Sunday 29 October 2017

இராஜராஜப் பெருவேந்தன்



இன்று சதயத்திருநாள். இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவரான ராஜராஜனின் பிறந்த நாள். தமிழகத்தின் ஆகச் சிறந்த மன்னனாக அவரைச் சந்தேகமில்லாமல் அறிவிக்கலாம். அப்படி அவர் செய்த செயற்கரிய செயல் என்ன? மற்ற மன்னர்களிடமிருந்து, ஏன் கடல்கடந்து வெற்றிகளைக் குவித்த அவருடைய மகன் ராஜேந்திரனிடமிருந்து கூட  ராஜராஜன் மாறுபட்டது எப்படி?

பண்டைக்கால (சிறந்த) மன்னர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம், அவர்கள் முடிசூடினார்கள், எதிரிகளை போர்க்களத்தில் வீழ்த்தினார்கள், மக்களைக் கொடுமைப்படுத்தாமல் வாழ்ந்தனர், கோவில்களைக் கட்டினார்கள், குளங்களை வெட்டினார்கள் என்பதுதான். ராஜராஜனும் இவை எல்லாவற்றையும் செய்தார். ஆனால் அவருடைய செயல்முறையின் வேறுபாடே அவரை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

முதலில் ராஜராஜன் அரியணை ஏறிய விதத்தையே எடுத்துக்கொள்வோம். அவர்  தமையனான ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தான். சோழ வம்சத்தின் மற்றொரு கிளையின் வாரிசான  மதுராந்தகத்தேவன் அரியணை ஏறும் ஆசை கொண்டிருந்தான். இருந்தாலும், அருள்மொழிவர்மனே தங்களது மன்னராக வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதினார்கள். அவர்  நினைத்திருந்தால், எந்தவிதச் சிக்கலுமின்றி ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்க முடியும். ஆனாலும், தன்னுடைய சிங்காதனத்தை தனது சித்தப்பாவிற்கு விட்டுக்கொடுத்ததன் மூலம் ஆட்சியை விட அறமே உயர்ந்தது என்பதை நிலைநிறுத்தினார்  ராஜராஜன். ஒருவழியாக உத்தமசோழருக்குப் பின் அவர் அரியணை ஏறும் போது  (பொயு 985) அவருக்கு வயது 38.

அதன்பிறகுதான், அவரது முக்கியமான படையெடுப்புகள் நிகழ்ந்தன. மிகக்குறுகிய அரசாக இருந்த சோழதேசம் பேரரசாக உருவெடுத்தது. தென்னகம் முழுவதும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அதுவரை முன்னோர்களின் புகழையே பாடிக்கொண்டிருந்த நடைமுறைகளுக்கு மாறாக தனது வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக அகவற்பாவில்  கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறிக்கச்செய்தது ராஜராஜன் தான். தனது வெற்றிகளைக் குறித்ததிலும் ஒரு கண்ணியத்தைக் கையாண்டவர் ராஜராஜன்.

வேங்கை நாடும் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்

என்று தான் வெற்றி பெற்ற இடங்களைக் குறிப்பிட்டாரே அல்லாது, எந்த எந்த அரசர்களை வெற்றி கொண்டேன் என்று குறிப்பிட்டு அவர்களை அவமானப்படுத்தவில்லை. 

பெற்ற வெற்றிகளை அடுத்து, ராஜராஜன் செய்த மிகப்பெரிய செயல் இன்றளவும் அவர் பெயரைக் கூறிக்கொண்டிருக்கும் ராஜராஜேஸ்வரம் என்னும் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை நிர்மணித்ததே ஆகும். தமிழர் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக இந்தக் கோவிலைக் கூறலாம். இதன் மேலுள்ள விமானம் எப்படிக் கொண்டு சொல்லப்பட்டது என்பது பற்றிய விவாதங்கள் இப்போதுதான் ஓய்ந்திருக்கின்றன. அந்த அளவு அனைவரையும் வியக்கச் செய்த நிபுணத்துவம் பல இந்தக் கோவிலில் உண்டு. பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இந்தக் கோபுரம் முழுவதும் பொன்வேயப்பட்டது.  ராஜராஜனுடைய ஆட்சியின் 25ம் ஆண்டில், அதாவது அவருக்கு 63 வயது ஆகும்போது இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் கோவில் கட்டிய ஒட்டுமொத்தப் பெருமையையும் தனக்கே உரியதாகச் சொல்லிக்கொள்ளவில்லை இம்மன்னன். கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்த சாதாரண மனிதர்கள் உட்பட்ட ஒவ்வொருவருடைய பெயரையும் சுற்றுச்சுவர்கள் கல்வெட்டாகப் பொறித்து வைத்தார். தன் வாய்மொழியாகவே இதற்கான ஆணையைப் பிறப்பித்தார்  என்பதற்கு இந்தக் கல்வெட்டு சான்றாக விளங்குகிறது. 

நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஶ்ரீ ராஜராஜே வரிமுடையார்க்கு நாம் கொடுத்தனவும், அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும்,ஶ்ரீ விமானத்தில் கல்லிலே வெட்டுக  என்ற திருவாய்மொழிஞ்சருள ..

இந்தக் கல்வெட்டை ஒருவர் வாசிப்பதை இங்கே காணலாம். 

இதில்  மனையாட்களை (பெண்டுகள்) பின் தள்ளி விட்டு அக்கன் குந்தவையை முன்னால் கூறியிருப்பதிலிருந்து தன் தமக்கையின் மீது ராஜராஜன் கொண்டுள்ள மரியாதை தெளிவாகத் தெரிகிறதல்லவா. 

தவிர, கோவிலின் அரணான திருச்சுற்று மாளிகை முழுவதையும் தனது படைத்தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரால் கட்டச்செய்து அவர் பெயரையும் பொறிக்கச்செய்தவர் ராஜராஜன். ஒரு சிறந்த தலைவனின் அடையாளம், தன்னுடன் பணி செய்தவர்களை அரவணைத்து, முன்னிறுத்துவதுதான் என்ற தற்கால மேலாண்மைக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ராஜராஜன். 

கோவிலைத் தவிர சைவ சமயத்திற்காக ராஜராஜன் ஆற்றிய பெரும்பணி, மூவர் பாடிய தேவாரத்தை தில்லைக் கோவிலிலிருந்து மீட்டது. அந்த ஓலைச் சுவடிகளை மீட்டெடுப்பதில் சிக்கல் எழுந்தபோது சாதுர்யமாக அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைக் கொண்டுவந்து அந்தச் சிக்கலைத் தீர்த்து, சுவடிகளை மீட்டெடுத்தார் அவர். இதைப்பற்றி திருமுறை கண்ட புராணம் கூறுகையில் 


அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால்  அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும் 
மெய்தகு சீர் அம்பலவர்க்கு உற்ற செல்வவிழாஎடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை 
உய்த்தணி வீதியினில் உலா வருவித்து உம்பர்நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே 

சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச்சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான்


அதன்பின் நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு அவற்றை முறையாகத் தொகுத்ததிலும் ராஜராஜனின் பங்கு உண்டு. ஆனால், அதற்காக அவர் மற்ற சமயங்களைப் புறந்தள்ளினார் என்று நினைக்கவேண்டாம். பழையாறையில் இருந்த விண்ணகரம் உட்பட பல திவ்யதேசங்களுக்கு அவரும் குந்தவையும் நிவந்தங்களை வழங்கியிருக்கிறார்கள். அவரது ஆட்சிக்காலத்தில் நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட சூடாமணி விஹாரத்திற்கு பெரும் நிவந்தங்களும் சலூகைகளும் அளிக்கப்பட்டன என்பதை ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிக்கின்றன. 

நிர்வாகத்தைப் பொருத்தவரை,  எவ்வளவு திறமையாக அரசு நிர்வாகம் செய்யப்பட்டது என்பதை அவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கிராமசபைகளும், பொதுக்குழுக்களும் ஓரளவு தன்னிச்சையாக இயங்கினாலும், தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் நடவடிக்கைகள் கண்கணிக்கப்பட்டன. நாடெங்கும் நிலங்களை முறையாக அளந்து நிலவரி விதிக்கும் முறையை ஏற்படுத்தி, தற்போதைய வருவாய்த் துறையைப் போன்று செயலர்களால் நடத்தப்படும் நிர்வாகத்துறையை அவர் செம்மைப்படுத்தினார். இந்த நிலங்களை அளக்கும் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. இந்த நிலம் அளக்கப்பயன்படுத்தப்பட்ட கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதற்கு உலகளந்த கோல் என்று பெயரிடப்பட்டது. இந்த அலுவலைத் தலைமையேற்று நடத்திய அதிகாரி உலகளந்தான் என்ற சிறப்புப் பெயர் பெற்று, குரவன் உலகளந்தான் ராஜராஜ மாராயன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். நாடு முழுவதும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்ட ன. 

 இப்படி ஆட்சிமுறை, நுண்கலை, கட்டடக்கலை, படைத்திறன், சமயம், இலக்கியம் போன்று பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து பல்வேறு பட்டப்பெயர்களை ராஜராஜன் பெற்றிருந்தாலும், சிவநெறியைத் தழைக்கச் செய்ததன் அடையாளமாக தன்னைச் 'சிவபாத சேகரன்' என்று அழைப்பதையே விரும்பினார். இறைவனுடைய அடிக்கமலங்களைத் தவிர வேறு எதுவும் வேண்டேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராஜராஜர். 

3 comments:

  1. Is it true that he laid golden sheets on tower??

    ReplyDelete
  2. Replies
    1. தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பொன் வேய்ந்ததற்கான சுவடுகள் இல்லையே.
      .

      Delete