Skip to main content

ஆசீவகத் திரிபுகள்

ஒரு டிவிட்டர் விவாதத்தின் போது நண்பர் ஒருவர் இந்தப் பக்கத்தை தமிழகத்தின் தொல்மதம் ஆசீவகம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டினார். அதாவது ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசர் தமிழ்நாட்டுக்காரராம். இதை எழுதியவர் பெரும் ஆராய்ச்சியாளராம். விக்கி பக்கங்களிலெல்லாம் இதைச் சுட்டுகிறார்களாம். அந்தப் பக்கம் கீழே 



சரி அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவருக்கு ஒரு புறநானூறு பாடல் கிடைத்திருக்கிறது. அதில் அறப்பெயர்ச் சாத்தன் என்ற கொடையாளியின் பெயர் கிடைக்கிறது. அவர் பிடவூரைச் சேர்ந்தவர். அடுத்து தற்போது திருப்பட்டூர் என்று வழங்கப்படும் பிடவூரில் ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான். இரண்டுக்கும் சேர்ந்து முடிச்சுப்போட்டு அந்த அறப்பெயர்ச் சாத்தன்தான் இந்த ஐயனார். அவரே மற்கலி கோசர் என்று ஒரே போடாகப் போடுகிறார். இதில் இரண்டு மூன்று கல்வெட்டுகளையும் காட்டுகிறார். 

இதைக் கொஞ்சம் ஆராயலாமே என்று புகுந்தால், அவர் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் 395ஐ எழுதியவர் நக்கீரர். சங்க காலத்துப் புலவரான நக்கீரர் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப் படையையும் எழுதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சமகாலத்தவர். இந்த நெடுஞ்செழியனின் காலத்தைப் பார்த்தால் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். ஆக நக்கீரரும் அதே காலத்தைச் சேர்ந்தவராகிறார். 

அதேபோல, இந்தப் புறநானூற்றுப் பாடலில் தித்தன் என்ற சோழ அரசன் குறிப்பிடப்படுகிறார். சங்க காலத்து இலக்கியங்களில் முதன்முதலில் குறிப்பிடப்படும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி (மாமூலனாரால் பாடப்பட்டவன்) காலத்தில் இருந்து கணக்கிட்டால் இந்த மன்னனும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே இருக்கக்கூடும். இதுவும் இந்தப் பாடலின் காலத்தை உறுதி செய்கிறது. ஆகவே இந்தப் பாடலில் வரும் வள்ளலான அறப்பெயர்ச் சாத்தன் என்பவரும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும். 

ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசரோ பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமண சமயத்தின் தீர்ந்தங்கரரான மகாவீரரின் சமகாலத்தவர். அவரோடு இணைந்து பயணம் செய்தவர் என்றெல்லாம் சமண நூல்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க 2ம் நூற்றாண்டின் அறப்பெயர்ச் சாத்தன் எப்படி மற்கலி கோசராக இருந்திருக்க முடியும். அப்படி ஒரு சமயத்தை உருவாக்கியவரின் பெயர் ஏன் தமிழ் இலக்கியங்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை ? 

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறது என்று மேலும் கவனித்தால் சாத்தன் உள்ள பிடவூர் உறையூரின் கிழக்கில் (உறந்தைக் குணாது) இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

ஐயனார் கோவில் உள்ள திருப்பட்டூரோ உறையூரின் வடக்கில் இருக்கிறது. நக்கீரர் 'திக்குத் தெரியாமல்' ஏதாவது எழுதிவிட்டாரா என்ன? 

அவர் உதிர்த்த மற்றொரு முத்து "பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது"

அட அப்படியா  என்று அடுத்து அவர் சுட்டிய கல்வெட்டுகளைப் பார்த்தால் அவையெல்லாம் பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர்கள் காலத்துக் கல்வெட்டுகள். அவற்றில் ஐயனார் என்ற பெயரே இல்லை. 

'திருப்பிடவூர் நாட்டுத் தேவதான பிரமதேய திருப்பிடவூர் உடைய பிள்ளையாற்கு....'

தேவதானம் என்பது சைவ மரபுக் கோவில்களைக் குறிக்கும் செயல். அப்படியென்றால் இது சிவன் கோவிலோடு இணைந்த கோவில்தானே. பிள்ளையார் என்பது சிவனின் மகனாக ஐயனாரைச் சொல்வது என்று எடுத்துக்கொண்டாலும் ஆசீவகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு ? இந்தக் கல்வெட்டுகள் எதிலும் ஐயனார் என்ற பெயர் மட்டுமல்ல மற்கலி கோசர் அல்லது சாத்தன் என்ற பெயர் கூட வரவில்லை என்பதைக் கவனியுங்கள். இது எப்படி ஒரு ஆதாரமாகும் என்பதும் விளங்கவில்லை. 

சரி வெள்ளானைச் சுருக்கம் என்ன சொல்கிறது என்பதையாவது பார்ப்போம் என்று அதைப் படித்தால் சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலும் (வெள்ளானை) சேரமான் பெருமாள் நாயனார் குதிரையிலும் ஏறி கைலாயம் செல்கிறார்கள். அங்கே சிவபெருமானை வணங்கி எழுந்த பிறகு, சேரமான் பெருமாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் இறைவனைப் பாடுமாறு விண்ணப்பிக்கிறார் 

சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் 'திருஉலாப் புறம்' அன்று
சாரல் வெள்ளி யங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர்; நலத்தாலே.

திரு உலாப்புறம் என்ற அந்தப் பாடலை கைலாய மலையில் கேட்ட சாத்தனார் புவியில் வந்து திருப்பிடவூரில் அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு உரைத்தார் என்கிறது வெள்ளானைச் சருக்கம். பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர் கைலாயம் சென்ற பிறகுதான் அந்த சாத்தனார் இந்த ஊருக்கு வருகிறார் என்று சொல்கிறார் சேக்கிழார். அப்படியிருக்கு பொயுமு 5ம் நூற்றாண்டிலேயே அறப்பெயர்ச் சாத்தன் என்ற மற்கலி கோசர் இருந்ததற்கான ஆதாரமாக இது எப்படி உள்ளது? 

உண்மையில் சாத்தன் என்ற பெயர் சங்ககாலத்தில் புழங்கிய பெயர்களில் ஒன்று சீத்தலைச் சாத்தனார், சாத்தந்தையார், கருவூர் பூதஞ்சாத்தனார், அழிசி நச்சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் என்று பல பெயர்களை நாம் அக்காலத்தில் பார்க்கலாம் இதில் அறப்பெயர்ச் சாத்தனார் மட்டும் ஏன் மற்கலி கோசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  என்று தெரியவில்லை. 

தவிர மற்கலி கோசர் தமிழகத்தில் சமாதி அடைந்தது சித்தன்னவாசல் என்றும் அடித்துவிட்டிருக்கிறார். சித்தன்னவாசல் பொயு 2ம் நூற்றாண்டில் எழுந்த சமணர் பள்ளி. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் வளர்ந்த சமண மதங்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒன்று. இடைக்காலப்பாண்டியர் காலத்தில் பாண்டியன் ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபனின் அதிகாரிகளால் விரிவுபடுத்தப்பட்ட இடம். அங்கே போய் பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரின் சமாதி இருந்தது என்று எந்த ஆதாரத்தை வைத்து இவர் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. 

இப்படிக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத, ஆதாரம் கொஞ்சம் கூட இல்லாத ஒன்றை நிறுவ முற்பட்டு அதை ஆராய்ச்சி என்று காட்டுவது இங்கே தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற 'ஆராய்ச்சியாளர்களுக்கு' எப்படியோ அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது என்பது பெரும் கொடுமை. 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ