Skip to main content

தமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 1

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை.

மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற்கள் மதத் தொடர்பானவைகளாக இருக்கலாம். அதனால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியது என்று ஒதுக்குவது முறையாகாது. தவிர இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட  நாட்குறிப்பு முறை இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மக்கள் தனித்தனி நாட்குறிப்பு முறைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை.

இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் பயன்படுத்தும் நாட்காட்டி முறைகளைப் பற்றி சிறிது ஆராயலாம்.

இந்திய நாட்குறிப்பு முறை

இந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது  என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. அடிப்படையில் இந்திய நாட்குறிப்பு முறைகளை இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை (ஸுர்யமானம்), சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை (சந்திரமானம் )

இப்போது நாட்குறிப்பு முறையின் சில அடிப்படை வானியல் குறிப்புகள். (இங்கே எங்களுக்கு வானியல் முறைகளும் நட்சத்திரங்கள், ராசிகள், அவைகளைப் பின்புலமாகக் கொண்டு கோள்களின் நகர்வைக் கணிக்கும் முறையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்போர் இரண்டு பத்திகள் தாவி விடவும்.) ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்களை / ஆண்டுகளை கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். . ஆனால் தினமும் நகர்ந்து கொண்டிருக்கும் இவை இரண்டையும் வைத்து எப்படி நாட்களைக் கணிப்பது ?

அதற்கு வானில், பின்புலத்தில் ஓரளவு அசையாமல் கிட்டத்தட்ட இருந்த இடத்திலேயே (கண்பார்வைக்கு) நிலைத்திருந்த விண்மீன்கள் கை கொடுத்தன. சூர்ய, சந்திரர்களின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள் (இவற்றின் பெயர்களை ஜோதிடமும் உபயோகப்படுத்துவதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இங்கு நாம் பார்ப்பது வானியல் மட்டுமே).  சூரியனும் சந்திரனும் பூமியிலிருந்து பார்க்கும்போது நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருவது போல் தெரியும். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர். கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. மேஷம்  .. என்ற பெயரில், சிம்மம் என்ற பெயரில். அந்த நீள்வட்டப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஆக, ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும்

இப்போது மீண்டும் நாட்குறிப்பு முறைகளுக்கு வருவோம். சூரிய நாட்குறிப்பு முறையை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மலையாளிகள், ஒரிசா மாநிலத்தவர்கள், வங்காளிகள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிட்டனர். பன்னிரண்டு ராசிகளுக்கும் முதலாவதாக மேஷ ராசியை அமைத்தனர். ஏன் மேஷ ராசி முதலாவதாக ஆனது. பாதை நீள்வட்டமாகத்தானே இருக்கிறது? இதில் முதலாவது எது முடிவானது எது?
பார்ப்போம்

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ