Wednesday 4 May 2016

அக்னி நட்சத்திரம்

கொளுத்தும் கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது. கத்தரி வெய்யில் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் காலம் வருடத்தில் வெப்பம் மிக அதிகமாக உணரப்படும் நாட்களைக் கொண்டது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் வெளிவட்டார நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு கோடைக்கே உரிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டால் வெயிலின் கொடுமையிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்

கோடையின் இந்தக் கடுமையான பகுதியை கணித்து மக்கள் தங்களை அதனிலிருந்து தற்காத்துக்கொள்ளவே நம் முன்னோர்கள் அக்னி நட்சத்திரத்தை ஒரு வானிலை முன்னறிவிப்பாகப் பயன்படுத்தினார்கள். பொது வழக்கில்,   'சித்திரை பின் ஏழு வைகாசி முன் ஏழு’  என்று சொன்னாலும் உண்மையில் கத்தரி வெயில் இந்தக் கணக்குக்கு பொருந்தி வருவதில்லை. இந்த வருடத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,  சித்திரை 21ம் தேதியே அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது.  சரி, இது எப்படிக் கணக்கிடப்படுகிறது. இதற்கு ஏன் அக்னி நட்சத்திரம் என்ற பெயர் வந்தது? 

அதைப் பார்ப்பதற்கு முன்னாள் சற்று வானியல், இதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பவர்கள், இரண்டு பாராக்கள் தாவி விடவும்.

சூரியனும், துணைக்கோளான சந்திரனும் மற்ற கோள்களும் வானின் நீள்வட்டப் பாதையில் இடம் மாறுவதை வைத்தே காலங்களை நம் முன்னோர் கணக்கிட்டனர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த நீள்வட்டப் பாதை காலக்கணக்குக்கு வசதியாக 12 ராசிக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான இந்த ராசிக்கட்டங்களை பின்புலத்தில் வைத்தே கோள்கள் சுற்றிவருகின்றன. இந்தக் கணக்கை மேலும் துல்லியமாக்க, 12 ராசிகளை 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி அமைத்தனர் வானியலாளர். (28ஆவது நட்சத்திரமான அபிஜித் இந்தக் கணக்கில் முன்பு சேர்த்துக்கொள்ளப்பட்டது, பிற்காலத்தில் ஏன் அது விடுபட்டது என்பது ஒரு புதிர்).  இந்த  27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய 12 ராசிகளில்  ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் (27 / 12) என்பது கணக்கு . இதன்படி மேஷ ராசியானது, அஸ்வதி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் கால் பாகம் கொண்டது. ரிஷப ராசியில் அடங்கியது கார்த்திகையின் மீதியான முக்கால் பாகம், ரோகிணி மற்றும் மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அரைப்பாகம். இவ்வாறே பன்னிரண்டு ராசிக்களுக்கும் வரும்.

இவ்வாறு இந்த 27 நட்சத்திரங்களை / 12 ராசிகளை சூரியன் ஒருமுறை சுற்றி வருவதற்கு (வருவதுபோல் தோற்றமளிப்பதற்கு) ஒரு வருடம் பிடிக்கிறது. இதுவே சௌரமான வருடம் (சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடம்). இந்தியாவில் தமிழர், மலையாளிகள், வங்காளிகள், அஸ்ஸாமியர்கள் ஆகியோர் பின்பற்றுவது சௌரமான வருடக்கணக்குஆகவே தான் ராசிக்கட்டத்தின் முதலில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷம் முதல் நாள், புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இப்படி 365 நாட்கள் கொண்ட ஒரு வருடத்தில் சூரியன் ஒரு நட்சத்திரத்தில் தோராயமாக 13.5 நாட்கள் சஞ்சரிக்கும் (365 / 27). வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் மேஷ ராசியில் உலவும் சூரியன் அந்த ராசியில் உள்ள மூன்றாவது நட்சத்திரமான  கார்த்திகையில் சஞ்சரிக்கும்  நாட்கள் அக்னி நட்சத்திர நாட்கள் என்று அழைக்கப்படுகிறது

கார்த்திகை நட்சத்திரம் அக்னிக்கு உரிய நட்சத்திரமாக இந்திய நூல்களில் வகைப்படுத்தப்படுகிறது. அந்த நட்சத்திரத்துக்கு அதிபதியாக சூரியனும் அதிதேவதையாக அக்னியும் விளங்குகின்றனர் என்று ஜோதிட நூல்கள்  உரைக்கின்றன. Pleiads என்று மேல்நாட்டு வானவியலில் வழங்கப்படும் இந்த நட்சத்திரத்தக் கூட்டத்தில் 6 தனி விண்மீன்களை வெறும் கண்ணால் பார்க்கமுடியும். மேல்நாட்டார் இதை 7 Sisters என்று அழைக்கின்றனர். இந்திய வானவியல் நூல்களும், இந்நட்சத்திரம் 7 மீன்களைக்கொண்டதாக இருந்தது என்றும் அதில் ஒன்றான அருந்ததி பிரிந்து சப்தரிஷி மண்டலத்தில் சேர்ந்தது என்றும் கூறுகின்றன. இது ஆராய்ச்சிக்குரிய ஒன்று. சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய முருகப்பெருமான் ஆறு நெருப்புத்துளிகளாக உருவானார் என்றும் அவரை முதலில் இந்த ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகைக்கும் நெருப்புக் கடவுளான அக்னிக்கும் உள்ள தொடர்புக்கு இன்னொரு உதாரணத்தையும் நாம் பார்க்கலாம். சந்திரன் முழுநிலவாக கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் நாள் பௌர்ணமி தீபத்திருவிழாவாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தீபங்களை ஏற்றியும் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தியும் நாம் கொண்டாடும் இந்த விழாவின் முக்கிய அம்சம் அக்னித்தலமான திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பெருவிழா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆக கார்த்திகை நட்சத்திரத்திற்கும் அக்னிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதன் மூலமும் தெளிவடைகிறது.    

இதையொட்டி சூரியன் அக்னி நட்சத்திரமான கார்த்திகையில் சஞ்சரிக்கும் நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டமாக ஆகியது. இதனுடைய விளைவு சூரியன் இந்த நட்சத்திரத்துக்கு செல்லும் முன்பே தெரியத் தொடங்கும் என்ற காரணத்தினாலும்சூரியனின் சஞ்சாரம் வான் சுழற்சியைப்பொறுத்து வேறுபடுவதாலும்இதற்கு முந்தைய நட்சத்திரமான பரணியில் சூரியன் இருக்கும் சில நாட்களையும் (பெரும்பாலும் பரணியின் மூன்றாம், நான்காம் கால்பாகங்கள்), கார்த்திகைக்கு அடுத்த ரோகிணியில் சூரியன் இருக்கும் சில நாட்களையும் (பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டாம் கால் பாகம்) சில சமயம் சேர்த்து மொத்த அக்னி நட்சத்திர காலமாக கணித்தனர் பண்டைய வானியல் நிபுணர்கள். இதன்படி இந்த வருடத்தை எடுத்துக்கொண்டால் சித்திரை 21 (மே மாதம் 4ம் தேதி) சூரியன் பரணியின் மூன்றாம் கால் பாகத்திற்கு செல்கிறது. ஆகவே அன்று அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. கார்த்திகையில் சித்திரை 28ல் தனது சஞ்சாரத்தை துவங்கும் சூரியன், ரோகிணி நட்சத்திரத்தின் 2ஆவது கால் பகுதியை வைகாசி 15ம் நாள் (மே 28ம் தேதி) கடக்கிறது. ஆகவே அன்று அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது

எந்த வகையான கருவிகள் இல்லாத காலத்திலும் வெறுங்கண்களால் கணக்கிட்டே இது போன்ற வானிலை அறிவிப்பு முறைகளை வகுத்த நம் முன்னோர்களை போற்ற வேண்டியதில்லை. மூட நம்பிக்கைக்காரர்கள் என்று தூற்றாமல் இருப்போமாக 



No comments:

Post a Comment