Skip to main content

திருமங்கை ஆழ்வாரின் காலம்

ஆழ்வார்களிலேயே அவரது காலம் இன்னது என்று தெளிவாகத் தெரியக்கூடியது திருமங்கை ஆழ்வாரின் காலம்தான். ஆனாலும் ஒரு பரம்பரைக் கதை அவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்ததாகக் கூறுவதால் பலருக்கு இந்த விதத்தில் குழப்பம் நேரிடுகிறது.



முதலில் திருஞானசம்பந்தரின் காலத்தைப் பார்ப்போம். இவர் திருநாவுக்கரசரின் சமகாலத்தவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்பரின் முதிய காலத்தில் சிறுவயதினரான சம்பந்தரோடு பல இடங்களுக்குச் சென்று பதிகங்கள் இயற்றியதைப் பற்றி பெரிய புராணமும் மற்றும் பல நூல்களும் குறிப்பிடுகின்றன.  மகேந்திர பல்லவரை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்பதால் அவருடைய காலத்தில் பிற்பகுதியில் சம்பந்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. சிறுத்தொண்டரான ' மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகச்' செய்த பல்லவ தளபதி பரஞ்சோதியை ஞானசம்பந்தர் சந்தித்தது பற்றியும் குறிப்புகள் உண்டு. எனவே சம்பந்தர் நரசிம்மவர்மரின் சமகாலத்தவர் என்பது வெள்ளிடைமலை.

அதேபோல, சமணரான கூன்பாண்டியனை சைவத்திற்கு சம்பந்தர் மாற்றினார் என்பதற்கும் ஆதாரங்கள் பல உண்டு. கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் மதுரை சென்றதும் சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் புரிந்ததும், அரசன் 'நின்றசீர் நெடுமாறனாகியதும்' தெரிந்த வரலாறே. 'நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்' என்று சுந்தரரால் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் இம்மன்னனின் நெல்வேலிப்போரைப் பற்றி சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்று அழைக்கப்படும் இம்மன்னன் வாழ்ந்தது பொயு 640-670ம் ஆண்டைச் சேர்ந்தவன். எனவே சம்பந்தரின் காலமும் இதை ஒட்டியதே.




அடுத்து திருமங்கை மன்னருக்கு வருவோம். பரமேசுவர விண்ணகரத்தில் உறையும் பெருமானை ஆழ்வார் இப்படிப் பாடுகிறார்

இலகிய நீள்முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 

(பெரிய திருவாய்மொழி, திவ்யார்த்த தீபிகை)

பல்லவமன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் கருவூரில் நடந்த போரைப் பற்றி தளவாய்புரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. எனவே நந்திவர்மனின் சமகாலத்தவர் திருமங்கை மன்னர் என்பது தெளிவு. மேலும்,

'மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி ' 

என்று ஆழ்வார் பெரிய திருவாய்மொழி திருவட்டபுயகரம் பாசுரத்தில் பாடுகிறார். இந்த வயிரமேகன் என்பது நந்திவர்மனின் மறுபெயர்.

பல்லவன் இரண்டாம் நந்திவர்மனின் காலம் பொயு 731-796. எனவே திருமங்கையாழ்வாரும் அக்காலகட்டத்திலேதான் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது தெளிவு. ஆக, சம்பந்தரும் திருமங்கை ஆழ்வாரும் சந்தித்தார்கள் என்பது சாத்தியமேயில்லாத விஷயம்.


உசாத்துணைகள்

1) பாண்டியர் செப்பேடுகள்
2) பெரிய திருவாய்மொழி









Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ