Saturday 9 April 2022

தமிழ் அணங்கு என்னும் அபத்தம்






தமிழ்த்தாயை அணங்காகச் சித்தரிக்கும் படம் ஒன்றை எல்லாரும் பார்த்திருப்பீர்கள். தமிழைப் பற்றிய புரிதல் கொஞ்சம் கூட இல்லாத சித்தரித்தல் அது. இதில் பாரதி பாரதமாதாவை சினம் கொண்டவளாகப் பாடியதால், ஏன் தமிழ்த்தாயும் அப்படி இருக்கக்கூடாது என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்நம்முடைய மரபில் ஒவ்வொரு உருவகத்திற்கும் அதற்கான காரணம் உண்டு. பாரதமாதா சினம் கொண்டது, தான் அடிமைத்தளையில் சிக்கித்தவிக்கும் போது தம்முடைய புதல்வர்கள் அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோழைகளாக இருக்கின்றார்களே என்பதன் காரணமாக (பாரதியின் பார்வையில்). சாந்தமே உருவான அன்னை காளி உருக்கொண்டது தீயவற்றை அழிப்பதற்கு. சாதாரணமாக நாமே கோபத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் காரணமில்லாமல் கோபப்பட்டால் வீட்டில் உள்ளவர்களேஒரு மாதிரிபார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். தமிழன்னைக்குக் கோபம் கொள்ள இப்போது எந்தக் காரணமும் இல்லை. அப்படியே கோபம் அடைந்தாலும் தலைவிரி கோலமாக வெள்ளை ஆடை உடுத்தெல்லாம் கோபமடையமாட்டாள். அது தமிழ் மரபில் அமங்கலத்தையே குறிக்கிறது. 


சரி அணங்கிற்கு வருவோம். தமிழ்த்தாய் எப்படி அணங்காக ஆக முடியும் ? அணங்கு என்றால் என்ன?. நம்முடைய சங்க இலக்கியங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். 


மலையில் உறையும் தெய்வத்திற்கு அணங்கு என்று பெயர். அந்தத் தெய்வம் மலையைக் காக்கும் பணியைப் புரிகின்றனவாம். 


அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்

பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை

அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண் (அகநானூறு)


இப்படி மலையைக் காக்கும் கடவுள் பெரும் வலிமை படைத்தவையாக இருந்ததாம். தமிழ் மரபில் காக்கும் தெய்வங்களும் உண்டு வருத்தும் தெய்வங்களும் உண்டு. இந்த அணங்கு என்பது வருத்தும் (துன்புறுத்தும்) தெய்வம். 


அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர் (மதுரைக் காஞ்சி)


கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக்காரிகை காண்மின் (பரிபாடல்)


அதாவது பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் குணமுடையது இந்த அணங்கு என்ற தெய்வம். அதிலும் இளம்பெண்களைப் பிடித்துத் துன்புறுத்தக்கூடியது. 


மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை (அகநானூறு) 


மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் 

அணங்கு என அஞ்சுவர் சிறு குடியோரே (கலித்தொகை)


இரவில் வந்தால் மலையில் உறையும் அணங்கு என்று அஞ்சுவராம் குடிமக்கள். இப்படி அச்சமளிக்கும் அணங்கு வீரர்களின் ஆயுதங்களில் அமர்ந்து போரில் எதிரிகளைக் கொன்று குவித்து வெற்றி தேடியும் தருமாம் 


அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த

உரவு வில்மேல் அசைத்த கையை (கலித்தொகை)


இப்படி மற்றவர்களைத் தாக்கித் துன்புறுத்தி, இளம்பெண்களைப் பீடித்து, போர்த்தொழிலில் எதிரிகளைக் கொல்லும் குணமுடையஅணங்காக’, மென்மொழியாளான தமிழ்த்தாயைச் சித்தரிப்பது எவ்வளவு கொடுமை. கல்வியை அளிக்கும் கலைமகளாகத் தமிழ்த்தாயைச் சித்தரிப்பதே நம் மரபு. கம்பனின் புகழை உலகெலாம் பரப்பிய கம்பன் அடிப்பொடி சா கணேசன், தமிழ்த்தாய்க்காக ஒரு கோவில் அமைத்தார். அதில் உள்ள தமிழ்த்தாயின் உருவமே மேலே காண்பது. அப்படிப்பட்ட தமிழ்த்தாயே நாம் வணங்கக் கூடியவள்.


(பி.கு. இதற்கிடையில் அந்தப் படம் தூமவதி என்ற தெய்வத்தின் உருவம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தூமாவதி என்ற தெய்வத்தைப் பற்றி கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்)

No comments:

Post a Comment