Skip to main content

தமிழ் அணங்கு என்னும் அபத்தம்






தமிழ்த்தாயை அணங்காகச் சித்தரிக்கும் படம் ஒன்றை எல்லாரும் பார்த்திருப்பீர்கள். தமிழைப் பற்றிய புரிதல் கொஞ்சம் கூட இல்லாத சித்தரித்தல் அது. இதில் பாரதி பாரதமாதாவை சினம் கொண்டவளாகப் பாடியதால், ஏன் தமிழ்த்தாயும் அப்படி இருக்கக்கூடாது என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்நம்முடைய மரபில் ஒவ்வொரு உருவகத்திற்கும் அதற்கான காரணம் உண்டு. பாரதமாதா சினம் கொண்டது, தான் அடிமைத்தளையில் சிக்கித்தவிக்கும் போது தம்முடைய புதல்வர்கள் அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோழைகளாக இருக்கின்றார்களே என்பதன் காரணமாக (பாரதியின் பார்வையில்). சாந்தமே உருவான அன்னை காளி உருக்கொண்டது தீயவற்றை அழிப்பதற்கு. சாதாரணமாக நாமே கோபத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் காரணமில்லாமல் கோபப்பட்டால் வீட்டில் உள்ளவர்களேஒரு மாதிரிபார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். தமிழன்னைக்குக் கோபம் கொள்ள இப்போது எந்தக் காரணமும் இல்லை. அப்படியே கோபம் அடைந்தாலும் தலைவிரி கோலமாக வெள்ளை ஆடை உடுத்தெல்லாம் கோபமடையமாட்டாள். அது தமிழ் மரபில் அமங்கலத்தையே குறிக்கிறது. 


சரி அணங்கிற்கு வருவோம். தமிழ்த்தாய் எப்படி அணங்காக ஆக முடியும் ? அணங்கு என்றால் என்ன?. நம்முடைய சங்க இலக்கியங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். 


மலையில் உறையும் தெய்வத்திற்கு அணங்கு என்று பெயர். அந்தத் தெய்வம் மலையைக் காக்கும் பணியைப் புரிகின்றனவாம். 


அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்

பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை

அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண் (அகநானூறு)


இப்படி மலையைக் காக்கும் கடவுள் பெரும் வலிமை படைத்தவையாக இருந்ததாம். தமிழ் மரபில் காக்கும் தெய்வங்களும் உண்டு வருத்தும் தெய்வங்களும் உண்டு. இந்த அணங்கு என்பது வருத்தும் (துன்புறுத்தும்) தெய்வம். 


அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர் (மதுரைக் காஞ்சி)


கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக்காரிகை காண்மின் (பரிபாடல்)


அதாவது பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் குணமுடையது இந்த அணங்கு என்ற தெய்வம். அதிலும் இளம்பெண்களைப் பிடித்துத் துன்புறுத்தக்கூடியது. 


மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை (அகநானூறு) 


மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் 

அணங்கு என அஞ்சுவர் சிறு குடியோரே (கலித்தொகை)


இரவில் வந்தால் மலையில் உறையும் அணங்கு என்று அஞ்சுவராம் குடிமக்கள். இப்படி அச்சமளிக்கும் அணங்கு வீரர்களின் ஆயுதங்களில் அமர்ந்து போரில் எதிரிகளைக் கொன்று குவித்து வெற்றி தேடியும் தருமாம் 


அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த

உரவு வில்மேல் அசைத்த கையை (கலித்தொகை)


இப்படி மற்றவர்களைத் தாக்கித் துன்புறுத்தி, இளம்பெண்களைப் பீடித்து, போர்த்தொழிலில் எதிரிகளைக் கொல்லும் குணமுடையஅணங்காக’, மென்மொழியாளான தமிழ்த்தாயைச் சித்தரிப்பது எவ்வளவு கொடுமை. கல்வியை அளிக்கும் கலைமகளாகத் தமிழ்த்தாயைச் சித்தரிப்பதே நம் மரபு. கம்பனின் புகழை உலகெலாம் பரப்பிய கம்பன் அடிப்பொடி சா கணேசன், தமிழ்த்தாய்க்காக ஒரு கோவில் அமைத்தார். அதில் உள்ள தமிழ்த்தாயின் உருவமே மேலே காண்பது. அப்படிப்பட்ட தமிழ்த்தாயே நாம் வணங்கக் கூடியவள்.


(பி.கு. இதற்கிடையில் அந்தப் படம் தூமவதி என்ற தெய்வத்தின் உருவம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தூமாவதி என்ற தெய்வத்தைப் பற்றி கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்)

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ