Skip to main content

சித்திரைத் திருவிழா - 2

மதுரை மீனாட்சியம்மையின் கோவில்  நம் நாட்டிலுள்ள புராதனமான கோவில்களில் ஒன்று. சைவர்களின் தலையாய கோவில்களில் ஒன்றாகவும் சாக்தர்களின் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுவது இந்தத் தலம். லலிதா திரிபுரசுந்தரியின் மந்திரியான ராஜமாதங்கியின் அம்சமாக மீனாட்சியம்மை போற்றப்படுகிறாள்.   இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த, கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்த கடற்கோள்களால் தங்கள் தலைநகரங்களை மாற்றிக்கொண்டு வந்த பாண்டியர்கள், ஒருவழியாக மதுரையில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொண்டு, வைகையின் தென்கரையில் இந்தக் கோவிலைக் கட்டினார். முதலில் சிறியதொரு கோவிலாகத்தான் இது அமைக்கப்பட்டது. சுந்தரேஸ்வரர் சன்னதி, மீனாட்சி சன்னதி, மற்றும் ஒரு சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்தக் கோவில். கோவிலைச் சுற்றி தாமரை வடிவில் மதுரை நகர் அமைக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு.

சங்க காலப் பாண்டியர் காலத்திற்குப் பிறகு மதுரை நகர் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பாண்டியன் கடுங்கோன் களப்பிரர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டு இடைக்காலப் பாண்டிய அரசை அமைத்தார். அதன் பின் இந்தக் கோவிலை சீர் படுத்தி கோவில் நிர்வாகத்தை 'முப்போதும் திருமேனி தீண்டுவார்' என்ற ஆதி சைவர்களிடம் ஒப்படைத்தனர் பாண்டியர்கள். ஆகம விதிகளின் படி நித்தியக் கால பூஜைகளும்,   திருவிழாக்களும்  முறைப்படி நடைபெற ஆரம்பித்தன. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும், குறிப்பிட்ட சில திருவிழாக்கள் புகழ் பெற்றவை. அந்தத் திருவிழா வைபவங்கள் நடை பெரும் இடங்களாக, விழாவின் போது சுவாமி, அம்மன் உலா வரும் இடங்களாக,  கோவிலைச் சுற்றியிருந்த ஒவ்வொரு தெருக்களும் இடம் பெற்று அந்தத் திருவிழா நடைபெறும் மாதங்களின் பெயர்கள் அந்தத் தெருக்களுக்கு வைக்கப்பட்டன.




(படம் : இரண்டாம் நாள் திருநாளில் பூத வாகனத்தில் சுவாமியும் அன்ன வாகனத்தில் அம்மனும் )


ஆடி மாதம் எண்ணெய்க்காப்பு உற்சவம், கோவிலை சுற்றி முதலில் அமைந்துள்ள ஆடிவீதியில் நடைபெற்றது, அதற்கு அடுத்த சித்திரை வீதியில் சித்திரம் மாதம் வஸந்த உற்சவம் நடைபெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக்  குறிக்க நடைபெறும் ஆவணித்திருவிழா, மூன்றாம் நிலையிலுள்ள ஆவணி மூல வீதியில் நடந்தது. ஆவணி மூலத்திருநாளில்தான் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட விளையாடலைக் காட்டி அருளினான். மாசி மாதம் தேர்த்திருவிழா, மாசி வீதிகளில் நடைபெற்றது. இது தவிர, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களிலும் நடப்பது போல் பங்குனி உத்திர நாளில் இறைவன்- இறைவி திருமண நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இப்படி ஆலய வழிபாடுகள் வழக்கம்போல் நடந்துகொண்டு இருக்கும்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்லவர்களுடனான ஓயாத போர்களால், வலுவிழந்த பாண்டியர்கள், தங்கள் நாட்டை சோழர்களிடம் இழந்தனர். ராஜேந்திர சோழர் மதுரையைக் காப்பாற்றி தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக்கொண்டார். அதன் பின் குலோத்துங்க சோழர் ஆட்சியில் பாண்டியர்கள் தங்கள் நாட்டை மீட்டுக்கொண்டாலும் சோழர்களில் சிற்றரசர்களாகவே காலங்கழிக்கவேண்டியிருந்தது
               
                                                                                                                                 அடுத்து



Comments

  1. தெரியாத விஷயங்களை எழுதத் தொடங்குகிறீர்கள். இன்னும் இரண்டு கருத்துகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

    1. காலக்கணக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. எந்த நூற்றாண்டில் எது நடந்தது என்று தெளிவாகக் குறிப்பிட்டால் பரிணாமத்தின் புரிதல் இன்னும் எளிமையாகும்.

    2. சில தகவல்களுக்கு ஏதேனும் உசாத்துணை கொடுக்க முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த இரண்டு கோரிக்கைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். :)

    இப்போது என்னுடைய ஐயப்பாடுகள்.

    1. சிலப்பதிகாரத்தில் மதுரையில் இருக்கும் கோட்டங்களைக் குறிப்பிடும் போது மீனாட்சியின் கோட்டத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை இளங்கோவடிகள். மறதியால் இளங்கோவடிகள் விட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஒருவேளை மீனாட்சியம்மை வேறு பெயரிலோ வேறு மெய்யியல் கருத்துகளோடு குறிப்பிடப்பட்டிருக்கின்றாரா?

    2. பிட்டுக்கு மண் சுமந்தது மாணிக்கவாசகரோடு தொடர்புடைய கதைதானே? மூவருக்கும் பின் வந்தவர் மாணிக்கவாசகர். கிட்டத்தட்ட ஒன்பதாம் நூற்றாண்டு என்பது என் தெளிவு. இடைக்காலப் பாண்டியர்கள் ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்க எந்த நூற்றாண்டில் முப்போதும் திருமேனி தீண்டுவார்களிடம் கோயில் ஒழுக்கு எந்த மன்னனால் ஒப்படைக்கப்பட்டது? அதற்கு முன்பு யாருடைய ஒழுக்கில் கோயில் இருந்தது? இந்தத் திருவிளையாடல் கொண்டாட்டங்கள் தொடங்கியது எந்த நூற்றாண்டில்?

    3. முப்போதும் திருமேனி தீண்டுவார்கள் என்று குறிப்பிடப்படும் ஆதிசைவர்கள் யார்? இவர்கள் இப்போது இருக்கிறார்களா? இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏதேனும் புத்தகங்கள் சுட்டிகள் உள்ளனவா?

    நிறைய கேள்விகளைக் கேட்டுவிட்டேன். விவரங்களை அறியத்தாருங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ஜிரா, கேள்விகளுக்கு நன்றி. வரும் பதிவுகளில் காலத்தையும் உசாத்துணைகளையும் அவசியம் தருகிறேன்.

      இப்போது கேள்விகளுக்கு வருவோம்

      1. சிலப்பதிகாரத்தில் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றிய குறிப்புகள் இல்லை என்பது உண்மை. சிலப்பதிகாரம் 'நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்' என்று சிவன் கோவில் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது சொக்கநாதர் கோவிலாக இருக்க வாய்ப்பு அதிகம். மதுரையின் சிறப்பைப் பாடும் சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியும் சிவன் கோவிலையே குறிப்பிடுகிறது என்பதையும் இங்கு கவனிக்கவேண்டும். இறைவனின் பெயரால் கோவில்கள் குறிப்பிடப்படுவது அப்போதைய வழக்கமாக இருக்கலாம். இவையெல்லாம் ஊகம்தான். சரித்திர பூர்வமான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

      2. மாணிக்கவாசகருடைய காலத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருக்கின்றன. அவர் இடைக்காலப் பாண்டியர்களின் காலத்திற்கு முற்பட்டவர் என்று சொல்பவர்கள் உண்டு. மறைமலை அடிகள் இதைப் பற்றி ஒரு நூலே எழுதியிருக்கிறார். திருவிளையாடல்களை பொறுத்தவரை நரிகளைப் பரியாக்கிய லீலையைப் பற்றி அப்பர் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இவையெல்லாம் பழங்காலந்தொட்டு வழங்கி வந்தவையாக இருக்கக்கூடும். மெல்ல மெல்ல திருவிழாக்களுக்குள் இவை புகுத்தப்பட்டிருக்கக் கூடும். இடைக்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் திருவிழாக்கள் இப்படி முறைப்படுத்தப்பட்டன என்று கோவில் திருப்பணி நூல் குறிப்பிடுகிறதே தவிர குறிப்பாக இந்த ஆண்டு என்று குறிக்கவில்லை. இந்தப் பகுதியில் ஆண்டுகளைக் குறிப்பிடாததற்கு இதுவும் ஒரு காரணம். சோழர்களில் காலத்தை அடுத்துதான் ஆண்டுகளின் கணக்கு தெளிவாக இருக்கின்றது. (ஒட்டுமொத்தத் தமிழக வரலாற்றிலும் இதே கதைதான்)

      3. இப்போதும் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் பூஜை செய்பவர்கள் ஆதி சைவ சிவாச்சாரியார்கள்தான். ஐந்து - ஆறாம் நூற்றாண்டு வாக்கில் கோவில் நிர்வாகங்கள் இவர்கள் கையில் வந்தன. ஸ்தானீக பட்டார்கள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றி நான் எழுதிய இன்னொரு கட்டுரையில் http://bit.ly/1MrfXe9
      மேலும் சில விவரங்களைக் காணலாம்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ