Monday 28 May 2018

வாலைக்குமரி





பழங்காலத்தில் புலமைத்திறனைச் சோதிக்க ஈற்றடியைக் கொடுத்து அதற்கான பாடலை எழுதச்சொல்லும் வழக்கம் இருந்தது. பாரதியாரைக் கூட 'பாரதி சின்னப்பயல்' என்ற ஈற்றடியைக் கொடுத்து எழுதச்சொல்லி ஒருவர் வாங்கிக்கட்டிக்கொண்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம் அல்லவா.  அதன்படியே, இதுபோன்று ஈற்றடிகளைக் கொடுத்து புலமை விளையாட்டில் ஈடுபடுவதில் போஜராஜனுக்கு மிகவும் விருப்பமுண்டு. அவன் அரசவையில் காளிதாஸனில் இருந்து பல கவிராஜ சிம்மங்கள் இருந்ததால் அவர்களும் அரசனுக்கு ஈடுகொடுத்து பாடல்கள் இயற்றிவந்தனர்.

ஒருநாள் இரவு நகர்ச்சோதனை முடிந்து அதிகாலை நேரத்தில் போஜன் அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு குருகுலம், மாணவர்கள் சமஸ்கிருத ககர வரிசைப் பாடத்தை மனனம் செய்துகொண்டிருந்தனர். 'க(1), க(2), க(3), க(4)' என்று தாளக்கட்டோடு அவர்கள் உருப்போட்டது அரசனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அன்று அரசவையில் தன் மனதில் ஒலித்துக்கொண்டிருந்த 'க(1), க(2), க(3), க(4)'  வையே ஈற்றடியாகக் கொடுத்து அதற்கான பாடல் ஒன்றை இயற்றுமாறு புலவர்களைக் கேட்டுக்கொண்டான் போஜராஜன்.

புலவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. வார்த்தைகள் எதையாவது ஈற்றடியாகக் கொடுத்தால் அதற்குப் பாட்டெழுதலாம். ககரவரிசைக்கு எப்படி எழுதுவது?  காளிதாஸன் மனதிலும் குழப்பம். அரசனுக்கு காளிதாஸனையே மடக்கிவிட்ட களிப்பு. 'அவசரம் ஏதுமில்லை, ஒரு நாள் கூட எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தாராளமனதோடு அவர்களுக்கு நேரம் அளித்து அவையைக் கலைத்தான் அரசன்.

அரசன் அளித்த ஈற்றடிக்குப் பாட்டு எழுதும் தோன்றாமல், வருத்தத்தோடு வீடு நோக்கி நடந்த காளிதாஸன் அம்பிகையை மனதில் கண்மூடி தியானித்தான். கண்ணைத் திறந்து பார்த்தால், எதிரில் குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிழ் சிரிப்புமாய் ஒரு சிறுமி. துறுதுறுப்பான அந்தக் குழந்தையைப் பார்த்ததும் காளிதாஸன் தன் கவலையை மறந்து அவளோடு உரையாடத்துவங்கினான்.

கா த்வம் பாலே (குழந்தாய் உன் பெயரென்ன)
அந்தச் சிறுமி பதிலளித்தாள் : காஞ்சனமாலா

கஸ்ய புத்ரி (நீ யாருடைய பெண்) : கனகலதாயா (கனகலதாவின்)
ஹஸ்தே கிம் தே (கையில் என்ன? ) : தாலி பத்ரம் (பனையோலை)
கா வா ரேகா (அதில் என்ன எழுதியிருக்கிறது) : க(1), க(2), க(3), க(4)'

என்று சொல்லிவிட்டு குதித்தோடிவிட்டாள் அந்தப் பெண். காளிதாஸன் மனதில் அந்த உரையாடலே ஒரு பாடலாக உருவாகிவிட்டது.

கா த்வம் பாலே ! காஞ்சன மாலா
கஸ்ய புத்ரி ! கனகலதாயா ஹஸ்தே கிம் தே ! தாலி பத்ரம் கா வா ரேகா ! க(1) க(2) க(3) க(4)

அரசனிடம் (வழக்கம்போல) இப்பாடலைச் சொல்லிப் பரிசு பெற்றுக்கொண்டான் காளிதாஸன் என்று சொல்லவும் வேண்டுமா

No comments:

Post a Comment