Sunday 17 April 2016

சித்திரைத் திருவிழா - 8

இப்போது நம் தொடரின் நாயகனான(!!) திருமலை நாயக்கருக்கு வருவோம்.

பொயு 1627ம் ஆண்டு வாக்கில் திருமலை நாயக்கர் மன்னராகப் பொறுப்பேற்றார். நாயக்கர்கள் வரிசையில் ஏழாவது மன்னர் அவர். அவருக்கு முன்பு ஆண்ட முத்து வீரப்பர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றியதால், அவரும் திருச்சியிலிருந்தே ஆட்சியைத் தொடர்ந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்கு வந்த புதிதில் தென்னாட்டில் ஏகக்குழப்பங்கள். விஜயநகரம் தன் வலிமையை இழந்து பாமினி சுல்தான்களோடு போராடிக்கொண்டிருந்தது. மைசூர் உடையார்கள் தனியரசை உருவாக்கியிருந்தனர். தஞ்சாவூர் நாயக்கர்கள் மதுரைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இராமநாதபுரத்தில் சேதுபதிகள் நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுபட முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஆட்சியின் முதல் ஏழாண்டுகள் இவற்றையெல்லாம் ஓரளவு சமாளித்துக்கொண்டிருந்த திருமலை நாயக்கர், 1634ல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

இந்தத் தலைநகர் மாற்றத்திற்குச் சரியான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பாக வழங்கப்படும் கதை ஒன்று இப்படிச் சொல்கிறது. திருமலை மன்னர் மண்டைச்சளி (catarrh) நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய சொக்கநாதப் பெருமான், மதுரையம்பதியே நீ ஆளவேண்டிய ஊர், தலைநகரை மாற்றி உன் ஆட்சியை மதுரையிலிருந்து நடத்து,  உன் உடல்நிலை சீராகும் என்று கூறியதாகவும். அதன்படியே அவர் சளித்தொல்லை குணமானது என்றும், அதன்காரணமாகவே அவர் மதுரைக்கு தலைநகரை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.






மீனாட்சியம்மையின் பட்டாபிஷேகத் திருவிழா 



வைரக்கிரீடம் அணிந்து  பாண்டியர்களின் வேப்பம்பூ மாலை சூடி  செங்கோல் பிடித்து ஆட்சிசெய்யும் மீனாட்சி  அம்மை


எப்படியோ, மதுரைக்கு தலைநகரை மாற்றிய திருமலை மன்னர் தம்முடைய நோயைக் குணப்படுத்திய சொக்கருக்கும் மீனாட்சிக்கும் பொன்னும் மணியும் நகைகளுமாக வழங்கினார். சுவாமியும் அம்மனும் உலா வருவதற்காக இரு பெரும் தேர்களை வலுவான, வைரம்பாய்ந்த மரங்களைக் கொண்டு செய்வித்தார். கோவில் நிர்வாகம் நடைபெறும் முறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர், கடந்த சில ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் முறையற்ற வழியில் அபகரிக்கப்படுவதைக் கண்டுபிடித்தார். இதைத் தடுக்க கோவில் நிர்வாகத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதே சரியான வழி என்று எண்ணிய அவர், கோவில் அபிஷேகப் பண்டாரத்தை தம் குருவாக ஏற்றார். நாயக்கர்கள் அனைவரும் வைணவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திருமலை மன்னருக்கும்  சைவரான கோவில் பண்டாரத்தை குருவாக ஏற்பதில் தயக்கமேதுமில்லை. ஆனால், கோவில் ஸ்தானீகர்கள் இந்த ஏற்பாடுகளை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

திருமலை மன்னர் ஒரு autocratic ஆட்சியாளர். முடிவே முயற்சிகளைத் தீர்மானிக்கிறது என்ற கொள்கையுள்ளவர். தாம் நினைத்ததை நடத்துவதற்கு சாமம், தானம், பேதம், தண்டம் என்ற எந்த முறையையும் கையாளத்தயங்காதவர். எனவே கலகம் செய்தவர்களுக்கு பணம் கொடுத்தும், பதவிகளைக் கொடுத்தும், மிரட்டியும் தாம் சொல்வதைக் கேட்க வைத்தார். படிப்படியாக் கோவில் நிர்வாகம் அவர் கையில் வந்தது. கோவில் திருப்பணிகளையும் தம் பார்வையில் ஜரூராக ஆரம்பித்தார்.

இந்தக் கட்டத்தில் மதுரைக் கோவிலின் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடைபெற்றுவந்தது என்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் (இல்லையென்றால் இங்கே அதைப்பற்றிப் படிக்கலாம்). மாசி மாதம் தேரோட்டம் நடந்துவந்தது என்று பார்த்தோமல்லவா. திருமலை மன்னர் செய்த வலுவான தேர்களை இழுக்க அதிக அளவு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆனால், மாசி மாதம் அறுவடைக்காலம் முடிந்து மக்கள் ஓய்வு எடுக்கும் காலம். எனவே தேர் இழுக்க ஆட்கள் மதுரைக்கு வரவில்லை. இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார் நாயக்கர்.

                                                                                                               அடுத்து

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar 



No comments:

Post a Comment