Tuesday, 28 December 2021

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

திருப்பாவைக்கு அருமையாகவும் வித்தியாசமாகவும் பிஏகே அவர்கள் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார். அதில் இன்று படித்த உரை சற்று இடறியது. இன்றைய பாசுரத்திற்குப் பொருள் சொல்லும் போது ஆண்டாளின் காலத்தைப் பற்றி அறிஞர் மு ராகவய்யங்கார் எழுதிய குறிப்பை அவர் தந்திருக்கிறார். அதில் "பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார்" என்றும் "வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731" என்றும் உள்ளது.



நான் ராகவய்யங்கார் கட்டுரையைப் படித்ததில்லை என்பதால் இந்தக் குறிப்புகளில் சில குழப்பங்களைக் காண நேர்ந்தது. பாண்டியன் (பராந்தக) நெடுஞ்சடையனும் சீமாறன் சீவல்லபனும் ஒரே ஆள் இல்லை என்பது ஒரு புறம். பொயு 731ல் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் ராஜசிம்ம பாண்டியன். அவனும் சரி, அவன் தந்தை கோச்சடையன் ரணதீரனும் சரி வைணவர்களாக அறியப்படவில்லை. சொல்லப்போனால் கோச்சடையன் காலத்தில் சுந்தரர் மதுரைக்கு வந்ததும், அவரோடு ரணதீரன் பல கோவில்களுக்குச் சென்றதும் பெரிய புராணத்தில் சொல்லப்படுகிறது. பெரியாழ்வாரும் சரி, ஶ்ரீ ஆண்டாளும் ஶ்ரீமாற ஶ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் (பொயு 835 - 862) வாழ்ந்தவர்கள் என்பது நீலகண்ட சாஸ்திரி, கோபிநாத ராவ், நாகசாமி போன்ற ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தெளிவாக கல்வெட்டுச் சான்றுகளுடன் என்னுடைய பாண்டியர் வரலாறு புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க, வெள்ளி ஒரு புறம் எழ, வியாழன் மேற்கு திசையில் மறைவது என்ற நிகழ்வைப் பார்ப்போம். வெள்ளி, அதாவது சுக்கிரன், சூரியனுக்கு அருகிலேயே செல்லும் ஒரு கிரகம். பெரும்பாலும் சூரியனுக்கு முதல் ராசியிலோ, அதனுடனோ அல்லது சூரியனுக்கு அடுத்த ராசியிலோதான் வெள்ளி இருக்கும். இதனால்தான் சில சமயம் வெள்ளி அதிகாலை கிழக்குத் திசையிலும் சில சமயம் மாலையில் மேற்கு திசையிலும் தென்படுகிறது. அப்படி அதிகாலையில் வெள்ளி உதிக்கும்போது வியாழன் மேற்கில் மறைய வேண்டுமானால் அது ஆறு ராசிகள் முன்னால் இருக்கவேண்டும். மார்கழியில் சூரியன் இருப்பது தனுசு ராசியில். அதற்கு முந்தைய ராசியான விருச்சிகத்தில் வெள்ளி இருக்கும்போது, வியாழன் மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெறும். 

பொயு 731, டிசம்பர் 18ம் தேதியில் வியாழன் ரிஷபத்திலும் வெள்ளி விருச்சிகத்திலும் இருப்பதால் இந்த நிகழ்வு நடந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் இந்தத் தேதியில் மேற்சொன்ன காலக்கணக்கைத் தவிர மேலும் சில சிக்கல்கள் உள்ளன. பொயு 731, டிசம்பர் 18 என்பது மார்கழி 19ம் நாள். இன்றைய பாட்டோ மார்கழி 13ம் நாள் பாட்டு. ஒரு வேளை எண்ணிக்கை பின்னாளில் மாறியிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் அவ்வருடம் மார்கழி தேய்பிறை அஷ்டமியில் பிறந்திருக்கிறது. அப்படியிருக்க அதை மதி 'நிறைந்த' நன்னாள் என்று ஆண்டால் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறி.

இப்போது ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் காலத்தில் எப்போது இந்நிகழ்வு நடந்தது என்பதைப் பார்ப்போம். பொயு 835லிருந்து பொயு 862 வரை இந்நிகழ்வு 837 & 861ம் ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆனால் 837லும் தேய்பிறை அஷ்டமியைத் தாண்டி மாதம் பிறந்திருக்கிற காரணத்தால், அதையும் புறந்தள்ளிவிடலாம். பொயு 861ல் மாதம் தேய்பிறை சதுர்த்தியில் பிறந்திருக்கிறது. அவ்வருடமும் வெள்ளி விருச்சிகத்திலும் வியாழன் ரிஷபத்திலும் அந்த நாளில் இருந்திருக்கிறது. தேய்பிறை சதுர்த்தி. சந்திரன் ஓரளவுக்கு முழுவெளிச்சத்தையும் தருகிற நாள் என்பதால், அந்த வருடத்தையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆகவே டிசம்பர் 12 (அவ்வருடத்தின் மார்கழி 13), பொயு 861 என்ற வருடமே ஆண்டாளின் இன்றைய பாசுரமான புள்ளின் வாய் கீண்டானை என்ற திருப்பாவை பாடப்பட்ட தினமாகக் கொள்ளலாம்.

இந்தக் கணக்கிற்கு உதவிய Jagannath Hora செயலிக்கு நன்றிகள்.



Wednesday, 1 December 2021

எது தமிழ்ப் புத்தாண்டு 2.0

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை. 

மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற்கள் மதத் தொடர்பானவைகளாக இருக்கலாம். அதனால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியது என்று ஒதுக்குவது முறையாகாது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மக்கள் தனித்தனி நாட்குறிப்பு முறைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை. 

இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் பயன்படுத்தும் நாட்காட்டி முறைகளைப் பற்றி சிறிது ஆராயலாம். 

இந்திய நாட்குறிப்பு முறை

இந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது  என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. அடிப்படையில் இந்திய நாட்குறிப்பு முறைகளை இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை (ஸுர்யமானம்), சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை (சந்திரமானம் ) 

இப்போது நாட்குறிப்பு முறையின் சில அடிப்படை வானியல் குறிப்புகள். (இங்கே எங்களுக்கு வானியல் முறைகளும் நட்சத்திரங்கள், ராசிகள், அவைகளைப் பின்புலமாகக் கொண்டு கோள்களின் நகர்வைக் கணிக்கும் முறையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்போர் இரண்டு பத்திகள் தாவி விடவும்.) ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்களை / ஆண்டுகளை கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். . ஆனால் தினமும் நகர்ந்து கொண்டிருக்கும் இவை இரண்டையும் வைத்து எப்படி நாட்களைக் கணிப்பது ? 

அதற்கு வானில், பின்புலத்தில் ஓரளவு அசையாமல் கிட்டத்தட்ட இருந்த இடத்திலேயே (கண்பார்வைக்கு) நிலைத்திருந்த விண்மீன்கள் கை கொடுத்தன. சூர்ய, சந்திரர்களின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள் (இவற்றின் பெயர்களை ஜோதிடமும் உபயோகப்படுத்துவதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இங்கு நாம் பார்ப்பது வானியல் மட்டுமே).  சூரியனும் சந்திரனும் பூமியிலிருந்து பார்க்கும்போது நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருவது போல் தெரியும். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர். கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. மேஷம்  .. என்ற பெயரில், சிம்மம் என்ற பெயரில். அந்த நீள்வட்டப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஆக, ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும் 

இங்கு கவனிக்க வேண்டியது, இந்த முறை கணக்கிடுவதற்காக மட்டுமே. மற்றபடி சூரியனையே மற்ற கோள்கள் சுற்றி வந்தன என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். 

வானிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த விளங்குகதிர் ஞாயிறு"
என்கிறது சிறுபாணாற்றுப்படை.

ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் போது மேட வீதி, இடப வீதி, மிதுன வீதி ஆகிய மூன்று வீதிகளில் சூரியன் செல்வது போல் தோன்றும். இந்த மூன்று வீதிகளையும் “எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து, தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்” என்று குறிப்பிடுகிறது பரிபாடல்.

இப்போது மீண்டும் நாட்குறிப்பு முறைகளுக்கு வருவோம். சூரிய நாட்குறிப்பு முறையை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மலையாளிகள், ஒரிசா மாநிலத்தவர்கள், வங்காளிகள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிட்டனர். பன்னிரண்டு ராசிகளுக்கும் முதலாவதாக மேஷ ராசியை அமைத்தனர். ஏன் மேஷ ராசி முதலாவதாக ஆனது. பாதை நீள்வட்டமாகத்தானே இருக்கிறது? இதில் முதலாவது எது முடிவானது எது? 

சூரியன் பூமியைச் சுற்றி நகரும் நீள்வட்டப் பாதையில் விண்மீன்கள் அமைந்திருப்பதாகப் பார்த்தோம் அல்லவா. சூரியன் பயணம் செய்யும் அந்தப் பாதையை ஒரு கோடாக உருவகித்தால் எல்லா விண்மீன்களும் அந்தப் கோட்டில் இருக்கவில்லை, மாறாக அதன் இருபுறத்திலும் அமைந்திருந்தன. அந்தப் பாதையிலேயே இருந்த சில விண்மீன்களில் முக்கியமானது அஸ்வினி என்ற பெயருடைய விண்மீன். சூரியன் பயணம் செய்கின்ற நீள்வட்டப்பாதையின் மத்தியில் அமைந்துள்ளது இது. இந்திய நாட்குறிப்புக் கணக்கீடும் முறை உருவான சமயத்தில் (கிட்டத்தட்ட பொ.யு. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில்) வேனில் சமநாள், அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள் சூரியன் அஸ்வினி மீனில் இருந்த போது வந்தது. காலப்போக்கில் பூமியின் அச்சு நகர்ந்து வந்ததில் காரணமாக அது மேற்கு நோக்கி இடம் மாறி தற்காலத்தில் மார்ச் 22ம் தேதியாக கணிக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து தான் இளவேனில் காலம் துவங்கியது. இந்தக் காரணங்களால் அந்த விண்மீன், நீள்வட்டப் பாதையின் ஆரம்பப் புள்ளியாகவும், அது இடம்பெற்றிருந்த ராசியான மேஷம் ராசிக்கட்டத்தின் முதல் ராசியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகின் மற்ற ராசி வரிசைகளிலும் மேஷத்திற்குத் தான் முதலிடம்.  ஆங்கில Zodiac வரிசை கூட Aries லிருந்துதான் தொடங்குகிறது. 

தமிழர்களுக்கும் அப்படித்தான் 

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து" என்கிறது நெடுநல்வாடை. 

வருடையைப் பணி மகன் வைப்ப” என்கிறது பரிபாடல். இங்கே வருடை என்பது ஆடு. அதிலிருந்துதான் வருடம் என்ற பெயர் வந்தது. ஆகவே மேஷத்தை முதலாவதாகக் கொண்டே நம்முடைய நாட்கணக்கும் தொடங்குகிறது.

மேஷம் முதல் ராசியாதலால் அந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள் ஆண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்பட்டது. எனவே சூரிய நாட்குறிப்பு முறையைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் நாளே புத்தாண்டு. சரி, அப்படியானால் புத்தாண்டு துவங்கும் நேரம் அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்றால், இல்லை. சூரிய நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து நான்கு வேறுபட்ட புத்தாண்டுத் துவக்கங்கள் உள்ளன. 

ஒரியா முறை  - இந்திய முறையில் ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள 24 மணி நேரம் ஆகும். இந்த ஒரு நாளில் சூரியன் எந்த நேரத்திலும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்ந்தால் அதுவே அந்த மாதத்தின்  துவக்கமாக (மேஷ ராசியாக அது இருந்தால் அது ஆண்டின் துவக்கமாக) கொள்ளப்படும் 

தமிழர் முறை - சூரியன் அந்த நாளின் சூரிய அஸ்தமானதிற்குள் இடம் பெயர்ந்தால் அன்றே அந்த மாதம் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இல்லையேல் அடுத்தநாள் தான் மாதத்தின் முதல் தேதி. 

மலையாள முறை - சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமானதிற்குள் உண்டான நேரத்தில் ஐந்திலிருந்து மூன்று பங்கு நேரத்திற்குள் சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும் இல்லையேல் அடுத்தநாள் தான்.

வங்காள முறை - சூரிய உதயத்திலிருந்து அன்று நள்ளிரவு வரை சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும்.


இவ்வாறு சூரிய நாட்குறிப்பு முறைகளிலேயே நான்கு வேறுபட்ட மாத / ஆண்டுத் துவக்கங்களின் கணக்கிடு முறைகள் உள்ளன. குறிப்பாக இவை ஒரே மதத்தை / மொழியை  சார்ந்து இல்லாமல் அந்த அந்தப் பகுதிகளுக்கு உரித்தனவைகளாக உள்ளன என்பதைக் கவனிக்கவேண்டும்.

இப்போது ஆண்டுகளுக்கு வருவோம், தமிழர் நாட்குறிப்பு முறையில் 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப் படுகிறது. இது என்ன காரணத்தால் ? வானில் தெரியும் கோள்களில் மெதுவாக நகரும் கோள்கள் இரண்டு. வியாழனும் சனியும் தான் அவை. வியாழன் சூரியனைச் சுற்றி வர சுமார் பன்னிரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்று கணித்தனர் அன்றைய வானவியலாளர். ஆனாலும் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் தான் ஆரம்பித்த இடத்திற்கு (ஆரம்பப் புள்ளிக்கு)  வியாழன் வருவதில்லை. அவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளிக்கு அது மீண்டும் வர 60 ஆண்டுகள் ஆகும் என்றும் கணித்தனர் (அதாவது 5 தடவை சூரியனைச் சுற்றிவந்தால் அது தன் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வருகிறது). இதை வைத்து 60 ஆண்டுச் சுழற்சியை ஏற்படுத்தினர். (துல்லியமாகச் சொல்லவேண்டுமானால் வியாழன் அதே இடத்திற்கு திரும்ப வரும் காலம் 83.02 ஆண்டுகள், தற்கால வானவியல் உப காரணங்களின் கணிப்புப்படி) அதே போல் சனி கிரகம் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 60 ஆண்டுகளில் அது இருமுறை சூரியனைச் சுற்றி வந்துவிடும். இதனால் 60 ஆண்டு காலக்கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பொ. வ. ஆறாம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் எல்லா இடத்திலும் இந்த 60 ஆண்டுச் சுழற்சி முறை பின்பற்றப்படுவது இல்லை. தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் மட்டுமே இம்முறை பின்பற்றப்படுகிறது. சீனாவிலும் இது போன்ற 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சரி, இந்த 60 ஆண்டு முறையை மட்டுமா தமிழர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் இல்லை. கலி வருடம் என்ற நீள் நாட்குறிப்பு முறையையும் பின்பற்றுவோர் உண்டு. இது கலியுகம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கலியுகம் பொ.வ.மு 3102ம் ஆண்டு துவங்கியதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் இப்போது நடக்கும் கலி ஆண்டு 5117. தமிழர்களைத் தவிர கலி ஆண்டை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்களும், வங்காளிகளும் மட்டுமே.

கல்வெட்டுகள்

கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டால், தமிழர்களுடைய ஆரம்ப காலக் கல்வெட்டுகளில் சக வருடத்தையும் கலி வருடத்தையும் குறிப்பிடும் கல்வெட்டுகளைக் காணலாம். ஆனால், மாதங்களைக் குறிக்கும் போது அந்த மாதத்திற்கு உரிய ராசிப் பெயர்களையே (மேட ஞாயிறு, இடப ஞாயிறு) குறிப்பிட்டிருக்கின்றனர். இதிலிருந்து ராசிகளை வைத்தே ஆண்டுக்கணக்கு இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 


பிற்காலச்சோழர்களின் காலத்திலிருந்து, வியாழன் சுழற்சியைக் கணக்கில் கொண்டு தற்போது வழங்கும் சமஸ்கிருதத்தில் அமைந்த ஆண்டுப்பெயர்கள் குறிப்பிடப்பட்டன. கர்நாடகாவில் உள்ள பலமுரி அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒன்று "சகவருஷ 934 நேய பரிதாவி ஸம்வத்ஸரகே" என்று பரிதாபி வருடப் பெயரைக் குறிப்பிடுகிறது. போலவே வீர ராஜேந்திர சோழனின் சாரலா செப்பேடு "சௌம்ய ஸம்வத்ஸரத்து" என்று சௌம்ய ஆண்டுப் பெயரைக் குறிப்பிடுகிறது. 


அதற்குப் பின்னால் வந்த கல்வெட்டுகளில் பெரும்பாலும் இந்தப் பெயர்களே குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றன. 



இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் பின்பற்றி வந்தது சூரியன் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மேஷத்தை அதாவது சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டுகளே. 






Friday, 5 November 2021

சிலப்பதிகாரத்தின் காலம் - 3



சென்ற பகுதியில் கோவலனும் கண்ணகியும் மே 8, 130ம் ஆண்டு புறப்பட்டு கவுந்தியடிகளோடு மதுரை சென்றார்கள் என்று பார்த்தோம். ஆங்காங்கே தங்கி அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி அவர்கள் உறையூர் வந்து அங்கே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து மதுரை செல்லும் வழிகளைப் பற்றிக் கேட்கின்றனர். அவன் கொடும்பாளூரிலிருந்து சிவபெருமானின் சூலாயுதம் போல மூன்று வழிகள் மதுரை நோக்கிச் செல்கின்றன என்று கூறுகிறான். ஒன்று தற்போதைய ரயில் பாதை, அதாவது திண்டுக்கல் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழி, இரண்டு நத்தம், திருமாலிருஞ்சோலை வழியாக மதுரை செல்லும் வழி. மூன்று மேலூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதைய தேசிய நெடுஞ்சாலை). இதில் மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்து பயணிகள் செல்கின்றனர். இடைப்பட்ட காலக்குறிப்புகள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 11, 130

புகாரிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் பாண்டிய நாட்டில் உள்ள ஒரு பாலை நிலத்தை அடைகின்றனர். இது மேலூருக்கு அருகில் உள்ள பகுதியாக இருக்கக்கூடும். இன்னும் இது வறண்ட நிலமாகவே உள்ளது. காலை 'செங்கதிர் வெம்மையின் தொடங்க', வெய்யில் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள ஐயையின் கோட்டத்தை அடைகின்றனர். இது எந்தக் கோவில் என்பது ஆய்வுக்குரியது. அங்கே வேட்டுவ வரி நிகழ்கின்றது. மாலை வருகிறது. அதன்பின் கவுந்தியடிகள் கண்ணகியிடம் ஆறுதல் சொல்லத்தொடங்கி " வேனில் திங்களும் வேண்டுதி" என்கிறார். அதாவது இளவேனிலின் பொழுது கணவனைப் பிரிந்து இருந்த உனக்கு இந்த முதுவேனில் சந்திரன் வேண்டும் போலும் என்கிறார். இதிலிருந்து அது முதுவேனில் என்பது தெளிவாகிறது (ஆனி -ஆடி முதுவேனில் காலம்). இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால் 'குடும்பத்தில் குழப்பம்' வந்துவிடும் என்பதைக் கண்ட கோவலன் சரி கிளம்பலாம் என்று சொல்கிறான். இரவு முழுவதும் நடந்து காலையில் 

"கான வாரணம் கதிர் வரவு இயம்ப" ....கோழி கூவும் வேளையில் "மறைநூல் வழக்கத்துப் புறைநூல் மார்பர் உறை பதி" - அந்தணர்கள் வாழும் ஒரு ஊரைச் சென்று அடைகின்றனர். வேதபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட திருவாதவூராகவே இது இருக்கக்கூடும். 

ஜூலை 12, 130

கண்ணகியையும் கவுந்தியடிகளையும் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு கோவலன் நீர்க்கடன்களை அளிக்க நீர்நிலை ஒன்றைத் தேடிச் செல்கிறான். அங்கே கௌசிகன் என்ற வேதியனைப் பார்க்கிறான். 'பாசிலைக் குருகின் பந்தலைப் பொருத்தி' - குருக்கத்தி இலைகளால் ஆன நிழலில் இருவரும் உரையாடுகின்றனர். பூக்களெல்லாம் உதிர்ந்ததால் குருக்கத்தி உள்ள நிழல், அதாவது முதுவேனில் என்பது இவ்வரிகளால் மேலும்  உறுதியாகிறது. அதன்பின் கோவலன் திரும்பி வந்து பாணர்களோடு அன்றைய பொழுதைக் கழிக்கிறான். அவர்களிடம் மதுரை எவ்வளவு தொலைவு என்று கேட்க, நகரின் வாசம் இப்போது காற்றில் வருவதால் அருகில்தான் இருக்கிறது என்று பாணர்கள் கூற. 'முன் நாள் முறைமையின் இருந்தவ முதல்வியோடு' - முதல் நாளைபோலவே இரவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலையில் மதுரையின் எல்லையை அடைகின்றனர். 

ஜூலை 13, 130

ஊருக்கு வெளியில் உள்ள புறஞ்சேரி ஒன்றில் மூவரும் தங்குகின்றனர். சூரியன் உதிக்கிறது. கோவலன் கவுந்தியடிகளிடம் அனுமதி கேட்டு மதுரையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான். இங்கே இரண்டு குறிப்புகள் வருகின்றன.

"குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்" அதாவது மேல் திசையிலிருந்து காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கொடிகள் அசைகின்றன. ஆகவே தென்மேற்குப் பருவக்காற்று வேகமாக வீசும் ஆடி மாதம் அது என்பது தெளிவாகிறது. மேலும் 

"வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர

ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்"

என்கிறார் இளங்கோவடிகள். வேனில் காலத்தில் அரசன் வேறு இடத்திற்குச் செல்லவிருக்கின்ற கடை நாள், அதாவது முதுவேனிலின் கடைசிப் பகுதி என்கிறார். ஆடி மாதக் கடைசி இது என்பது இந்த ஜூலை 13ம் தேதிக்குப் பொருந்தி வருகிறது. ஆவணி அவ்வருடம் 23ம் தேதி பிறந்துவிடுகிறது  

மாலை வீடு திரும்புகின்ற கோவலனையும் கண்ணகியையும் ஆயர் குல மகளான மாதரியிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கிறார் கவுந்தியடிகள். மாதரி ஒரு வீட்டை அவர்களுக்கு ஒதுக்குகிறாள். கண்ணகி இரவு உணவு சமைத்துப் போடுகிறாள். அன்று இரவே கோவலன் சிலம்பை விற்கப் புறப்படுகிறான். பொற்கொல்லன் வஞ்சம் செய்ததும் அதனால் கோவலன் இரவோடு இரவாகப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்த விஷயம்.

ஜூலை 14, 130

காலையில் கண்ணகியிடம் செய்தி சொல்லப்படுகிறது. கோவலனைப் பார்த்துக் கதறுகிறாள். அதன்பின் அவன் உயிர்பெற்று வானுலகம் செல்கிறான். பிறகு கண்ணகி பாண்டியன் அரண்மனை செல்கிறாள். அங்கே வழக்கு நடைபெறுகிறது. உண்மை தெரிந்து பாண்டியனும் பாண்டிமாதேவியும் உயிர் துறக்கின்றனர்.  கண்ணகி வஞ்சினம் உரைக்கிறாள். அந்தநாள் தான் 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து, அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளி வாரம்

இது ஜூலை 14, 130க்கு பொருந்தி வருவதைப் பார்த்தோம். ஆகவே இதுவரை காலக்கணக்குச் சரியாகவே வருகிறது. 

இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பொயு 130ல் நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இது சிலம்பின் காலத்தை சுட்டியது மட்டுமல்லாமல், சங்க காலப் பாண்டியர் வம்சத்தின் கால வரிசையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்  


சிலப்பதிகாரத்தின் காலம் - 2

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அக்காப்பியத்தில் வந்த வானியல் குறிப்பை வைத்து மதுரை எரிக்கப்பட்ட நாள் ஜூலை 14, 130 என்பதையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தனி மரம் தோப்பாகாது அல்லவா. ஆகவே சிலம்பில் உள்ள மற்ற குறிப்புகளை வைத்துக்கொண்டு அவை இந்த வருடத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய முனைந்தேன். அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்




கண்ணகியும் கோவலனும் "மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட"  திருமணம் செய்து கொள்வதோடு தொடங்குகிறது இந்தக் காப்பியம். அவர்கள் சில ஆண்டுகள் இன்புற்று வாழ்ந்தனர் என்பதை "உரிமைச் சுற்றமோடு....யாண்டு சில கழிந்தன" என்று சொல்லி விட்டுவிடுகிறார் இளங்கோ அடிகள். அதன் பின் அரங்கேற்று காதையில் கோவலன் மாதவியின் மாலையைப் பெற்று அவளோடு போய் விடுகிறான். அங்கும் சில ஆண்டுகள் அவர்கள் இருவரும் வாழ்ந்திருக்கக் கூடும். ஏனெனில் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, அதற்கு தன்னைக் காத்த தெய்வமான மணிமேகலையின் பெயரை வைத்து மகிழ்கிறான் அல்லவா. ஆனால், எத்தனை ஆண்டுகள் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. 

அதன்பின், ஒரு வருடத்தில் இந்திரவிழாவிற்கான அறிவிப்பு வெளியாகிறது. சிலம்பில் அதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அந்த ஒரே ஆண்டில் நடந்தேறிவிடுகின்றன. நாம் பார்த்த பொயு 130க்கு அந்தக் குறிப்புகள் எல்லாம் சரியாக வருமா என்பதைப் பார்க்கவேண்டும். முதலில் இந்திர விழா தொடங்கும் நாள் "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என்று இளங்கோவடிகள் விழாவுக்கான கொடியேற்றுத் திருநாள் நடந்த தினத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி வரும் நாள்.  இது ஒரு அபூர்வமான நிகழ்வு அல்ல என்றாலும் சில சமயம் ஹஸ்த நட்சத்திரத்திலும் அல்லது சுவாதி நட்சத்திரத்திலும் கூட பௌர்ணமி வருவதுண்டு. பொயு 130ம் ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று பௌர்ணமி வந்திருக்கிறது. 


அதாவது ஏப்ரல் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.   ஆகவே இதற்கு ஒரு டிக் போட்டுக்கொண்டு மேலே நகர்வோம். (சதுர்த்தசி என்று எழுதியிருப்பதைப் பார்த்து குழம்பவேண்டாம், அது மதியம் வரைதான் அதன் பின் பௌர்ணமி வந்து விடுகிறது). இந்த வருடமும் அப்படித்தான் வந்திருக்கிறது.



இந்திர விழா எத்தனை நாட்கள் நடந்தது என்பதைப் பற்றிய குறிப்பு சிலம்பில் இல்லை. ஆனால் அதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில் "விழாக்கோள் எடுத்த நாள் ஏழ் நாளினும்" என்ற குறிப்பு உள்ளது. அதாவது கொடி ஏற்றி இருபத்து எட்டு நாட்கள் இந்த விழா நடந்திருக்கிறது. அதன்படி ஏப்ரல் 9, 130ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்திர விழா மே 6, 130 வரை நடந்திருக்கிறது. அதாவது வைகாசி மாதம் மையப்பகுதி வரை. மே 6 தான் நிறைவு நாளான கடல் ஆடு விழா. இப்போதும் கோவில் விழாக்களில் நிறைவு நாள் 'தீர்த்தவாரி' உற்சவமாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கலாம். அதன்படி மே 6ம் தேதி நடந்த கடலாடு விழாவில் கலந்து கொண்டு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் செல்கிறார்கள். அங்கே கானல் வரி நிகழ்கிறது. கோவலன் சண்டை போட்டுக்கொண்டு "பொழுது ஈங்குக் கழிந்தது" என்று தனியே சென்று விடுகிறான். அதனால் மாலை நேரத்தில் அவன் கிளம்பியிருக்கலாம் என்று கருதலாம். மாதவியும் வீடு திரும்பிவிடுகிறாள். அன்று இரவு முழுவதும் காத்திருக்கிறாள். 

மே 7, 130

இளவேனில் காலம் மாதவியை வாட்டுகிறது. "இன் இளவேனில் வந்தது காண்" என்கிறார் இளங்கோ.  தமிழர் காலக் கணக்குப் படி சித்திரையும் வைகாசியும்  இளவேனில் காலம். மதிய உணவு வரை கூட கோவலன் வீடு வரவில்லை என்பதால் கவலை கொண்டு தன் தோழியான வசந்த மலையைத் தூது அனுப்புகிறாள். மாதவியைப் பிரிந்து சென்ற கோவலன் உடனே கண்ணகியிடம் திரும்பச் செல்லவில்லை என்பது தெரிகிறது. இரவு முழுவதும் ஏதாவது மண்டபத்தில் தங்கியிருந்திருக்கக்கூடும். மறு நாள் வெறுப்போடு அலைந்து கொண்டிருந்த கோவலனை வசந்தமாலை கடைத்தெருவில் சந்திக்கிறாள். மாதவி கொடுத்த ஓலையை வசந்த மாலை "கூல மறுகின் கோவலற்கு அளிப்ப" ...அவன் அதை மறுத்து விட்டுச் சென்று விடுகிறான். அதை மாதவிக்குத் தெரிவித்த வசந்த மாலை "மாலை வாரார் எனினும் ...காலை காண்குவாம்" - மாலை வந்துவிடுவான் இல்லையென்றால் காலை வருவான் என்று ஆறுதல் சொல்கிறாள்.

ஆனால் கோவலன் வேறு மாதிரிச் சிந்திக்கிறான். இந்த ஊரில் இனிமேல் இருந்தால் மாதவி தொடர்ந்து தொந்தரவு தரக்கூடும். ஊர்ப் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை அவன். சோழ மன்னரிடம் மாதவி 'Haressment Case' கொடுத்துவிட்டால் பெருத்த அவமானம். குழந்தையை வேறு கொடுத்துவிட்டான். ஆகவே உடனே ஊரை விட்டுச் செல்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்த அவன், கண்ணகி வீட்டிற்குச் செல்கிறான். முன்னிரவு நேரம், தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிற நேரத்தில் போய்ச்சேருகிறான். இருவரும் படுக்கையறையில் சந்திக்கின்றனர். "பாடு அமை சேக்கையிட் புக்கு" என்று இதை அடிகள் குறிப்பிடுகிறார். சுருக்கமாக நாலேவரிகளில் தன் செய்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உடனடியாக மதுரைக்குப் புறப்படவேண்டும் என்று சொல்கிறான். பெண் விஷயத்தில் மாட்டிக்கொண்டால் இப்படித்தான் உடனே கிளம்பவேண்டியிருக்கும் என்பதை கண்ணகி "நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி சிலம்பு உள" என்று சொல்லாமல் சொல்கிறாள். இப்போது அடுத்த வானியல் குறிப்பு வருகிறது. 

"கங்குல் கனை சுடர் கால் சீயா முன்"

"வான் கண் விழியா வைகறை யாமத்து மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க" 

அப்படியென்றால் கங்குல் நேரம், கருக்கல் என்று சொல்வோமல்லவா அந்த அதிகாலை நேரம். சூரியன் உதிக்காத, வெண் மதி நீங்கி விட்ட இருள் நேரம். ஆக அந்த நேரத்தில் சூரியனும் உதிக்கவில்லை, நிலவும் வானில் காணப்படவில்லை. ஆகவே அந்த நாள் வளர் பிறை நாளாகவே இருக்கக்கூடும். ஏனெனில் தேய் பிறையில் பௌர்ணமி தொடங்கி அடுத்த 14 நாட்கள் காலையில் நிலவு தெரியும். இதனால் உரை ஆசிரியர்கள் இதை பூர்வ பட்சக் காலை என்று குறித்தனர். அதன் படி பார்த்தால். மே 7ம் தேதி இரவு - மே 8ம் தேதி திங்கள் கிழமை அதிகாலை, வளர்பிறையின் பதிமூன்றாம் நாளான திரயோதசி . ஆகவே இந்தக் குறிப்பும் சரியாகப் பொருந்தி வருகிறது அல்லவா. அடியார்க்கு நல்லார் இதை ஒரு நாள் நகர்த்தி அதாவது செவ்வாய் அதிகாலை, கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய தீய நாளில் அவர்கள் கிளம்பினர் என்று எழுதியிருக்கிறார். ஆனால் செவ்வாய் அதிகாலை பௌர்ணமி வந்துவிடுகிறது. அப்போது நிலவு அதிகாலையில் தெரியும் நாள் என்பதால், தீய நாள் குறிப்பு இருக்கவேண்டும் என்பதற்காக அவர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மே 8, 130 அதிகாலை வீட்டை விட்டுக் கிளம்பிய கோவலனும் கண்ணகியும் இலவந்திகைப் பள்ளிக்குச் செல்கின்றனர். அப்போது கோவலனிடம் கண்ணகி மதுரைக்குச் செல்ல எத்தனை நாட்கள் என்று கேட்க, அவன் 'ஆறு ஐங் காதம்' என்கிறான். அதாவது முப்பது காதம், கிட்டத்தட்ட 450 கிமீ. பூம்புகாரிலிருந்து கிளம்பினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை திருப்பத்தூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதுபோல) இல்லாததால், அவர்கள் உறையூர் ராஜபாட்டை மூலம் அவ்வூரை அடைந்து அதன்பின் உறையூர்- மதுரை வழி மூலம் மதுரை வந்து சேருகிறார்கள். இது 450 கிமீயை ஒத்திருக்கிறது. 

இருவரும் இலவந்திகைப் பள்ளியை அடைந்து கவுந்தியடிகளோடு மதுரை நோக்கிப் புறப்படுகின்றனர். 

"காவதம் அல்லது கடவார் ஆகி, பல நாள் தங்கி செல் நாள் ஒரு நாள்"

அதாவது ஒரு நாளில் ஒரு காதம் கூடச் செல்லாமல், பல நாட்கள் பல இடங்களில் தங்கித் தங்கிச் சென்றார்களாம். அவர்கள் மதுரையை எப்போது அடைகிறார்கள். பார்ப்போம். 







Tuesday, 12 October 2021

சிலப்பதிகாரத்தின் காலமும் மதுரை எரிக்கப்பட்ட நாளும்

ஒரு சிறு முன்னுரை 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் எதிராஜன், சிலப்பதிகாரம் பற்றிய என்னுடைய பழைய ட்வீட் ஒன்றைக் குறிப்பிட்டு அது நடந்த காலம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டீர்களா என்று கேட்டிருந்தார். சிலம்பில் இடம்பெற்ற வானியல் குறிப்பு பற்றிய ட்வீட் அது. அதற்கான நல்ல astronomy software ஒன்று வேண்டும் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நேற்று மதிப்பிற்குரிய ஜோதிடர் நரசிம்ம ராவ் அவர்கள் தன்னுடைய ஜெகந்நாத ஹோரா செயலியைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதில் சூரிய சித்தாந்தத்தை வைத்து மகாபாரத காலத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள் என்றும் அது தவறான முறை என்றும் தெரிவித்திருந்தார். தவிர பொயுமு 12899லிருந்து அந்த செயலியைப் பயன்படுத்தி திருக்கணித முறையில் கிரக நிலைகளை அறியலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்தது சிலம்பைப் பற்றிய ஆய்வில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜெகந்நாத ஹோரா செயலியையும் அந்த வானியல் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஆய்வு செய்தேன். அதன் விளைவே இந்தக் கட்டுரை. 



சிலப்பதிகாரத்தின் காலம் 

தமிழ் கூறும் நல்லுலகிற்கே உரிய வழக்கப்படி சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றி ஏகப்பட்ட ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இருப்பினும் பல ஆய்வாளர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களை சிலப்பதிகாரம் நடந்த காலமாக நிறுவுகிறார்கள். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது சிலப்பதிகாரம் நடந்த காலம் வேறு அது ஒரு காப்பியமாக எழுதப்பட்ட காலம் வேறு என்பதை. காப்பியம் நடந்த காலம் எதுவென்ற வேறுபாடு இருந்தாலும், அது எழுதப்பட்டது சமணமும், புத்த மதமும் தமிழகத்தில் தலை தூக்கத் தொடங்கிய சங்கம் மருவிய காலத்தில் என்பதில் பெரும்பாலான ஆய்வாளர்கள் ஒத்துப்போகிறார்கள். இதை கவனத்தில் இருத்திக்கொண்டு சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றிய ஆய்வுகளைக் கவனிக்கலாம்

பொயுமு 3ம் நூற்றாண்டு

சில ஆய்வாளர்கள் பொயுமு 3ம் நூற்றாண்டே சிலப்பதிகாரம் நிகழ்ந்த ஆண்டு என்று வாதிடுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பொயுமு 3ம் நூற்றாண்டு கடைச்சங்க காலத்தின் ஆரம்ப காலம். கடைச்சங்கப் புலவர்களில் மூத்தவர்களில் ஒருவரான மாமூலனார் 'வம்ப மோரியரின்' படையெடுப்பையும் அவர்களைத் தோற்கடித்த செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னனைப் பற்றியும் தன் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சிலப்பதிகாரமோ மூன்று பெரு மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது. சங்க காலச் சோழ மன்னர்களில் சிறந்தவனான கரிகாலச் சோழனின் இமயப் படையெடுப்பையும் அங்கே அவன் புலிக்கொடியைப் பொறித்ததையும் இந்திரவிழவு ஊர் எடுத்த காதை குறிப்பிடுகிறது. ஆகவே கரிகாலச் சோழன் சிலப்பதிகாரம் நடந்த காலகட்டத்திற்கு சற்று முன்னால் வாழ்ந்திருக்கக்கூடும். அதேபோல 'ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின்' ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் சிலப்பதிகாரம் நடந்திருக்கிறது. அடுத்ததாக வரும் சேரன் செங்குட்டுவன் இளையவன். காப்பியத்தின் நிறைவுப் பகுதிகளில் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று கனக விசயர் தலைமேல் கண்ணகிக்குச் சிலை வைக்க கல் கொண்டுவந்தான் என்று சொல்கிறது சிலப்பதிகாரம். 

பொயுமு 3ம் நூற்றாண்டு வட இந்தியாவில் மௌரியப் பேரரசு வலிமையாக இருந்த காலம். மாமூலனார் குறிப்பிடும் வம்ப மோரியரின் படையெடுப்பு பிந்து சாரரின் காலத்தில் நடந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. அவருக்குப் பின்வந்த அசோகர் தமிழ் மன்னர்களோடு நட்புடன் இருந்ததாக தன்னுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே மூன்று பெரிய தமிழ் மன்னர்கள் அடுத்தடுத்து வடநாட்டு மன்னர்களை, அதுவும் வலுவான அசோகரை வென்றதாகச் சான்று ஏதும் இல்லை.தவிர, பொயுமு 3ம் நூற்றாண்டில் நடந்த கதையை ஏன் கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் கழித்து சங்கம் மருவிய காலத்தில் இளங்கோவடிகள் காப்பியமாகப் படைக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், தமிழ் மன்னர்களுடைய காலக்கணக்கின் படி சங்க காலத்தின் ஆரம்பத்தில் இம்மூன்று பெரும் மன்னர்களும் ஆட்சி செய்ததாகக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட காரணங்களால் பொயுமு 3ம் நூற்றாண்டை ஒதுக்கிவிடலாம். 

பொயு 756ம் ஆண்டு 

திவான் பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை என்பவர் சிலப்பதிகாரத்தில் உள்ள வானியல் குறிப்புகளை வைத்து அது பொயு 756ம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வானியல் குறிப்புகள் சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருந்தி வரும் ஒன்று. பொயு 756 என்பது பல வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக நமக்குக் கிடைக்கும் ஒரு காலம். சைவ சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தோன்றி ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய காலம். சமணமும் பௌத்தமும் மறைந்துகொண்டிருந்த காலம். வட தமிழகத்தில் பல்லவர்களும் தென் தமிழகத்தில் பாண்டியர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். இடைக்காலப் பாண்டியர்களின் வம்சாவளி தெளிவாக செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற காலகட்டம் இது. நெடுஞ்செழிய பாண்டியனைப் பற்றியோ அல்லது மதுரை எரிந்தது போன்ற பெரு நிகழ்வைப் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. ஆகவே வரலாற்றுச் சான்றுகள் அதிகமாக கிடைக்கும் இந்த காலத்தில் சிலப்பதிகாரம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. 

பொயு 2ம் நூற்றாண்டு

மேற்சொன்ன காரணங்களை வைத்துப் பார்க்கும் போது, பல ஆய்வாளர்களின் கருத்தின் படி சிலப்பதிகாரம் நடந்தது பொயு 2ம் நூற்றாண்டு என்பதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வடநாட்டில் மௌரியப் பேரரசு வீழ்ந்து குப்தப் பேரரசு தலைதூக்காத இக்காலகட்டத்தில் பல சிறிய அரசுகள் அப்பகுதியை ஆண்டிருக்கின்றன. ஆகவே தமிழ் மன்னர்கள் வடபுலத்திற்குப் படையெடுத்துச் சென்று வெற்றியடைந்தனர் என்ற செய்தி சரியாகப் பொருந்திவருகின்றது. சிலப்பதிகாரம் இலங்கை மன்னனான கயவாகு கண்ணகிக்குக் கோவில் எடுத்த விழாவில் பங்கேற்றான் என்று குறிப்பிடுகிறது

குடகக் கொங்கரும்மாளுவ வேந்தரும்

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் - வரந்தரு காதை

இந்தக் கயவாகு அரசாட்சி செய்த காலமாக பொயு 114 - 136ம் ஆண்டுகளை மகாவம்சம் குறிப்பிடுகிறது. அவன் தமிழகத்திலிருந்து திரும்பி வரும்போது 'பத்தினிக் கடவுளின் கால்சிலம்பை' கொண்டுவந்தான் என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே இந்த அரசனை செங்குட்டுவனின் சமகாலத்தவனாகக் கருதலாம். 

மேலும் சாதவகனர்களின் அரசனும் வடபுலத்து மன்னர்களின் எதிரியுமான சதகர்ணி செங்குட்டுவனுக்கு வடநாட்டுப் படையெடுப்பில் உதவினான் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த 

நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே - கால்கோள் காதை

இங்கே நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடப்படுகின்ற சதகர்ணிகளின் ஆட்சிக்காலம் பொயு 2ம் நூற்றாண்டு. ஆகவே இந்தக் குறிப்புகளை வைத்து சிலப்பதிகாரம் பொயு 2ம் நூற்றாண்டில்தான் நடந்தது என்று நாம் கொள்ளலாம்.

வானியல் குறிப்பு

இப்போது சிலம்பில் உள்ள வானியல் குறிப்பிற்கு வரலாம். கண்ணகி மதுரையை எரித்த பிறகு அவள் முன் தோன்றிய மதுராபுரித் தெய்வமான அங்கயற்கண்ணி, 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து

அழல் சேர் குட்டத்துஅட்டமி ஞான்று

வெள்ளி வாரத்துஒள் எரி உண்ண

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்” எனும் 

உரையும் உண்டேநிரை தொடியோயே - கட்டுரை காதை

என்று உரைக்கிறாள். அதாவது ஆடி மாதம், இருள் பக்கமான தேய்பிறையில் அழல் என்ற கார்த்திகை நட்சத்திரம் குட்டமாக, அதாவது சிறிதாக இருக்கும் அஷ்டமி திதி, வெள்ளிக்கிழமை மதுரை எரிக்கப்படும் அரசு கேடு உறும் என்பது ஒரு கூற்று என்று அத் தெய்வம் உரைத்தது. இங்கு குட்டம் என்று குறிப்பிடப்படுவது அதன் நான்காம் பாதம் அதாவது ரிஷப ராசியில் என்று என்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. அது முதற் பாதத்தை, அதாவது ஆரம்ப கட்டத்தில் இருப்பதையே குறிக்கும் என்பதை உரையாசிரியர் தெரிவிக்கிறார். 

அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. "ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று

ஆக, நாம் கண்டுபிடிக்க வேண்டியது எந்த வருடத்தில் ஆடிமாதம், தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமை வந்தது என்பதைத்தான். இது ஒரு அபூர்வமான நிகழ்வு. ஏனெனில் ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கின்றான். கடக ராசி புனர்பூசத்தின் நான்காவது பாதத்தையும் பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களையும் கொண்டது. ஆகவே அந்த மாதத்தின் கிருஷ்ண பட்ச அஷ்டமி 6-7 நாட்களுக்கு முன்பு தான் வரும். பெரும்பாலும் அது ரேவதி, அசுவதி அல்லது பரணி நட்சத்திரமாகவே இருக்கும். 

இந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு ஜெகந்நாத ஹோரை செயலியில் தேட ஆரம்பித்தேன் கயவாகுவின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் மேற்குறிப்பிட்டபடி அஷ்டமி அசுவதி-பரணி நாட்களிலேயே பெரும்பாலும் வந்தது. ஜூன் 19, 116ம் ஆண்டு அஷ்டமியும் வெள்ளிக்கிழமையும் வந்தாலும் அன்று ரேவதி நட்சத்திரமாக இருந்தது. இப்படிப் பல ஆண்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், இந்த அபூர்வமான வானியல் நிகழ்வு நடந்திருப்பது ஜூலை 14ம் தேதி, 130ம் ஆண்டு என்று தெரியவந்தது. இந்த நாளில் ஆடி மாதமும் தேய்பிறை அஷ்டமியும் கார்த்திகையின் முதற்பாதமும் சேர்ந்திருந்தன. அன்று இரவுதான் மதுரை கண்ணகியால் எரியூட்டப்பட்டது. 



அதன்பின் நடந்த சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பும், அவனுக்கு உதவி செய்த சதகர்ணியின் காலமும் கண்ணகியின் கோவில் விழாவில் கலந்து கொண்ட கயவாகுவின் காலமும் இதனோடு கச்சிதமாக ஒத்துப்போகின்றன. கடைச் சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் நடந்த  இந்த நிகழ்வுகளை இளங்கோவடிகள் அடுத்த நூற்றாண்டான சங்கம் மருவிய காலத்தில் காப்பியமாகப் பாடியதும் சரியாகப் பொருந்துகிறது. ஆகவே சிலப்பதிகாரம் நடந்த ஆண்டு பொயு 2ம் நூற்றாண்டு. மதுரை எரிந்த நாள் ஜூலை 14, 130 என்பது மேற்சொன்ன ஆய்வின் மூலம் தெளிவாகிறது. 

சரி, அப்படியானால் சிலப்பதிகாரம் நிஜமாகவே நடந்ததா என்று சில நண்பர்கள் கேட்கலாம். என்னைப் பொருத்தவரை சில வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட காப்பியமாகவே அதைக் கருதுகிறேன். பல்வேறு நூல்களால் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் இக்காப்பியத்தை முழுக்க முழுக்கப் புனைவு என்று கருதுவது இயலாத ஒன்று. 






Saturday, 9 October 2021

ஆசீவகத் திரிபுகள்

ஒரு டிவிட்டர் விவாதத்தின் போது நண்பர் ஒருவர் இந்தப் பக்கத்தை தமிழகத்தின் தொல்மதம் ஆசீவகம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டினார். அதாவது ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசர் தமிழ்நாட்டுக்காரராம். இதை எழுதியவர் பெரும் ஆராய்ச்சியாளராம். விக்கி பக்கங்களிலெல்லாம் இதைச் சுட்டுகிறார்களாம். அந்தப் பக்கம் கீழே 



சரி அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவருக்கு ஒரு புறநானூறு பாடல் கிடைத்திருக்கிறது. அதில் அறப்பெயர்ச் சாத்தன் என்ற கொடையாளியின் பெயர் கிடைக்கிறது. அவர் பிடவூரைச் சேர்ந்தவர். அடுத்து தற்போது திருப்பட்டூர் என்று வழங்கப்படும் பிடவூரில் ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான். இரண்டுக்கும் சேர்ந்து முடிச்சுப்போட்டு அந்த அறப்பெயர்ச் சாத்தன்தான் இந்த ஐயனார். அவரே மற்கலி கோசர் என்று ஒரே போடாகப் போடுகிறார். இதில் இரண்டு மூன்று கல்வெட்டுகளையும் காட்டுகிறார். 

இதைக் கொஞ்சம் ஆராயலாமே என்று புகுந்தால், அவர் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் 395ஐ எழுதியவர் நக்கீரர். சங்க காலத்துப் புலவரான நக்கீரர் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப் படையையும் எழுதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சமகாலத்தவர். இந்த நெடுஞ்செழியனின் காலத்தைப் பார்த்தால் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். ஆக நக்கீரரும் அதே காலத்தைச் சேர்ந்தவராகிறார். 

அதேபோல, இந்தப் புறநானூற்றுப் பாடலில் தித்தன் என்ற சோழ அரசன் குறிப்பிடப்படுகிறார். சங்க காலத்து இலக்கியங்களில் முதன்முதலில் குறிப்பிடப்படும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி (மாமூலனாரால் பாடப்பட்டவன்) காலத்தில் இருந்து கணக்கிட்டால் இந்த மன்னனும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே இருக்கக்கூடும். இதுவும் இந்தப் பாடலின் காலத்தை உறுதி செய்கிறது. ஆகவே இந்தப் பாடலில் வரும் வள்ளலான அறப்பெயர்ச் சாத்தன் என்பவரும் பொயுமு 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகவே இருக்கக்கூடும். 

ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசரோ பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமண சமயத்தின் தீர்ந்தங்கரரான மகாவீரரின் சமகாலத்தவர். அவரோடு இணைந்து பயணம் செய்தவர் என்றெல்லாம் சமண நூல்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க 2ம் நூற்றாண்டின் அறப்பெயர்ச் சாத்தன் எப்படி மற்கலி கோசராக இருந்திருக்க முடியும். அப்படி ஒரு சமயத்தை உருவாக்கியவரின் பெயர் ஏன் தமிழ் இலக்கியங்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை ? 

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறது என்று மேலும் கவனித்தால் சாத்தன் உள்ள பிடவூர் உறையூரின் கிழக்கில் (உறந்தைக் குணாது) இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

ஐயனார் கோவில் உள்ள திருப்பட்டூரோ உறையூரின் வடக்கில் இருக்கிறது. நக்கீரர் 'திக்குத் தெரியாமல்' ஏதாவது எழுதிவிட்டாரா என்ன? 

அவர் உதிர்த்த மற்றொரு முத்து "பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது"

அட அப்படியா  என்று அடுத்து அவர் சுட்டிய கல்வெட்டுகளைப் பார்த்தால் அவையெல்லாம் பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர்கள் காலத்துக் கல்வெட்டுகள். அவற்றில் ஐயனார் என்ற பெயரே இல்லை. 

'திருப்பிடவூர் நாட்டுத் தேவதான பிரமதேய திருப்பிடவூர் உடைய பிள்ளையாற்கு....'

தேவதானம் என்பது சைவ மரபுக் கோவில்களைக் குறிக்கும் செயல். அப்படியென்றால் இது சிவன் கோவிலோடு இணைந்த கோவில்தானே. பிள்ளையார் என்பது சிவனின் மகனாக ஐயனாரைச் சொல்வது என்று எடுத்துக்கொண்டாலும் ஆசீவகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு ? இந்தக் கல்வெட்டுகள் எதிலும் ஐயனார் என்ற பெயர் மட்டுமல்ல மற்கலி கோசர் அல்லது சாத்தன் என்ற பெயர் கூட வரவில்லை என்பதைக் கவனியுங்கள். இது எப்படி ஒரு ஆதாரமாகும் என்பதும் விளங்கவில்லை. 

சரி வெள்ளானைச் சுருக்கம் என்ன சொல்கிறது என்பதையாவது பார்ப்போம் என்று அதைப் படித்தால் சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலும் (வெள்ளானை) சேரமான் பெருமாள் நாயனார் குதிரையிலும் ஏறி கைலாயம் செல்கிறார்கள். அங்கே சிவபெருமானை வணங்கி எழுந்த பிறகு, சேரமான் பெருமாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் இறைவனைப் பாடுமாறு விண்ணப்பிக்கிறார் 

சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் 'திருஉலாப் புறம்' அன்று
சாரல் வெள்ளி யங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர்; நலத்தாலே.

திரு உலாப்புறம் என்ற அந்தப் பாடலை கைலாய மலையில் கேட்ட சாத்தனார் புவியில் வந்து திருப்பிடவூரில் அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு உரைத்தார் என்கிறது வெள்ளானைச் சருக்கம். பொயு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர் கைலாயம் சென்ற பிறகுதான் அந்த சாத்தனார் இந்த ஊருக்கு வருகிறார் என்று சொல்கிறார் சேக்கிழார். அப்படியிருக்கு பொயுமு 5ம் நூற்றாண்டிலேயே அறப்பெயர்ச் சாத்தன் என்ற மற்கலி கோசர் இருந்ததற்கான ஆதாரமாக இது எப்படி உள்ளது? 

உண்மையில் சாத்தன் என்ற பெயர் சங்ககாலத்தில் புழங்கிய பெயர்களில் ஒன்று சீத்தலைச் சாத்தனார், சாத்தந்தையார், கருவூர் பூதஞ்சாத்தனார், அழிசி நச்சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார் என்று பல பெயர்களை நாம் அக்காலத்தில் பார்க்கலாம் இதில் அறப்பெயர்ச் சாத்தனார் மட்டும் ஏன் மற்கலி கோசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  என்று தெரியவில்லை. 

தவிர மற்கலி கோசர் தமிழகத்தில் சமாதி அடைந்தது சித்தன்னவாசல் என்றும் அடித்துவிட்டிருக்கிறார். சித்தன்னவாசல் பொயு 2ம் நூற்றாண்டில் எழுந்த சமணர் பள்ளி. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் வளர்ந்த சமண மதங்களின் வழிபாட்டுத்தலங்களில் ஒன்று. இடைக்காலப்பாண்டியர் காலத்தில் பாண்டியன் ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபனின் அதிகாரிகளால் விரிவுபடுத்தப்பட்ட இடம். அங்கே போய் பொயுமு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரின் சமாதி இருந்தது என்று எந்த ஆதாரத்தை வைத்து இவர் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. 

இப்படிக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத, ஆதாரம் கொஞ்சம் கூட இல்லாத ஒன்றை நிறுவ முற்பட்டு அதை ஆராய்ச்சி என்று காட்டுவது இங்கே தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற 'ஆராய்ச்சியாளர்களுக்கு' எப்படியோ அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது என்பது பெரும் கொடுமை. 

Saturday, 12 June 2021

A Tiger in Mahendragiri




Mahendra Giri is a picturesque hill in the Gajapati district of Odisha. It is the second highest mountain peak in the state and a trekkers paradise. It is also bio diversity park having a number of medicinal plants. There are lot of legends associated with it right from Ramayana & Mahabharata days. It is said that Parasurama used to meditate here. 


Yudhistira Temple 

Atop the hill, there are three temples which are called as Yudhistira, Bheema and Kunti temples. All the three temples are dedicated to Shiva. The legends say that Pandavas built these temples during their Vanavas. Many historians date these temples during Gupta period and some later than that.



Bheema Temple



Kunti Temple 

                                                                                         **************


Rajendra Chola sent an expedition to Ganges with the primary objective of bringing the sacred Ganga water to purify his newly built temple at Gangai Konda Cholapuram. He also wanted to perform Digvijaya like the one Samudra Gupta undertook and used this expedition for it. He sent an army northwards with Arayan Rajarajan as a commander.. Arayan Rajarajan’s army marched towards Bengal defeating kingdom after kingdom enroute. Chakkarakottam, Ottaram, Dandabukthi, Dakshina Lada & Uttara Lada fell one by one and finally Chola Army defeated Mahipala of Palas. Tiruvalangadu Copper plates mention that a number of Elephants were made to stand like  a bridge across the river Ganges and the sacred water was carried in a number of Pots on top of them. 


Rajendra was in Kanchipuram when he received this victorious news. He wanted to receive the Ganga Water at the frontier of the kingdom and set out towards Kalinga with an army with Rajaraja Maarayan as the commender. His idea was also to quell any unrest  at the border and he didn’t want any interruption to the army coming from the north. He reached Rajamundry and took the sacred bath in the river Godavari, which is one of the seven sacred rivers of Bharath. When the Chola army entered Kalinga, it faced resistance from the Kalinga King. Rajendra defeated him & his brother and took their elephants as war booty.


Meanwhile, Arayan Rajarajan’s south bound army reached that place with the Ganga water. Rajendra wanted to celebrate this double victory and erected a Vijaya Sthamba in Mahendra Giri. He inscribed the victory message in the Yudhistira temple. The Sanskrit inscription in Telugu script goes like this





“Rajendra Chola won over many countries including the ones with mountains and defeated Kalingapathi. To celebrate this, he made this Vijaya Sthampa”


There are also three incomplete Tamil inscriptions in Kunti temple.





From the second inscription, one can infer that Rajaraja Maarayan received a ‘Veera Angusa’ and conferred a title ‘Vitti Varanamallan’ in the Shivalaya named as Mahendragirisvaram. The third inscription mentions one  Vimalathithan who may be one of the kings defeated by Rajendra.


One can also see a Tiger inscribed at the entrance of the Yudhistira temple. It is interesting to note that the Cholas never forget their rivalry with Pandays and wanted to show that they had subdued them even in a far away country like Kalinga. They had drawn the Pandya symbol of ‘Irattai Kayal’ before the Tiger, the Chola symbol which had seen the golden period during Rajaraja and Rajendra’s regime. 





This is the story of a Tiger found in the Yudhistira temple atop Mahendra Giri. 

Wednesday, 17 March 2021

மீண்டும் காந்தளூர்ச்சாலை


தங்களுக்கு அரசியல் லாபம் ஏதாவது தேவையென்றால் ராஜராஜ சோழனை சீண்டுவது தமிழகத்தில் சிலரின் வழக்கம். அப்படி தமிழகத்தேர்தலை ஒட்டி (??!!) எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. 

அதன் லிங்க் இதோ

முதலில் அதில் உள்ள அபத்தங்களைப் பார்த்துவிடுவோம். 

//இல்லை. அது ஒரு கல்விக்கூடம்! ஒரு பள்ளியின் ஒரு பிரிவை ‘கலம் அறுத்ததைதான்’ இராஜராஜ சோழன் முதல் அனைத்து பிற்கால சோழர்களும் மாபெரும் சாதனையாக கருதியிருக்கிறார்கள்!//

'காந்தளூர்ச்சாலை கலம் அறுத்து' அந்தக் கல்விக்கூடத்தை ராஜராஜன் அழித்துவிட்டால் பிறகு ஏன் மற்ற சோழ மன்னர்கள் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகளும் காந்தளூர்ச்சாலை கலமறுத்ததைக் குறிப்பிடுகின்றன. 

"குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தான்" என்கிறது சடையவர்மன் பராந்தக பாண்டியனின் மெய்க்கீர்த்தி. ஏன் இப்படி ஒரு 'கல்விக்கூடத்தை' ஏன் 'போர் செய்து' பலரும் அழிக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அடுத்து

//இந்த இடத்தில் தில்லைவாழ் அந்தணர்களின் வரம்பு மீறிய அதிகாரத்தைக் குறைக்க நந்திவர்ம பல்லவன் தில்லை ஆலயத்தில் பெருமாள் சிலையை வைத்ததும்... அதை எதிர்த்து தில்லைவாழ் அந்தணர்கள் கலகம் செய்ததையும்... பிறகு தில்லைவாழ் அந்தணர்களின் துர்போதனையை ஏற்று அந்த பெருமாள் விக்கிரகம் குலோத்துங்க சோழன்//

நந்திவர்ம பல்லவனின் காலம் பொயு 8ம் நூற்றாண்டு. பெருமாளை வைத்ததை எதிர்த்து தில்லை வாழ் அந்தணர் கலகம் செய்தார்களாம். விஜயாலயன் முதல் தொடர்ந்து சைவர்களாக, சிவபாத சேகரர்களாக, சிவசரண சேகரர்களாக இருந்த பெருமன்னர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் நானூறு ஆண்டுகள் கழித்து பதவிக்கு வந்த இரண்டாம் குலோத்துங்கன் அதைச் செய்தானாம். எப்படி இருக்கிறது கதை. ஆனால் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை தில்லை வாழ் அந்தணர்கள் வழிபட்டனர் என்று வைணவ ஆழ்வார்களே குறிப்பிடுவதில் இந்தச் சாயம் வெளுத்து விடுகிறது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம் (பெரிய திருமொழி)

“தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்” (குலசேகர ஆழ்வார்)

//சோழ தேசத்தில் - முதன் முதலில் உருவான வீர நாராயண சதுர்வேதி மங்கலத்தில் கணிசமான அளவில் ‘சாலை’களால் பயிற்றுவிக்கப்பட்ட சேர நாட்டு அந்தணர்கள் குடியேறினார்கள்.//

இதற்கெல்லாம் ஆதாரங்கள் என்ன என்று கேட்கக்கூடாது. மூச். வீரநாராயண ஏரியை வெட்டிய ராஜாதித்தர் குறுகிய காலத்திலேயே மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிரான தக்கோலப்போரில் மரணமடைந்துவிட்டார் என்று பொன்னியின் செல்வன் வாசகர்களுக்குக் கூடத்தெரியும். அடுத்து பட்டத்திற்கு வந்தது பரம சைவரான கண்டராதித்தர். அவர் காலத்தில் சேரர்கள் இங்கே குடியேறினார்களாம். மேலும்

//எனவே மதுராந்தகர் சிம்மாசனத்தில் அமராமல் ஆதித்த கரிகாலன் சோழ மன்னரானால் தங்கள் கனவே சிதைந்துவிடும் என்ற முடிவுக்கு வந்த உடையார்குடி அந்தணர்கள் - ‘சாலை’களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருந்த தமிழக குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தார்கள்//

ஒரு வழியாக பாலகுமாரனின் உடையார் கதைக்கு வந்துவிட்டார். கதைக்கு எதற்கு ஆதாரம் ? ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சேர நாட்டவர் என்பதற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.

"பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும். ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம்"

மிகத்தெளிவாக குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருப்பது கொலை செய்தவர்கள் பாண்டிய நாட்டவர் என்பது. வீரபாண்டியனின் தலையை ஆதித்தன் வெட்டிய அடாத செயலுக்கு எதிராகவே இந்தப் படுகொலையைச் செய்தனர் அவர்கள். உடையார் போன்ற நாவலை வைத்துக்கொண்டு சரித்திரம் எழுதினால் இப்படித்தான் ஆகும். கட்டுரை முடிவில் பனைமரத்தில் பசுவைக் கட்டிய கதையாக 'பெரியார்' 'சாலை என்பது பிராமண ஆதிக்கம்' என்று ஏதேதோ சொல்லி கட்டுரையை முடித்து வைத்துவிட்டார். 

இவ்வளவு அபத்தங்கள் நிறந்த இந்தக் கட்டுரை சொல்லவருவது என்ன. சாலை என்பது சேரநாட்டு அந்தணர்களால் நிறுவப்பட்ட கல்விக்கூடம். அதைத்தான் ராஜராஜன் முதலில் அழித்தான் என்பதுதான் கட்டுரையின் அடித்தளமாக இருக்கிறது. ஆனால் இதில் உள்ள பெரிய ஓட்டை காந்தளூர்ச்சாலை அமைந்திருந்தது அப்போதைய 'ஆய்வேளிர்' ஆண்டு கொண்டிருந்த நாட்டுப் பகுதியில். சேர நாட்டுத் 'தளி'களுக்கும் அதற்கும் தொடர்பே கிடையாது. சேர நாட்டின் எல்லை ராஜராஜன் ஆட்சி செய்த பொயு 10ம் நூற்றாண்டில் கோட்டயம்/ திருக்கடித்தானமாகவே இருந்தது. இதன் காரணமாகவே பின்னால் சேர நாட்டின் மீது படையெடுத்த ராஜராஜன் உதகையை அழித்தான். காந்தளூச்சாலை பாண்டிய நாட்டவர்களால் கைப்பற்றப்பட்டு 10ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆதரவாளர்களான ஆய் மன்னர்களின் கையில்தான் இருந்தது. ஆகவே பாண்டிய அரசனான அமரபுஜங்கனை வெற்றி கொண்ட கையோடு (திருவாலங்காட்டுச் செப்பேடுகள்) ஆய் குல அரசர்களின் கடற்படைத்தளங்கள் / துறைமுகங்களான விழிஞத்தையும் காந்தளூர்ச்சாலையையும் ராஜராஜன் தாக்கி அழித்து பாண்டியர்கள் தலைதூக்காவண்ணம் செய்தான். 

அப்போது காந்தளூச்சாலை என்பது என்ன? "வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ" என்கிறார் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில். வேலை என்றால் கடல். அந்தக் கடலைக் கொண்டு விழிஞம் அழித்து சாலையைக் கைக்கொண்டாய்' என்று புகழ்கிறார் அவர். கடலில் அருகே காந்தளூர்ச்சாலை இருந்ததால் இது ஒரு கடற்படைத் தளமாகவோ அல்லது கடற்படைப் பயிற்சி நிலையமாகவோ இருந்திருக்கவேண்டு. மேலும் "வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து" என்று முதலாம் ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி குறிப்பிட்டு இதை உறுதிப்படுத்துகிறது. கடல் அருகே உள்ள காந்தளூர்சாலை ஒரு கடற்படைத் தளமே. குறைந்தபட்சம் இது வீரர்களுக்கான பயிற்சிப்பாசறையாக இருந்திருக்கக்கூடும். அதனால் தான் 'தண்டு கொண்டு' - படை கொண்டு அல்லது 'கன்னிப்போர்' செய்து இதை அழிக்கவேண்டியிருக்கிறது. அந்தணர்களின் கல்விக்கூடத்தை அழிக்கப் படை எதற்கு? 

எதையாவது எழுதி அந்தணர் ஆதிக்கம் என்ற பயமுறுத்தலைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். இதற்கு பல பிரம்மதேயங்கள் அமைத்தவனும் அந்தணர்பால் பேரன்பு கொண்டவனுமான ராஜராஜனைத் துணைக்கழைத்திருப்பதுதான் நகைச்சுவை. 



Wednesday, 3 March 2021

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு யாருடைய காலத்தியது ?



புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் குடுமியான்மலை. இந்த ஊரில் உள்ள குன்றில் குடுமித்தேவர் என்ற பெயரில் உள்ள சிவபெருமானின் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள் புகழ் பெற்றவை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் அளிந்த நிவந்தங்களைப் பற்றிய கல்வெட்டுகள் குடுமித்தேவர் கோவிலிலும் அதை அடுத்துள்ள குடைவரைக் கோவிலிலும்  உள்ளன.  அவற்றில் மிகவும் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது குடைவரைக்கோவிலில் காணப்படும் இசைக்கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் இருந்துவரும் இசை மரபினுடைய ஆழத்தைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அது பற்றிய விவரங்களை விரிவாக இன்னொரு சமயம் ஆராயலாம். 

அந்த இசைக் கல்வெட்டும் குடைவரையும் யார் காலத்தியது என்பது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான திரு. மீனாட்சி போன்றவர்கள் இது மகேந்திர பல்லவன் காலத்தியது என்றும் அவனால் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, இக்கல்வெட்டு பல்லவ கிரந்தத்தால் அமைந்துள்ளது, மகேந்திர பல்லவன் இசையில் தேர்ச்சி பெற்றவன், இக்கல்வெட்டின் அருகே பரிவாதினி என்ற யாழின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. அதிலும் தேர்ச்சி பெற்றவன் மகேந்திரன் போன்றவை ஆகும். 

ஆனால் பேராசிரியர் மகாலிங்கம், வெங்கையா ஆகியோர் இதிலிருந்து மாறுபடுகின்றன. இதைப் பற்றிய விவரங்களை ஆராய்ந்ததிலிருந்து இவர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக்கவே வேண்டியிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 

1) குடைவரைக் கோவிலின் அமைப்பு, அதன் தூண்கள், துவாரபாலகர்கள் ஆகியவை அமைந்துள்ள முறை மகேந்திர பல்லவனின் குடைவரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. பாண்டியர் பாணிக் கட்டடக் கலையை அவை  பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. 

2) உதாரணத்திற்கு இசைக் கல்வெட்டிற்கு அருகிலுள்ள விநாயகர் சிலையைப் பார்ப்போம். வலது காலை ஊன்றி, இடது காலை மடித்து கையில் மோதகத்துடன் காணப்படும் இத்திருமேனியை போன்ற விநாயகர்களை பல பாண்டியர் குடைவரைகளில் காணலாம். ஆகவே இது பாண்டியர் பாணி என்பது ஊர்ஜிதமாகிறது. 


குடுமியான் மலை விநாயகர்


திருமலாபுரம் குடைவரை

3) இந்தக் கோவிலில் பல்லவர் கல்வெட்டுகள் ஏதுமில்லை. மாறாகப் பாண்டியன் மாறன்  சடையன், ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் போன்ற இடைக்காலப் பாண்டியர்களுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

4) மகேந்திரன் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களில் பலரும் இசை ஆர்வம் கொண்டவர்களே. உதாரணமாக வேள்விக்குடிச் செப்பேடுகள் பாண்டியன் நெடுஞ்சடையனை கீத கிந்நரன் என்று அழைக்கின்றன. 

5) பரிவாதினி என்ற யாழ் மகேந்திரனால் மட்டும் பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதும் சரியல்ல. காளிதாசனின் ரகுவம்சத்திலும், பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்திலும் பரிவாதினி என்ற யாழ் இடம்பெற்றுள்ளது. 

6) இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு, மகேந்திரனை அவன் வென்றவுடன் காவிரியில் யானைகளால் பாலம் அமைத்து சோழ, பாண்டியர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறது. ஆகவே காவிரி ஆறே மகேந்திரனின் தெற்கெல்லையாக இருந்ததை இது தெளிவாக்குகிறது. குடுமியான்மலை, திருமெய்யம் போன்ற இடங்களில் பாண்டியர்களின் குடைவரைகள் பெரும்பாலும் காணப்படுவது இதற்கு ஆதரவு சேர்க்கிறது. 

அப்படியானால், இந்தக் கல்வெட்டு யாருடையது என்ற கேள்வி எழுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதியில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம் இதை ஓரளவு தெளிவுபடுத்துகிறது. 

"ருத்ராச்சர்ய சிஷ்யேண பரம மாஹேஸ்வரேண ரா(க்ஞா) சிஷ்ய ஹிதார்த்தம் க்ருதா ஸ்வராகமா"

அதாவது ருத்ராச்சார்யரின் சீடனும் பரம மாஹேஸ்வரனுமான அரசன் ஒருவன், மாணவர்களின் பயன்பாட்டுக்காக இந்த இசைக் கல்வெட்டை வடித்தான் என்கிறது இந்த வரிகள். மகேந்திர பல்லவன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினாலும், அவன் மாஹேஸ்வர சைவத்தைப் பின்பற்றியதற்கான சான்று இல்லை. அதன் பிரிவான கபாலிகத்தை அவன் மத்த விலாசப் பிரகசனத்தில் கிண்டல் செய்வதைப் பார்க்கலாம். ஆகவே மாஹேஸ்வரர்கள் என்று கூறப்படும் பாசுபத சைவப் பிரிவைச் சேர்ந்த மன்னன் ஒருவனே இதை வடித்திருக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் பலர் பாசுபத சைவத்தை போற்றினார்கள் என்பது தெளிவு. மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் குடைவரையில் பாசுபதத்தைத் தோற்றுவித்த லகுலீசர் சிற்பம் அமைத்திருப்பது தெரிந்த விஷயம். 

ஆகவே பாண்டிய மன்னன் ஒருவனால் இந்தக் கல்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பராந்தக நெடுஞ்சடையன் தன்னை 'பரம வைஷ்ணவன்' என்று சீவரமங்கலச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக்கொள்கிறான். அவன் பெயரானான முதலாம் வரகுண பாண்டியன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். பல சிவன் கோவில்களுக்குத் திருப்பணி செய்தவன். மாறன் சடையன் என்ற பெயரில் அவனுடைய கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. ஆகவே இந்தக் கல்வெட்டு அவனால் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் கல்வெட்டுகள் இங்கே இருந்தாலும் அவன் வைணவ நெறியைப் பின்பற்றியவன். பெரியாழ்வாரின் சீடன். ஆகவே இங்கே பரம மாஹேஸ்வரன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்வது மாறன் சடையானான வரகுண பாண்டியன் என்றே முடிவு செய்யலாம். இதிலிருந்து இக்கல்வெட்டு பொயு 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெளிவாகிறது 

படங்கள் நன்றி : இணையம் 


 



Thursday, 14 January 2021

மன்னன் மகளும் ஒரு கீழைச்சாளுக்கியச் செப்பேடும்

சாண்டில்யனுடைய 'மன்னன் மகள்' படித்திருக்கிறீர்களா ? அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக நான் கருதும் புனைவு அது. ராஜேந்திர சோழர் காலத்திய சோழ -சாளுக்கியச் சண்டைகளையும் சோழர்களின் கங்கைப் படையெழுச்சியையும் தொட்டுச் செல்லும் அந்தக் கதையின் நெருடல் கதாநாயகனும் நாயகியுமே கற்பனைப் பாத்திரங்களாக இருப்பதுதான். தற்காலத்தைய  'வரலாற்றுப் புனைவாளர்கள்' பல நிகழ்வுகளையே 'ரூம் போட்டு' அடித்து விடுவதைப் பார்க்கும் போது அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைதான். நிற்க. இப்போது விஷயத்திற்கு வருவோம். 



இந்தக் கதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என்னுடைய அப்பாவுக்கு இதில் வரும் பிரம்மமாராயன் பாத்திரம் மிகவும் பிடித்த ஒன்று. இத்தனைக்கும் பிரம்மமாராயனை மிகவும் அவசரபுத்திக்காரனாகவும் முன்கோபியாகவும் படைத்திருப்பார் சாண்டில்யன். வேங்கி நாட்டில் சோழ நாட்டுத் தூதுவர் பதவியில் இருப்பவன் இந்த பிரம்மமாராயன். அங்கே  ராஜேந்திர சோழரின் மருமகனான ராஜராஜ நரேந்திரனை அரியணையில் அமர்த்தும் முயற்சியில் கதாநாயகனான கரிகாலனுக்கும் பிரம்மமாராயனுக்கும் பல சச்சரவுகள் ஏற்படும். பல சமயங்களில் இருவரும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். ஆனாலும் பிரம்மமாராயனும் சோழ நாட்டிற்கு விசுவாசமானவன் தான். அவனைப் பற்றி சாண்டில்யனே இந்தக் குறிப்பை அளித்திருப்பார். 'பிரம்மமாராயன் முன்கோபியாக இருந்தாலும் ராஜவிசுவாசத்தில் வந்தியத்தேவருக்கோ மற்ற யாருக்கோ சளைத்தவன் அல்ல. கரிகாலன் மேல் உண்டான வெறுப்பு அவனை கரிகாலனோடு மோதச்செய்தது' என்பது போல அவனைப் பற்றி எழுதியிருப்பார். பிற்பாடு அரையன் ராஜராஜன் தலைமையிலான கங்கைப் படையெடுப்பிலும் இந்தப் பிரம்மமாராயன் பங்குகொள்வான். 'அந்தணனா அரக்கனா' என்று பார்ப்போர் வியக்கும் படியாக எதிரிகளைக் கொன்று குவிப்பான். அவனை  'ராஜராஜப் பிரும்ம மகராஜ்' என்று சோழர்கள் புகழ்வதாகவும் சாண்டில்யன் குறிப்பிட்டிருப்பார். தவிர, பின்னாளில் வேங்கிப் போரில் சோழர்களுக்காகப் போரிட்டு பிரம்மமாராயன் உயிர் துறந்ததாகவும் அவர் குறித்திருப்பார். 

எந்தச் சரித்திரப் புனைவு படித்தாலும் அதிலுள்ள பாத்திரங்களில் கற்பனைப் பாத்திரங்கள் யார் யார். சரித்திரத்தில் இருந்தோர் யார் யார் என்று அறிவதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு. சரித்திரப் பாத்திரங்கள் யார் என்று தெரிந்தால் அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் நிகழ்வுகள் உண்மைதானா என்பதையும் தேடிப்படிப்பேன். எந்தப் புத்தகங்களில் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது என்று சாண்டில்யனே பல முறை அடிக்குறிப்பு கொடுத்திருப்பார். ஆனால் இந்தப் பிரம்மமாராயனைப் பற்றிய தகவல்கள் சுத்தமாக இல்லை. ராஜேந்திரருடைய அதிகாரிகளாக கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயர், அவருடைய மகனான அருண்மொழியான உத்தமச் சோழ பிரம்மராயன் ஆகியோரைப் பற்றி பண்டாரத்தார் குறித்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் பிரதான படைத்தலைவர்கள். அதிலும் கிருஷ்ணன் ராமன், ராஜராஜன் காலத்திலிருந்து சோழர் படைத்தலைவராக இருந்தவர். ஆகவே அவர்கள் வேங்கி நாட்டில் இருந்திருக்கச் சாத்தியம் இல்லை. அடுத்து உத்தமச் சோழ மிலாடுடையான் என்ற அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடும் பண்டாரத்தார் அவனும் இராசராச பிரம்மமாராயன், உத்தம சோட சோடகோன் ஆகியோரும் மேலைச்சாளுக்கியர்களுக்கு இடையேயான போரில் உயிர்துறந்ததாக ஒரு வரியில் குறிப்பிட்டுச் சென்றுவிடுகிறார். இந்த பிரம்மமாராயனைத்தான் சாண்டில்யன் தன் கற்பனையை கொஞ்சம் ஓடவிட்டு மன்னன் மகளில் அந்தப் பாத்திரமாகப் படைத்திருக்கிறார் என்று விட்டுவிட்டேன். 

அண்மையில் வேறு ஒரு விஷயத்தைத் தேடிக்கொண்டிருந்த போது, 'Epigraphia Indiaca Vol XXIX' இல் கீழைச்சாளுக்கியர்களின் கலிதண்டிச் செப்பேடுகளை பற்றிப் படித்தேன். தெலுங்கு லிபியில் எழுதப்பட்டு சமஸ்கிருதத்தில் உள்ள இந்தச் செப்பேட்டில் ராஜராஜ நரேந்திரனால் அளிக்கப்பட்ட ஒரு தானத்தைப் பற்றிய விவரம் உள்ளது. இந்த ராஜராஜ நரேந்திரன், கீழைச்சாளுக்கிய அரசனான விமலாதித்தனுக்கும் ராஜராஜ சோழனின் மகள் குந்தவைக்கும் பிறந்தவன். ராஜேந்திரனின் மகளான அம்மங்கை தேவியின் கணவன். (முதல் குலோத்துங்கனின் தந்தை)  இந்தச் செப்பேடு வேங்கி நாட்டில் நடந்த வாரிசுரிமைப் போரைப் பற்றிப் பேசுகிறது.


வேங்கி அரியணைக்கு ராஜராஜ நரேந்திரனைத்தவிர  விஜயாதித்தன் என்பவனும் போட்டியிட்டான். விஜயாதித்தனை மேலைச்சாளுக்கியர்கள் ஆதரித்தனர். ஆகவே தன் மருமகனைக் காக்க ராஜராஜ பிரும்ம மகராஜ் என்பவனை ராஜேந்திரர் வேங்கிக்கு தூதனாக அனுப்பினார். அவன் வேங்கி நாட்டை புதையல் ஒன்றைக் காக்கும் நாகம் போல காத்துவந்தான் (வரிகள் 77 - 85). ராஜராஜ நரேந்திரனை அகற்ற கர்நாடகப் படை ஒன்று வேங்கி நோக்கி வந்தது. அந்தப் படையோடு சோழர்களின் சேனை   விஜயவாடாவுக்கு அருகில் கலிதண்டி என்ற இடத்தில் மோதியது. 

பிரம்ம மகாராஜோடு சோழ தளபதிகளான உத்தம சோட சோடகோனும் உத்தமச் சோழ மிலாடுடையானும் சேர்ந்து கொண்டு சண்டையிட்டனர். சோழர் படைகள் வெற்றியடைந்தாலும் பிரம்மமகராஜும் மற்ற இரு தளபதிகளும் போரில் உயிர்துறந்தனர் என்று அந்தச் செப்பேடு தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இந்தப் போரைப் பற்றி சோழர் ஆவணங்களிலோ ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியிலோ தகவல் ஏதும் இல்லை என்பதுதான். இந்தப் போரில் உயிர் துறந்த சோழப் படைத்தலைவர்கள் மூவருக்கும் ராஜராஜ நரேந்திரன் பள்ளிப்படைக் கோவில்கள் அமைத்தான் என்றும் அந்தக் கோவில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் இன்னின்ன என்றும் இந்த கலிதண்டிச் செப்பேடு பட்டியலிடுகிறது. இன்றும் இந்த மூன்று கோவில்களும் அந்த ஊரில் உள்ளன. 

மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து பிரம்மமாராயன் ஒரு முக்கியமான படைத்தலைவனாகவும் வேங்கியில் சோழர்களின் தூதுவனாகவும் இருந்ததும், அவன் தலைமையில் தான் வேங்கிப் போர் நிகழ்ந்தது என்றும் தெளிவாகிறது. 'ராஜராஜ பிரும்ம மகராஜ்' என்ற பட்டத்தையும் சாண்டில்யன் இந்தச் செப்பேட்டில் இருந்துதான் எடுத்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிவிட்டது. சோழர் ஆவணங்கள் பெரிதாகக் குறிப்பிடாத ஒரு செய்தியை ஒரு தெலுங்குச் செப்பேட்டிலிருந்து எடுத்து தன்னுடைய புனைவில் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட சாண்டில்யனின் திறமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை !!