Skip to main content

சித்திரைத் திருவிழா - 8

இப்போது நம் தொடரின் நாயகனான(!!) திருமலை நாயக்கருக்கு வருவோம்.

பொயு 1627ம் ஆண்டு வாக்கில் திருமலை நாயக்கர் மன்னராகப் பொறுப்பேற்றார். நாயக்கர்கள் வரிசையில் ஏழாவது மன்னர் அவர். அவருக்கு முன்பு ஆண்ட முத்து வீரப்பர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றியதால், அவரும் திருச்சியிலிருந்தே ஆட்சியைத் தொடர்ந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்கு வந்த புதிதில் தென்னாட்டில் ஏகக்குழப்பங்கள். விஜயநகரம் தன் வலிமையை இழந்து பாமினி சுல்தான்களோடு போராடிக்கொண்டிருந்தது. மைசூர் உடையார்கள் தனியரசை உருவாக்கியிருந்தனர். தஞ்சாவூர் நாயக்கர்கள் மதுரைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இராமநாதபுரத்தில் சேதுபதிகள் நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுபட முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஆட்சியின் முதல் ஏழாண்டுகள் இவற்றையெல்லாம் ஓரளவு சமாளித்துக்கொண்டிருந்த திருமலை நாயக்கர், 1634ல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

இந்தத் தலைநகர் மாற்றத்திற்குச் சரியான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பாக வழங்கப்படும் கதை ஒன்று இப்படிச் சொல்கிறது. திருமலை மன்னர் மண்டைச்சளி (catarrh) நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய சொக்கநாதப் பெருமான், மதுரையம்பதியே நீ ஆளவேண்டிய ஊர், தலைநகரை மாற்றி உன் ஆட்சியை மதுரையிலிருந்து நடத்து,  உன் உடல்நிலை சீராகும் என்று கூறியதாகவும். அதன்படியே அவர் சளித்தொல்லை குணமானது என்றும், அதன்காரணமாகவே அவர் மதுரைக்கு தலைநகரை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.






மீனாட்சியம்மையின் பட்டாபிஷேகத் திருவிழா 



வைரக்கிரீடம் அணிந்து  பாண்டியர்களின் வேப்பம்பூ மாலை சூடி  செங்கோல் பிடித்து ஆட்சிசெய்யும் மீனாட்சி  அம்மை


எப்படியோ, மதுரைக்கு தலைநகரை மாற்றிய திருமலை மன்னர் தம்முடைய நோயைக் குணப்படுத்திய சொக்கருக்கும் மீனாட்சிக்கும் பொன்னும் மணியும் நகைகளுமாக வழங்கினார். சுவாமியும் அம்மனும் உலா வருவதற்காக இரு பெரும் தேர்களை வலுவான, வைரம்பாய்ந்த மரங்களைக் கொண்டு செய்வித்தார். கோவில் நிர்வாகம் நடைபெறும் முறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர், கடந்த சில ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் முறையற்ற வழியில் அபகரிக்கப்படுவதைக் கண்டுபிடித்தார். இதைத் தடுக்க கோவில் நிர்வாகத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதே சரியான வழி என்று எண்ணிய அவர், கோவில் அபிஷேகப் பண்டாரத்தை தம் குருவாக ஏற்றார். நாயக்கர்கள் அனைவரும் வைணவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திருமலை மன்னருக்கும்  சைவரான கோவில் பண்டாரத்தை குருவாக ஏற்பதில் தயக்கமேதுமில்லை. ஆனால், கோவில் ஸ்தானீகர்கள் இந்த ஏற்பாடுகளை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

திருமலை மன்னர் ஒரு autocratic ஆட்சியாளர். முடிவே முயற்சிகளைத் தீர்மானிக்கிறது என்ற கொள்கையுள்ளவர். தாம் நினைத்ததை நடத்துவதற்கு சாமம், தானம், பேதம், தண்டம் என்ற எந்த முறையையும் கையாளத்தயங்காதவர். எனவே கலகம் செய்தவர்களுக்கு பணம் கொடுத்தும், பதவிகளைக் கொடுத்தும், மிரட்டியும் தாம் சொல்வதைக் கேட்க வைத்தார். படிப்படியாக் கோவில் நிர்வாகம் அவர் கையில் வந்தது. கோவில் திருப்பணிகளையும் தம் பார்வையில் ஜரூராக ஆரம்பித்தார்.

இந்தக் கட்டத்தில் மதுரைக் கோவிலின் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடைபெற்றுவந்தது என்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் (இல்லையென்றால் இங்கே அதைப்பற்றிப் படிக்கலாம்). மாசி மாதம் தேரோட்டம் நடந்துவந்தது என்று பார்த்தோமல்லவா. திருமலை மன்னர் செய்த வலுவான தேர்களை இழுக்க அதிக அளவு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆனால், மாசி மாதம் அறுவடைக்காலம் முடிந்து மக்கள் ஓய்வு எடுக்கும் காலம். எனவே தேர் இழுக்க ஆட்கள் மதுரைக்கு வரவில்லை. இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார் நாயக்கர்.

                                                                                                               அடுத்து

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar 



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ