஞ்சாத்தனார், அழிசி நச்சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் என்று பல பெயர்களை நாம் அக்காலத்தில் பார்க்கலாம் இதில் அறப்பெயர்ச் சாத்தனார் மட்டும் ஏன் மற்கலி கோசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  என்று தெரியவில்லை. 

தவிர மற்கலி கோசர் தமிழகத்தில் சமாதி அடைந்தது சித்தன்னவாசல் என்றும் அடித்துவிட்டிருக்கிறார். சித்தன்னவாசல் பொயு 2ம் நூற்றாண்டில் எழுந்த சமணர் பள்ளி. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் வளர்ந்த சமண மதங்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒன்று. இடைக்காலப்பாண்டியர் காலத்தில் பாண்டியன் ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபனின் அதிகாரிகளால் விரிவுபடுத்தப்பட்ட இடம். அங்கே போய் பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரின் சமாதி இருந்தது என்று எந்த ஆதாரத்தை வைத்து இவர் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. 

இப்படிக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத, ஆதாரம் கொஞ்சம் கூட இல்லாத ஒன்றை நிறுவ முற்பட்டு அதை ஆராய்ச்சி என்று காட்டுவது இங்கே தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற 'ஆராய்ச்சியாளர்களுக்கு' எப்படியோ அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது என்பது பெரும் கொடுமை. 

No comments:

Post a Comment