Monday 11 April 2016

சித்திரைத் திருவிழா - 1

இதோ கொடியேற்றத்துடன் இன்னுமொரு சித்திரைப் பெருவிழா துவங்கி விட்டது. அடுத்த பதினைந்து நாட்களுக்கு மதுரை களைகட்டிவிடும். மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியம்மையின் திருமணத்தை மீண்டும் ஒரு தடவை காணப்போகிறோம் என்ற ஆனந்தத்திலும்,  'ஆத்தைக் கண்டேனா அளகரைச் சேவிச்சேனா' என்று கிடப்பதை விட்டுவிட்டு திருமாலிருஞ்சோலையிலிருந்து வரும் கள்ளழகரைச் சேவிக்கப் போகிறோம் என்ற உந்துதலிலும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் இந்நாட்களில் ஒன்று கூடப்போகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளும் பெரியோர்களும் மதுரை நகரை நிறைக்கப்போகிறார்கள்.





மதுரை நகரைப் பொறுத்தவரை திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை, குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்க சித்திரைத் திருவிழாவிற்கு என்ன சிறப்பு?  தமிழ்நாட்டுக்கோவில்களில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று என்பதைத் தவிர, இந்த சித்திரைத் திருவிழாவிற்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. சைவ - வைணவ கோவில்களின் திருவிழாக்கள் ஒன்றாக, ஒன்றிணைந்து கொண்டாடப்படும் ஒரே விழா இதுவாகத்தான் இருக்கவேண்டும்.  மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவில் மட்டும் இல்லாமால், மதுரையில் உள்ள எல்லாக் கோவில்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்தத் திருவிழாவில் சம்பந்தப் படுத்தப்பட்டுள்ளன. இது எப்படி நடந்தது ?

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட மதுரைக் கோவிலில் ஆதி முதல் இப்பெருவிழா நடந்து கொண்டிருந்ததா அல்லது இடையில் உருவானதா? இதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம். நடுநடுவே மதுரை நகரின் வரலாற்றையும் அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் பாண்டிய / நாயக்க மன்னர்களின் வரலாற்றையும் கொஞ்சம் ஆராய வேண்டியிருக்கும். இந்த விவரங்களை  மனதில் கொண்டு மேலும்  தொடரலாம். 

No comments:

Post a Comment