Wednesday 17 March 2021

மீண்டும் காந்தளூர்ச்சாலை


தங்களுக்கு அரசியல் லாபம் ஏதாவது தேவையென்றால் ராஜராஜ சோழனை சீண்டுவது தமிழகத்தில் சிலரின் வழக்கம். அப்படி தமிழகத்தேர்தலை ஒட்டி (??!!) எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. 

அதன் லிங்க் இதோ

முதலில் அதில் உள்ள அபத்தங்களைப் பார்த்துவிடுவோம். 

//இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்!//

'காந்தளூர்ச்சாலை கலம் அறுத்து' அந்தக் கல்விக்கூடத்தை ராஜராஜன் அழித்துவிட்டால் பிறகு ஏன் மற்ற சோழ மன்னர்கள் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் காந்தளூர்ச்சாலை கலமறுத்ததைக் குறிப்பிடுகின்றன. 

"குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தான்" என்கிறது சடையவர்மன் பராந்தக பாண்டியனின் மெய்க்கீர்த்தி. ஏன் இப்படி ஒரு 'கல்விக்கூடத்தை' ஏன் 'போர் செய்து' பலரும் அழிக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அடுத்து

//இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன்//

நந்திவர்ம பல்லவனின் காலம் பொயு 8ம் நூற்றாண்டு. பெருமாளை வைத்ததை எதிர்த்து தில்லை வாழ் அந்தணர் கலகம் செய்தார்களாம். விஜயாலயன் முதல் தொடர்ந்து சைவர்களாக, சிவபாத சேகரர்களாக, சிவசரண சேகரர்களாக இருந்த பெருமன்னர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் நானூறு ஆண்டுகள் கழித்து பதவிக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன் அதைச் செய்தானாம். எப்படி இருக்கிறது கதை. ஆனால் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை தில்லை வாழ் அந்தணர்கள் வழிபட்டனர் என்று வைணவ ஆழ்வார்களே குறிப்பிடுவதில் இந்தச் சாயம் வெளுத்து விடுகிறது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம் (பெரிய திருமொழி)

“தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்” (குலசேகர ஆழ்வார்)

//சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள்.//

இதற்கெல்லாம் ஆதாரங்கள் என்ன என்று கேட்கக்கூடாது. மூச். வீரநாராயண ஏரியை வெட்டிய ராஜாதித்தர் குறுகிய காலத்திலேயே மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிரான தக்கோலப்போரில் மரணமடைந்துவிட்டார் என்று பொன்னியின் செல்வன் வாசகர்களுக்குக் கூடத்தெரியும். அடுத்து பட்டத்திற்கு வந்தது பரம சைவரான கண்டராதித்தர். அவர் காலத்தில் சேரர்கள் இங்கே குடியேறினார்களாம். மேலும்

//எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள்//

ஒரு வழியாக பாலகுமாரனின் உடையார் கதைக்கு வந்துவிட்டார். கதைக்கு எதற்கு ஆதாரம் ? ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சேர நாட்டவர் என்பதற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.

"பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும். ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம்"

மிகத்தெளிவாக குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருப்பது கொலை செய்தவர்கள் பாண்டிய நாட்டவர் என்பது. வீரபாண்டியனின் தலையை ஆதித்தன் வெட்டிய அடாத செயலுக்கு எதிராகவே இந்தப் படுகொலையைச் செய்தனர் அவர்கள். உடையார் போன்ற நாவலை வைத்துக்கொண்டு சரித்திரம் எழுதினால் இப்படித்தான் ஆகும். கட்டுரை முடிவில் பனைமரத்தில் பசுவைக் கட்டிய கதையாக 'பெரியார்' 'சாலை என்பது பிராமண ஆதிக்கம்' என்று ஏதேதோ சொல்லி கட்டுரையை முடித்து வைத்துவிட்டார். 

இவ்வளவு அபத்தங்கள் நிறந்த இந்தக் கட்டுரை சொல்லவருவது என்ன. சாலை என்பது சேரநாட்டு அந்தணர்களால் நிறுவப்பட்ட கல்விக்கூடம். அதைத்தான் ராஜராஜன் முதலில் அழித்தான் என்பதுதான் கட்டுரையின் அடித்தளமாக இருக்கிறது. ஆனால் இதில் உள்ள பெரிய ஓட்டை காந்தளூர்ச்சாலை அமைந்திருந்தது அப்போதைய 'ஆய்வேளிர்' ஆண்டு கொண்டிருந்த நாட்டுப் பகுதியில். சேர நாட்டுத் 'தளி'களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. சேர நாட்டின் எல்லை ராஜராஜன் ஆட்சி செய்த பொயு 10ம் நூற்றாண்டில் கோட்டயம்/ திருக்கடித்தானமாகவே இருந்தது. இதன் காரணமாகவே பின்னால் சேர நாட்டின் மீது படையெடுத்த ராஜராஜன் உதகையை அழித்தான். காந்தளூச்சாலை பாண்டிய நாட்டவர்களால் கைப்பற்றப்பட்டு 10ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆதரவாளர்களான ஆய் மன்னர்களின் கையில்தான் இருந்தது. ஆகவே பாண்டிய அரசனான அமரபுஜங்கனை வெற்றி கொண்ட கையோடு (திருவாலங்காட்டுச் செப்பேடுகள்) ஆய் குல அரசர்களின் கடற்படைத்தளங்கள் / துறைமுகங்களான விழிஞத்தையும் காந்தளூர்ச்சாலையையும் ராஜராஜன் தாக்கி அழித்து பாண்டியர்கள் தலைதூக்காவண்ணம் செய்தான். 

அப்போது காந்தளூச்சாலை என்பது என்ன? "வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ" என்கிறார் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில். வேலை என்றால் கடல். அந்தக் கடலைக் கொண்டு விழிஞம் அழித்து சாலையைக் கைக்கொண்டாய்' என்று புகழ்கிறார் அவர். கடலில் அருகே காந்தளூர்ச்சாலை இருந்ததால் இது ஒரு கடற்படைத் தளமாகவோ அல்லது கடற்படைப் பயிற்சி நிலையமாகவோ இருந்திருக்கவேண்டு. மேலும் "வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து" என்று முதலாம் ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி குறிப்பிட்டு இதை உறுதிப்படுத்துகிறது. கடல் அருகே உள்ள காந்தளூர்சாலை ஒரு கடற்படைத் தளமே. குறைந்தபட்சம் இது வீரர்களுக்கான பயிற்சிப்பாசறையாக இருந்திருக்கக்கூடும். அதனால் தான் 'தண்டு கொண்டு' - படை கொண்டு அல்லது 'கன்னிப்போர்' செய்து இதை அழிக்கவேண்டியிருக்கிறது. அந்தணர்களின் கல்விக்கூடத்தை அழிக்கப் படை எதற்கு? 

எதையாவது எழுதி அந்தணர் ஆதிக்கம் என்ற பயமுறுத்தலைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். இதற்கு பல பிரம்மதேயங்கள் அமைத்தவனும் அந்தணர்பால் பேரன்பு கொண்டவனுமான ராஜராஜனைத் துணைக்கழைத்திருப்பதுதான் நகைச்சுவை. 



6 comments:

  1. மிக நல்ல கட்டுரை, விருப்பு வெறுப்பு அற்ற முறையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி

    ReplyDelete
  2. கே. என். சிவராமனே பிராமணர்தாங்க ஆனால் பெரியார் திடல் பிராமணர். இப்படி எழுதிட்டு இருந்தால்தான் திடலில் பாராட்டு கிடைக்கும். கொஞ்சம் மாற்றி எழுதினாலும் 'பாப்பான்' என்று இவரையே அழைத்து விடுவார்கள்.

    ReplyDelete
  3. /மூத்தபறையர் வள்ளுவர்களால் ஏழாம்நூற்றாண்டு வரை பூசை செய்யப்பட்டவை இந்து ஆலயங்கள். /
    https://www.jeyamohan.in/145299/

    If you have the time and inclination, can you please comment on this assertion?

    AFAIK almost no temple from pre 7th century exists in the same form today.
    Even considering the core-temples that were consequently expanded, converted to katRaLis, the claim that only vaLLuvars were the only liturgant in ALL of them, seems to me a specious claim.

    He doesn't bluntly say so, but deftly suggests so with his phrasing.
    This claim is problematic because it firstly denies the existence of diverse temples pre-7th century.
    Secondly it lends credence to the dominant execrable political narrative of 'cultural takeover'

    Is there any reasonable historical backing to this?

    ReplyDelete
    Replies
    1. It’s a usual twist from Ajan as he thinks there are no inscriptional evidence before 7th century and he can give a story of his own. The Tirumurugatrupadai gives this on the temple in Thiruveragam

      இருபிறப்பாளர், பொழுது அறிந்து நுவல
      ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்,
      புலராக் காழகம் புலர உடீஇ,
      உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து
      ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி
      நா இயல் மருங்கில் நவிலப் பாடி,
      விரை உறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து,
      ஏரகத்து உறைதலும் உரியன்

      So there are Brahmins who also did Puja in temples

      Delete
    2. Yeah exactly.
      Thank You!

      Delete
  4. Sir, enjoyed your podcast on அத்தா இது கேள்... The set of poems around there are a delight.

    In the course of your podcast you had mentioned that Rama did not want to be too harsh on Lakshma as Anuman was beside them. But was that the case?

    Dr. S.Ramakrishnan (not the writer but the communist from Madurai, who was a Shakespeare/Kamban scholar), in his book சிறியன சிந்தியாதான் kind of observes the exact opposite:

    He says this is the first time Lakshmana and Rama had privacy after they Hanuman met them. So Lakshmana - even though he was very much against Rama agreeing to help Sugreeva did not want to contradict his brother and kept mum. He only articulates his disagreement (that too after being asked to comment by Rama) only because they are by themselves.

    ReplyDelete