Skip to main content

சித்திரைத் திருவிழா - 11

மதுரை நகரின் தெற்கில் சுமார் 8 கிமீ தொலைவில் இருக்கும் திருப்பரங்குன்றமும் பழமைவாய்ந்த நகரம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை பெற்றது. பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையினிலும், மதுரைக் காஞ்சியிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழ்ச்சங்க வரிசையில் கடைச்சங்கம் இங்குதான் இருந்தது என்றும் சொல்வது உண்டு. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் குடைவரைக் கோவில் வகையைச் சார்ந்தது. இந்தக் கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் எழுப்பப் பட்டது.  கருவறையில் விநாயகர், சிவன், துர்கை, முருகன், பெருமாள் என்று ஐந்து தெய்வங்களைக் கொண்ட கோவில் இது.




மாசி வீதிகளில் ஆடி வரும் தேர் 

திருமலை மன்னர் இங்கும் 'சில பல' வேலைகளைச் செய்து வைத்திருந்தார். அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்க்கலாம். சித்திரைத் திருவிழாவை பெரும் திருவிழாவாக மாற்றிய பிறகு திருப்பரங்குன்ற முருகனையும்  அதோடு இணைக்கத் திட்டமிட்டார். திருமணம் நடைபெறுகிற வேளையில் மீனாட்சி அம்மானை சொக்கநாதருக்கு தாரை வார்த்துத் தரவேண்டும் அல்லவா. அழகரை ஒரு கதை சொல்லி அக்கரையிலேயே நிற்கவைத்தாகி விட்டது. எனவே திருப்பரங்குன்றத்தில் உறையும் பவளக்கனிவாய்  பெருமாளை, மீனாட்சி அம்மனின் அண்ணன் என்ற முறையில் சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக்கொடுக்க மதுரைக்கு எழுந்தருளச் செய்தார்.  அவரோடு திருப்பரங்குன்றம் முருகனும் உடன் வந்தார். திருமணத்திற்கு வருகின்ற முருகன்   தன்னோடு தன்னை வழிபடுகின்ற மக்களையும்  அழைத்து வந்தார்.

திருக்கல்யாண மேடையில் நீங்கள் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, முருகன், பவளக்கனிவாய் பெருமாள் என்று நால்வரையும் ஒருங்கே தரிசிக்கலாம். திருமணம் முடிந்து இரண்டொரு நாள் மதுரையில் தங்கிவிட்டு பெருமாளோடு புஷ்பப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவார் அவர்.


தமது தேவியருடன் திருமலை மன்னர் 

இப்படியாக திருவிழாக்களை உருவாக்கிய பின்னர் அவற்றின் செலவுக்காக ஆகும் தொகையை கட்டளையாக எழுதிவைத்தார் திருமலை மன்னர்.  திருமலை நாயக்கர் கட்டளை என்று அழைக்கப்படும் அதில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பின்வருமாறு

ஆவணிமூலத் திருவிழா                                - 100 பணம்
தெப்பத் திருவிழா                                           - 150 பணம்
சித்திரைத் திருவிழா                                         - 200 பணம்
நாதஸ்வரம் வாசிப்போர் இருவருக்கு      -  48 பணம்
ஒத்து ஊதுபவருக்கு                                          -   18 பணம்
டமாரம் வாசிப்பவருக்கு                                  - 24 பணம்
குடை சுருட்டி கொண்டுவருபவருக்க        - 15 பணம்
வேதபாராயணம் செய்யும் 10 பேருக்கு        - 240 பணம்
யானைக்குத் தீனி                                                - 120 பணம்

இவையெல்லாம் அந்தக் கட்டளையின் ஒரு பகுதிதான். இவையெல்லாம் எவ்வளவு பார்த்துப் பார்த்து மன்னர் செய்தார் என்பதை புரிந்துகொள்ளவே இங்கே குறிப்பிட்டேன். இது போன்ற கட்டளைகளையும் நிவந்தங்களையும் அளித்தது மட்டுமில்லாமல், மதுரை, அழகர் கோவில், திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகளையும் செய்தார் திருமலை நாயக்கர்.





Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ