Skip to main content

வாரசூலை

ஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன? எப்படி இதை அறிந்து கொள்வது ?

வார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம்.   பன்னிரண்டு ராசிகளில்,  இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு.  இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்'  மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க).  இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு.   இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம்.



இதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி குறைவென்றும் தெரிகிறதல்லவா. அந்தக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்களில், அதன் சக்தி குறைவான திசையை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதே இந்த சாஸ்திரத்தின் தாத்பர்யம்.  மேலே உள்ள அட்டவணையில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் விதிவிலக்குகள் உண்டு. இதன் காரணம், இவை அந்த திசையின் மத்தியில் அல்லாது, அவற்றின் கோணத்தில் அதாவது தென்கிழக்கு மற்றும் வடமேற்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற காரணத்தால். எனவே அவற்றின் சக்தி குறைவான திசைகளும் மாறுபடுகின்றன. இதன்படி சந்திரனுக்கு கிழக்கு திசையிலும் சுக்கிரனுக்கு மேற்கு திசையிலும் ஆதிக்கம் குறைவு.

எனவே, ஞாயிறன்று, சூரியனின் சக்தி குறைவாக உள்ள மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல, திங்களன்று கிழக்குத் திசை நோக்கிப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதைத்தான், ஞாயிறன்று மேற்கே சூலம்,  திங்களன்று கிழக்கே சூலம் என்று குறிப்பிட்டனர்.  இந்த வாரசூலை அட்டவணை கீழே



சரி, தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் திசைகள் நோக்கி அந்த நாட்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? ஜோதிட சாஸ்திரம் இதற்கான பரிகாரங்களையும் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இதற்கான பரிகாரத்தைச் செய்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.  சூரிய உதயத்திலிருந்து திங்கள், சனிக்கிழமைகளில் 8 நாழிகைக்கு மேலும், செவ்வாய், புதன் கிழமைகளில் 11 நாழிகைக்கு மேலும், வியாழன் 20 நாழிகைக்கு மேலும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 12 நாழிகைக்கு மேலும் இந்தப் பரிகாரத்தைச் செய்தால் பலன் அளிக்கும். அட, பரிகாரம் என்னவென்று சொல்லு என்கிறீர்களா. அதிகமில்லை, கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினால் போதும். அம்புட்டுத்தான்.

நிற்க, இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயம். நம்பிக்கை இருந்தால் இந்த சாஸ்திரங்களைப் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் 'நாளென்செயும், வினைதான் என் செயும், எனை நாடிவந்த கோள் என்செயும்' என்று துண்டை உதறி தோளில்  போட்டுக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். 



Comments

  1. சூலம் பார்ப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விப்பட்டதோடு சரி. நானெல்லாம் நீங்கள் கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது போல... நாளென் செயும் வினைதான் என் செயும்.. ஆள். ஆனாலும் இதன் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். நீங்கள் பதிவாகவே இட்டமை சிறப்பு. :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ