Skip to main content

சித்திரைத் திருவிழா - 3

சோழர்களின் சிற்றரசர்களாக இருக்க வேண்டிய நிலையிலும் கோவிலுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை பாண்டியர்கள் நிறுத்தவில்லை. கோவிலின் முன்மண்டபங்களையும், உள் பிரகாரங்களிலும் தெய்வங்களின் சன்னதிகளின் மேலும் 'காடக கோபுரம்' போன்ற சிறு கோபுரங்களையும் பாண்டிய மன்னர்கள்  கட்டினர். கோவிலின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தினர். ஏழு ஸ்தானீகர்கள் கோவில் நிர்வாக அதிகாரிகளாகச் செயல்பட்டனர். அவர்கள் 'மகர முத்திரை' ,'மகரக் கொடி', 'பொன் எழுத்தாணி', வ்ருஷப முத்திரை',  'நாக முத்திரை' ஆகிய இலச்சினைகளைப் பயன்படுத்தியதாக 'மதுரை ஸ்தானீகர் வரலாறு' என்ற நூல் கூறுகிறது.  கோவிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட குறிப்பேடாக 'ஶ்ரீதளம்' என்ற நூல் உருவாகப்பட்டது. இறைவனுக்கு இசைந்த தமிழ்பாமாலைகளான தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா ஆகியவைகளை இசைக்க இரு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர்.




பொயு 1190 வாக்கில் அரியணை ஏறிய முதலாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியர்  இத் திருப்பணிகளை மேலும் செம்மைப்படுத்த எண்ணி, ஆடி வீதியைச் சுற்றி ஒரு மதிலும், சொக்கநாதர் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு வாசலில், ஒரு பெரும் கோபுரம் ஒன்றையும் உருவாக்கத்திட்டமிட்டார். இதற்கான வேலைகளும் துவக்கப்பட்டன. ஆனால், இங்கு அரசியல் குறுக்கிட்டது. என்ன காரணத்தாலோ அதுவரை சோழ நாட்டிற்கு செலுத்தி வந்த கப்பத்தை, செலுத்த முடியாது என்று பாண்டியர் மறுத்துவிட்டார். அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த மூன்றாம் குலோத்துங்க சோழர் இதைக் கேட்டு வெகுண்டெழுந்து மதுரையின் மீது பெரும்படையுடன் வந்து போர் தொடுத்தார். மட்டியூர், கழிக்கோட்டை (இன்றைய சிவகங்கை மாவட்டங்களில் இந்த ஊர்கள் உள்ளன) ஆகிய இடங்களில் நடந்த போர்களில் பாண்டியப் படை பெரும்தோல்வி கண்டது. குலசேகர பாண்டியரும் அவரது தம்பி சுந்தர பாண்டியரும் மதுரையை விட்டு ஓடிவிட்டனர். மதுரைக்குள் வெற்றி வீரனாக நுழைந்த குலோத்துங்கர் அரண்மனையின் பல கட்டடங்களை அழித்து பாண்டியர்களின் அபிஷேக மண்டபத்தை தீக்கிரையாக்கினார். சோழ பாண்டியன் என்ற பெயரில் விஜயாபிஷேகமும், வீராபிஷேகமும் செய்து கொண்டு, நாட்டிற்குத் திரும்பினார். பிற்பாடு, பாண்டிய நாடு குலசேகரருக்கு மீண்டும் அளிக்கப்பட்டது, சிற்றரசராகத் தொடரவேண்டும் என்ற எச்சரிக்கையுடன். கிழக்குக் கோபுரம் கட்டும் பணி இந்தக் காரணங்களால் நின்று போய் விட்டது.


குலசேகரருக்கு பின் வந்த அவர் தம்பி முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், (1216), தன் அண்ணன் அடைந்த தோல்விக்கு பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டு, பெரிய படை ஒன்றைத் திரட்டி சோழ நாட்டின் மேல் போர் தொடுத்தார். சோழப் படைகளை பல இடங்களில் தோற்கடித்து சோழ நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி மதுரை மீண்டார். அங்கிருந்து கொண்டு வந்த செல்வங்களை வைத்து கோவில் திருப்பணி மீண்டும் துவக்கப்பட்டது. ஒன்பது நிலைக் கோபுரமாக கிழக்குக் கோபுரம் எழுந்தது. இன்றும் இந்தக் கோபுரம் அவர் பெயரால் சுந்தரபாண்டியன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கோபுரத் திருப்பணி அவர் காலத்திலும் முற்றுப் பெறவில்லை. மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு, இரண்டாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய அரசர்கள் மதுரையை ஆண்டனர். அதற்குப் பின் 1251ல் அரியணை ஏறிய ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியில் பாண்டியப் பேரரசு பெரும் வளர்ச்சியை அடைந்தது.

மேற்கே சேரநாடு, கிழக்கே சோழநாடு, தெற்கே இலங்கை ஆகிய இடங்களில் படையெடுத்துச் சென்று அந்த நாடுகளையெல்லாம் பாண்டியர்களின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார் சுந்தர பாண்டியர், வடக்கே படையெடுத்துச் சென்று ஹொய்சாளர்களையும், காஞ்சிபுரத்தை ஆண்டு தெலுங்குச் சோழ அரசர்களையும் வென்று, ஆந்திர மாநிலத்தின் காகதீய கணபதியையும் அவர் மகள் ருத்ரமாதேவியையும் (இவர் சரித்திரம்தான் அனுஷ்கா நடித்துப் படமாக வெளிவந்தது) போரில் தோல்வியுறச்செய்தார் அவர். இப்படி சகல திசைகளிலும் வெற்றிமேல் வெற்றியைக் குவித்ததால், 'எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்', சமஸ்த ஜகதாதார ஸோமகுலதிலக', 'எல்லாம் தலையானான்', 'கோதண்ட ராமன்' என்ற விருதுப் பெயர்களைச் சூட்டிக்கொண்டார்.



இப்போர் வெற்றிகளினால் கிடைத்த பெருஞ்செல்வத்தை கோவில் திருப்பணிகளுக்குச் செலவிட்டார் சுந்தரபாண்டியர். தில்லைச் சிதம்பர விமானத்திற்கும், திருவரங்கத்தின் கோபுரத்திற்கும் பொன் வேய்ந்தார். தன் முன்னோர்கள் எழுப்பிய மதுரைக் கிழக்குக் கோபுரத் திருப்பணியையும் நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். அவருக்கு அடுத்து வந்த முதலாம் மாறவர்மர் குலசேகர பாண்டியரும் பாண்டிய அரசை வெற்றிப்பாதையில் செலுத்தவே, மதுரையும், மீனாட்சி அம்மன் கோவிலும் இக்காலகட்டத்தில் செல்வத்தில் கொழித்து,  மகோன்னதமான நிலையை அடைந்தது.

ஆனால் காலம் எப்போதும் எதையும் ஒரே நிலையில் இருக்க விடுவதில்லை அல்லவா, அதுதான் இங்கும் நடந்தது. அது ...

                                                                                                                                             அடுத்து

படங்கள் : நன்றி  ஸ்டாலின் போட்டோகிராபி

உசாத்துணைகள்
1. தமிழகக் கோபுரக்கலை மரபு - முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
2. Madurai Through Ages - Devakunjari
3. பிற்கால சோழர் சரித்திரம்  - சதாசிவப் பண்டாரத்தார் 




Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ