Skip to main content

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

திருப்பாவைக்கு அருமையாகவும் வித்தியாசமாகவும் பிஏகே அவர்கள் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார். அதில் இன்று படித்த உரை சற்று இடறியது. இன்றைய பாசுரத்திற்குப் பொருள் சொல்லும் போது ஆண்டாளின் காலத்தைப் பற்றி அறிஞர் மு ராகவய்யங்கார் எழுதிய குறிப்பை அவர் தந்திருக்கிறார். அதில் "பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார்" என்றும் "வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731" என்றும் உள்ளது.



நான் ராகவய்யங்கார் கட்டுரையைப் படித்ததில்லை என்பதால் இந்தக் குறிப்புகளில் சில குழப்பங்களைக் காண நேர்ந்தது. பாண்டியன் (பராந்தக) நெடுஞ்சடையனும் சீமாறன் சீவல்லபனும் ஒரே ஆள் இல்லை என்பது ஒரு புறம். பொயு 731ல் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் ராஜசிம்ம பாண்டியன். அவனும் சரி, அவன் தந்தை கோச்சடையன் ரணதீரனும் சரி வைணவர்களாக அறியப்படவில்லை. சொல்லப்போனால் கோச்சடையன் காலத்தில் சுந்தரர் மதுரைக்கு வந்ததும், அவரோடு ரணதீரன் பல கோவில்களுக்குச் சென்றதும் பெரிய புராணத்தில் சொல்லப்படுகிறது. பெரியாழ்வாரும் சரி, ஶ்ரீ ஆண்டாளும் ஶ்ரீமாற ஶ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் (பொயு 835 - 862) வாழ்ந்தவர்கள் என்பது நீலகண்ட சாஸ்திரி, கோபிநாத ராவ், நாகசாமி போன்ற ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தெளிவாக கல்வெட்டுச் சான்றுகளுடன் என்னுடைய பாண்டியர் வரலாறு புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க, வெள்ளி ஒரு புறம் எழ, வியாழன் மேற்கு திசையில் மறைவது என்ற நிகழ்வைப் பார்ப்போம். வெள்ளி, அதாவது சுக்கிரன், சூரியனுக்கு அருகிலேயே செல்லும் ஒரு கிரகம். பெரும்பாலும் சூரியனுக்கு முதல் ராசியிலோ, அதனுடனோ அல்லது சூரியனுக்கு அடுத்த ராசியிலோதான் வெள்ளி இருக்கும். இதனால்தான் சில சமயம் வெள்ளி அதிகாலை கிழக்குத் திசையிலும் சில சமயம் மாலையில் மேற்கு திசையிலும் தென்படுகிறது. அப்படி அதிகாலையில் வெள்ளி உதிக்கும்போது வியாழன் மேற்கில் மறைய வேண்டுமானால் அது ஆறு ராசிகள் முன்னால் இருக்கவேண்டும். மார்கழியில் சூரியன் இருப்பது தனுசு ராசியில். அதற்கு முந்தைய ராசியான விருச்சிகத்தில் வெள்ளி இருக்கும்போது, வியாழன் மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெறும். 

பொயு 731, டிசம்பர் 18ம் தேதியில் வியாழன் ரிஷபத்திலும் வெள்ளி விருச்சிகத்திலும் இருப்பதால் இந்த நிகழ்வு நடந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் இந்தத் தேதியில் மேற்சொன்ன காலக்கணக்கைத் தவிர மேலும் சில சிக்கல்கள் உள்ளன. பொயு 731, டிசம்பர் 18 என்பது மார்கழி 19ம் நாள். இன்றைய பாட்டோ மார்கழி 13ம் நாள் பாட்டு. ஒரு வேளை எண்ணிக்கை பின்னாளில் மாறியிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் அவ்வருடம் மார்கழி தேய்பிறை அஷ்டமியில் பிறந்திருக்கிறது. அப்படியிருக்க அதை மதி 'நிறைந்த' நன்னாள் என்று ஆண்டால் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறி.

இப்போது ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் காலத்தில் எப்போது இந்நிகழ்வு நடந்தது என்பதைப் பார்ப்போம். பொயு 835லிருந்து பொயு 862 வரை இந்நிகழ்வு 837 & 861ம் ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆனால் 837லும் தேய்பிறை அஷ்டமியைத் தாண்டி மாதம் பிறந்திருக்கிற காரணத்தால், அதையும் புறந்தள்ளிவிடலாம். பொயு 861ல் மாதம் தேய்பிறை சதுர்த்தியில் பிறந்திருக்கிறது. அவ்வருடமும் வெள்ளி விருச்சிகத்திலும் வியாழன் ரிஷபத்திலும் அந்த நாளில் இருந்திருக்கிறது. தேய்பிறை சதுர்த்தி. சந்திரன் ஓரளவுக்கு முழுவெளிச்சத்தையும் தருகிற நாள் என்பதால், அந்த வருடத்தையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆகவே டிசம்பர் 12 (அவ்வருடத்தின் மார்கழி 13), பொயு 861 என்ற வருடமே ஆண்டாளின் இன்றைய பாசுரமான புள்ளின் வாய் கீண்டானை என்ற திருப்பாவை பாடப்பட்ட தினமாகக் கொள்ளலாம்.

இந்தக் கணக்கிற்கு உதவிய Jagannath Hora செயலிக்கு நன்றிகள்.



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ