Friday 12 August 2016

அம்மன் காசு




'அவன் கிடக்கான்டா, அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லாத பய' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்வது வழக்கம். அம்மன் சல்லி அல்லது அம்மன் காசு என்று அழைக்கப்படும் இந்தக் காசு யாரால், எப்போது  வெளியிடப்பட்டது ?

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது, அதில் ஒன்றான ராமநாதபுரம் வலுவடைந்து சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் வந்தது. சேதுபதி அரசர்களில் முக்கியமானவரான கிழவன் சேதுபதி (பொயு 1679)  தனது அரசை இரண்டாகப் பிரித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். தனது மைத்துனனான ரகுநாதத் தொண்டைமானை அதற்கு அரசராகவும் நியமித்தார். கிழவன் சேதுபதியின் காலத்திற்குப் பிறகு வந்த தொண்டைமான் அரசர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தனர். அதன் விளைவாக, தங்களுடைய அரசில் சொந்தமாக நாணயம் அச்சிட்டு வெளியிடும் உரிமையையும் பெற்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட நாணயம்தான் அம்மன் காசு.

புதுக்கோட்டை மன்னர்கள் அந்நகரில் உறையும் பிரகதாம்பாள் மேல் பக்தி பூண்டவர்கள். அதன் காரணமாகவே 'பிரகதாம்பாள்தாஸ' என்ற முன்னெட்டையும் தங்கள் அபிஷேகப் பெயரில் சேர்த்துக்கொண்டவர்கள். எனவே அவர்கள் வெளியிட்ட நாணயத்திலும் அந்த அம்மனின் உருவத்தைப் பொறித்தனர். ஒரு புறம் அம்மன் உருவம், மறுபுறம் 'விஜய' என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும்.  மற்றபடி இந்த நாணயங்களில் வெளியிட்ட ஆண்டோ அல்லது யாரால் வெளியிடப்பட்டது என்ற தகவலோ இருப்பதில்லை. ஆனால், 17-18ம் நூற்றாண்டுகளில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

செப்பால் ஆன இந்த நாணயங்கள் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு வந்தன. என்னதான், பிரிட்டிஷ் அரசு உரிமை கொடுத்திருந்தாலும் அதை 'ஓவராகப்' பயன்படுத்திக்கொள்ள விரும்பாத தொண்டைமான்கள் குறைந்த மதிப்பிலேயே இந்த நாணயங்களை வெளியிட்டனர். சல்லி என்று அழைக்கப்பட்ட இந்த நாணயத்தின் மதிப்பு ஒரு அணாவில் பதினாறில் ஒரு பங்கு.  இந்த நாணயமும் மிகச் சிறியதாக, ஒரு சென்டிமீட்டர் அகல அளவிலேயே இருக்கும்.

3 comments:

  1. நேற்றே படிக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். இன்றுதான் படிக்க முடிந்தது. அருமையான தகவல்.

    சல்லி சல்லியாக நொறுக்குவது என்பதற்குச் சிறியதாகப் பகுப்பது. அப்படிச் சிறியதாக இருப்பதாலேயே நாணயங்கள் சல்லி என்று அழைக்கப்பட்டன.

    இந்த அம்மன் சல்லியில் எனக்கு இப்போது ஒன்று கிடைத்தால் மிக அருமையாக இருக்கும்.

    புதுக்கோட்டையிலேயே அச்சிட்டுக் கொள்ளாமல் கொல்கொத்தாவில் நாணயங்களை அச்சிடுவதற்கு என்ன காரணமாக இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. அதற்கான வசதிகள் இங்கு இல்லை. மேலும் பிரிட்டிஷ் நாணயங்களை அச்சடிக்கும் இடத்தில் இதையும் அச்சடிப்பது பெருமைதானே

      Delete
  2. இந்த நாணயத்தில் ஒன்று எண்ணிடம் இருப்பது பெருமையாகவே கருதுகிறேன்.

    ReplyDelete