Wednesday 20 April 2016

சித்திரைத் திருவிழா - 11

மதுரை நகரின் தெற்கில் சுமார் 8 கிமீ தொலைவில் இருக்கும் திருப்பரங்குன்றமும் பழமைவாய்ந்த நகரம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை பெற்றது. பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையினிலும், மதுரைக் காஞ்சியிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழ்ச்சங்க வரிசையில் கடைச்சங்கம் இங்குதான் இருந்தது என்றும் சொல்வது உண்டு. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் குடைவரைக் கோவில் வகையைச் சார்ந்தது. இந்தக் கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் எழுப்பப் பட்டது.  கருவறையில் விநாயகர், சிவன், துர்கை, முருகன், பெருமாள் என்று ஐந்து தெய்வங்களைக் கொண்ட கோவில் இது.




மாசி வீதிகளில் ஆடி வரும் தேர் 

திருமலை மன்னர் இங்கும் 'சில பல' வேலைகளைச் செய்து வைத்திருந்தார். அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்க்கலாம். சித்திரைத் திருவிழாவை பெரும் திருவிழாவாக மாற்றிய பிறகு திருப்பரங்குன்ற முருகனையும்  அதோடு இணைக்கத் திட்டமிட்டார். திருமணம் நடைபெறுகிற வேளையில் மீனாட்சி அம்மானை சொக்கநாதருக்கு தாரை வார்த்துத் தரவேண்டும் அல்லவா. அழகரை ஒரு கதை சொல்லி அக்கரையிலேயே நிற்கவைத்தாகி விட்டது. எனவே திருப்பரங்குன்றத்தில் உறையும் பவளக்கனிவாய்  பெருமாளை, மீனாட்சி அம்மனின் அண்ணன் என்ற முறையில் சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக்கொடுக்க மதுரைக்கு எழுந்தருளச் செய்தார்.  அவரோடு திருப்பரங்குன்றம் முருகனும் உடன் வந்தார். திருமணத்திற்கு வருகின்ற முருகன்   தன்னோடு தன்னை வழிபடுகின்ற மக்களையும்  அழைத்து வந்தார்.

திருக்கல்யாண மேடையில் நீங்கள் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, முருகன், பவளக்கனிவாய் பெருமாள் என்று நால்வரையும் ஒருங்கே தரிசிக்கலாம். திருமணம் முடிந்து இரண்டொரு நாள் மதுரையில் தங்கிவிட்டு பெருமாளோடு புஷ்பப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவார் அவர்.


தமது தேவியருடன் திருமலை மன்னர் 

இப்படியாக திருவிழாக்களை உருவாக்கிய பின்னர் அவற்றின் செலவுக்காக ஆகும் தொகையை கட்டளையாக எழுதிவைத்தார் திருமலை மன்னர்.  திருமலை நாயக்கர் கட்டளை என்று அழைக்கப்படும் அதில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பின்வருமாறு

ஆவணிமூலத் திருவிழா                                - 100 பணம்
தெப்பத் திருவிழா                                           - 150 பணம்
சித்திரைத் திருவிழா                                         - 200 பணம்
நாதஸ்வரம் வாசிப்போர் இருவருக்கு      -  48 பணம்
ஒத்து ஊதுபவருக்கு                                          -   18 பணம்
டமாரம் வாசிப்பவருக்கு                                  - 24 பணம்
குடை சுருட்டி கொண்டுவருபவருக்க        - 15 பணம்
வேதபாராயணம் செய்யும் 10 பேருக்கு        - 240 பணம்
யானைக்குத் தீனி                                                - 120 பணம்

இவையெல்லாம் அந்தக் கட்டளையின் ஒரு பகுதிதான். இவையெல்லாம் எவ்வளவு பார்த்துப் பார்த்து மன்னர் செய்தார் என்பதை புரிந்துகொள்ளவே இங்கே குறிப்பிட்டேன். இது போன்ற கட்டளைகளையும் நிவந்தங்களையும் அளித்தது மட்டுமில்லாமல், மதுரை, அழகர் கோவில், திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகளையும் செய்தார் திருமலை நாயக்கர்.





No comments:

Post a Comment