Skip to main content

சித்திரைத் திருவிழா - 5

அடுத்தடுத்த இரண்டு படையெடுப்புகளால் நிலைகுலைந்த மதுரை நகரையும் கோவிலையும், பராக்கிரம பாண்டியர் சீரமைக்க முயன்றுகொண்டிருந்தார் என்று பார்த்தோம். ஆனால் அவரை விதி விடவில்லை.

டெல்லியில் கில்ஜிகளின் ஆட்சி முடிவடைந்து துக்ளக் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. இந்த  இடைப்பட்ட காலத்தில்  வாரங்கல்லின் காகதீயர்களும் துவாரசமுத்திரத்தில் ஹொய்சாளர்களும் தங்கள் நாட்டை மீண்டும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். காகதீய அரசனான பிரதாபருத்திரன்  ஒரு படி மேலே போய் டெல்லிக்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டான்.  இவர்களை அடக்குவதற்காக, டெல்லி சுல்தானான கியாசுதீன் துக்ளக் தன்னுடைய மூத்த மகனும் இளவரசனுமான உலூக் கானை தென்னிந்தியாவுக்கு ஒரு படையோடு அனுப்பிவைத்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் டெல்லி அரியணை ஏறிய 'பிரசித்தி' பெற்ற முகம்மது பின் துக்ளக். அப்பாவியாகவும் காமெடியனாகவும் சித்தரிக்கப்படும் இவன் உண்மையில் மிகக் கொடூரமானவன்.

1323ல் கிளம்பிய உலூக் கான் வாரங்கல்லையும் துவாரசமுத்திரத்தையும் வென்று சூறையாடி தமிழகத்திற்குள் நுழைந்தான். திருவரங்கத்தில் அந்த ஆண்டு பங்குனித் திருவிழாவில் புகுந்து இவனது படைகள் பேரழிவை ஏற்படுத்தின.ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலையும் பாழ்படுத்தின இவனது படைகள்.   நம்பெருமானை எடுத்துக் கொண்டு கோவிலிலிருந்து தப்பிய ஆச்சார்யார்கள் தென்னகத்தின் பல பகுதிகளுக்கும் அவரை எடுத்துச் சென்றதையும் அதில் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் வைணவ குரு பரம்பரை சரித்திரம் சொல்லுகிறது. திருவரங்கன் உலா என்ற பெயரில் ஸ்ரீவேணுகோபாலன் இந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் படித்துப்பாருங்கள்.



ஐந்தாம் நாள் திருநாளில் குதிரை வாகனத்தில் சுவாமியும் அம்மனும் 

இப்போது மதுரைக்கு வருவோம், உலூக் கானின் படைபலத்தையும் அவன் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அழிவையும் கேட்ட பராக்கிரம பாண்டியன், 'வழக்கம்' போல் மதுரையை விட்டு ஓடி காளையார் கோவிலில் தஞ்சம் புகுந்தான். காக்க வேண்டிய அரசன் ஓடிவிட்டதையும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்ந்த அழிவையும் கேட்ட கோவில் ஸ்தானீகர்கள் மனம் கலங்கினார்கள். கோவிலைக் காக்க சில ஏற்பாடுகளையும் செய்தனர். சொக்கநாதர் சன்னதி கருவறையின் வாயிலில் ஒரு சுவரை எழுப்பி மூடி. அதன் முன் ஒரு கிளிக்கூண்டையும் வைத்தனர்.  சன்னதியின் முன் ஒரு லிங்கத்தை வைத்துவிட்டு,  மீனாட்சி அம்மையை கோவில்  விமானத்தில் அஷ்டபந்தனம் செய்து மறைத்து வைத்தனர். இளையனார் போன்ற உற்சவ மூர்த்திகளை பூமிக்கடியில் மறைத்துவைத்துவிட்டு,  சுவாமி,  அம்மன் விக்கிரகங்களுடன் நாஞ்சில் நாட்டில் தலைமறைவானார்கள்.

தடுக்க யாரும் இல்லாமல் மதுரையில் நுழைந்த உலூக் கான், நகரை சூறையாடி கோவிலின் பல பகுதிகளுக்கும் அழிவை ஏற்படுத்தினான். அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவை அழிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக கருவறையை அவர்கள் சேதப்படுத்தவில்லை. கருவறையைச் சுற்றியிருந்த கல்யானைகளைக் கண்ட படைவீரர்கள், அதைப் பற்றிக் கேட்டபோது, கல்யானைக்கு கரும்பு அளித்த திருவிளையாடல் அவர்களிடம் கூறப்பட்டதாகவும், அதைக் கேலி செய்ய அவர்களில் ஒருவன் ஒரு கரும்பை யானை ஒன்றின் வாயில் திணித்ததாகவும் அதை யானை சாப்பிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீரர்கள், ஏதோ மந்திர சக்தி அங்கு இருப்பதாக எண்ணி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியானாலும் கருவறை சேதமடையவில்லை.

இதற்கிடையில் காளையார் கோவிலில் பதுங்கியிருந்த பராக்கிரம பாண்டியர் உலூக் கானின் படைகள் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தார். ஆனால், குஸ்ராவ் கானுக்கு எதிராகக் கிடைத்த வெற்றி போல்  இங்கே கிடைக்கவில்லை. போரில் தோல்வியுற்று கைதியாக டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார் பராக்கிரம பாண்டியர். போகும் வழியில் கொலை செய்யப்பட்டு மாண்டார். இவ்வாறாக பாண்டியன் முடத்திருமாறனால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைப் பாண்டியர் வம்சம் பராக்கிரம பாண்டியருடன் முடிவுக்கு வந்தது.

மாலிக் கபூரும், குஸ்ராவ் கானும் நிகழ்த்திய முந்தைய படை எடுப்புகளின் நோக்கம் கொள்ளை மட்டும்தான். ஆனால் உலூக் கானின் நோக்கம் மாபார் என்று அழைக்கப்பட்ட மதுரையை தன்னுடன் சேர்த்துக்கொள்வதும் கூட. எனவே தன்னுடைய பிரதிநிதியாக ஜலாலுதீன் ஆசன் கான் என்பவனை மதுரையில் அமர்த்திவிட்டு டெல்லி திரும்பினான் உலூக்கான். சிறிது காலம் துக்ளக்கின் பிரதிநிதியாக மதுரையை ஆண்ட ஆசன் கான், 1335ல்  உலூக்கானின் ஆதரவாளர்களைக் கொன்றுவிட்டு  தானே மதுரையின் சுல்தான் என்று பிரகடனப் படுத்திக்  கொண்டான். அதிலிருந்து 43 ஆண்டுகள் மதுரை சுல்தான்கள் தனி ராஜ்ஜியமாக மதுரையை ஆண்டனர். அக்காலத்தில் மதுரை பேரழிவுகளைச் சந்தித்தது. கோவில் வழிபாடுகள் முற்றிலும் நின்று போயின.

இந்த இருளைப் போக்கும் ஒளி வடக்கே துங்கபத்திரை நதிக்கரையில் தோன்றியது.

                                                                                                                                   அடுத்து


படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1. The India they saw - Meenakshi Jain
2. Madurai through the ages - Devakunjari
3. South India and her Muhammadan Invaders - S Krishnaswamy Iyangar

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ