Tuesday 28 December 2021

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

திருப்பாவைக்கு அருமையாகவும் வித்தியாசமாகவும் பிஏகே அவர்கள் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார். அதில் இன்று படித்த உரை சற்று இடறியது. இன்றைய பாசுரத்திற்குப் பொருள் சொல்லும் போது ஆண்டாளின் காலத்தைப் பற்றி அறிஞர் மு ராகவய்யங்கார் எழுதிய குறிப்பை அவர் தந்திருக்கிறார். அதில் "பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார்" என்றும் "வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731" என்றும் உள்ளது.



நான் ராகவய்யங்கார் கட்டுரையைப் படித்ததில்லை என்பதால் இந்தக் குறிப்புகளில் சில குழப்பங்களைக் காண நேர்ந்தது. பாண்டியன் (பராந்தக) நெடுஞ்சடையனும் சீமாறன் சீவல்லபனும் ஒரே ஆள் இல்லை என்பது ஒரு புறம். பொயு 731ல் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் ராஜசிம்ம பாண்டியன். அவனும் சரி, அவன் தந்தை கோச்சடையன் ரணதீரனும் சரி வைணவர்களாக அறியப்படவில்லை. சொல்லப்போனால் கோச்சடையன் காலத்தில் சுந்தரர் மதுரைக்கு வந்ததும், அவரோடு ரணதீரன் பல கோவில்களுக்குச் சென்றதும் பெரிய புராணத்தில் சொல்லப்படுகிறது. பெரியாழ்வாரும் சரி, ஶ்ரீ ஆண்டாளும் ஶ்ரீமாற ஶ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் (பொயு 835 - 862) வாழ்ந்தவர்கள் என்பது நீலகண்ட சாஸ்திரி, கோபிநாத ராவ், நாகசாமி போன்ற ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தெளிவாக கல்வெட்டுச் சான்றுகளுடன் என்னுடைய பாண்டியர் வரலாறு புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க, வெள்ளி ஒரு புறம் எழ, வியாழன் மேற்கு திசையில் மறைவது என்ற நிகழ்வைப் பார்ப்போம். வெள்ளி, அதாவது சுக்கிரன், சூரியனுக்கு அருகிலேயே செல்லும் ஒரு கிரகம். பெரும்பாலும் சூரியனுக்கு முதல் ராசியிலோ, அதனுடனோ அல்லது சூரியனுக்கு அடுத்த ராசியிலோதான் வெள்ளி இருக்கும். இதனால்தான் சில சமயம் வெள்ளி அதிகாலை கிழக்குத் திசையிலும் சில சமயம் மாலையில் மேற்கு திசையிலும் தென்படுகிறது. அப்படி அதிகாலையில் வெள்ளி உதிக்கும்போது வியாழன் மேற்கில் மறைய வேண்டுமானால் அது ஆறு ராசிகள் முன்னால் இருக்கவேண்டும். மார்கழியில் சூரியன் இருப்பது தனுசு ராசியில். அதற்கு முந்தைய ராசியான விருச்சிகத்தில் வெள்ளி இருக்கும்போது, வியாழன் மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெறும். 

பொயு 731, டிசம்பர் 18ம் தேதியில் வியாழன் ரிஷபத்திலும் வெள்ளி விருச்சிகத்திலும் இருப்பதால் இந்த நிகழ்வு நடந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் இந்தத் தேதியில் மேற்சொன்ன காலக்கணக்கைத் தவிர மேலும் சில சிக்கல்கள் உள்ளன. பொயு 731, டிசம்பர் 18 என்பது மார்கழி 19ம் நாள். இன்றைய பாட்டோ மார்கழி 13ம் நாள் பாட்டு. ஒரு வேளை எண்ணிக்கை பின்னாளில் மாறியிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் அவ்வருடம் மார்கழி தேய்பிறை அஷ்டமியில் பிறந்திருக்கிறது. அப்படியிருக்க அதை மதி 'நிறைந்த' நன்னாள் என்று ஆண்டால் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறி.

இப்போது ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் காலத்தில் எப்போது இந்நிகழ்வு நடந்தது என்பதைப் பார்ப்போம். பொயு 835லிருந்து பொயு 862 வரை இந்நிகழ்வு 837 & 861ம் ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆனால் 837லும் தேய்பிறை அஷ்டமியைத் தாண்டி மாதம் பிறந்திருக்கிற காரணத்தால், அதையும் புறந்தள்ளிவிடலாம். பொயு 861ல் மாதம் தேய்பிறை சதுர்த்தியில் பிறந்திருக்கிறது. அவ்வருடமும் வெள்ளி விருச்சிகத்திலும் வியாழன் ரிஷபத்திலும் அந்த நாளில் இருந்திருக்கிறது. தேய்பிறை சதுர்த்தி. சந்திரன் ஓரளவுக்கு முழுவெளிச்சத்தையும் தருகிற நாள் என்பதால், அந்த வருடத்தையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆகவே டிசம்பர் 12 (அவ்வருடத்தின் மார்கழி 13), பொயு 861 என்ற வருடமே ஆண்டாளின் இன்றைய பாசுரமான புள்ளின் வாய் கீண்டானை என்ற திருப்பாவை பாடப்பட்ட தினமாகக் கொள்ளலாம்.

இந்தக் கணக்கிற்கு உதவிய Jagannath Hora செயலிக்கு நன்றிகள்.



No comments:

Post a Comment