Thursday 21 April 2016

சித்திரைத் திருவிழா - நிறைவு

திருமலை மன்னருக்குப் பிறகு மதுரை பல ஆட்சி மாற்றங்களையும் எண்ணற்ற சிக்கல்களையும் குழப்பங்களையும் கண்டது. ஆனாலும் அவர் ஏற்படுத்திய கட்டளைப் படி திருவிழாக்களும் அதில் உள்ள நடைமுறைகளும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன. திருவிழாக்களை ஏற்படுத்தியதோடு மற்றும் நின்றுவிடவில்லை அவர், மீனாட்சி கோவிலிலும், அழகர் கோவிலிலும், திருப்பரங்குன்றத்திலும் எண்ணற்ற திருப்பணிகள் செய்தார் அவர். சிதிலமடைந்த பகுதிகளை எல்லாம் செப்பனிட்டார்.  சாதாரணமாக சுண்ணம் சேர்த்து அதனால் செய்த கலவைகளை வைத்து செப்பனிடுவதற்குப் பதிலாக, கடற்சங்குகளை சுட்டு, அரைத்து அதனால் செய்யப்பட்ட விசேஷமான கலவைகளைப் பயன்படுத்தினார்.

ஒரு ஆட்சியாளராக திருமலை நாயக்கர் மீது எண்ணற்ற விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தராக அவர் அரும்பணி ஆற்றியிருக்கிறார். ஹிந்து மதத்தை மட்டும் அல்லாமல், மற்ற மதங்களையும் அரவணைத்தே சென்றிருக்கிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலி, எல்லா பிரிவைச் சேர்ந்த தெய்வங்களையும் சித்திரைத் திருவிழாவில் பங்குபெறச் செய்ததன் மூலம், சில்லறை மதச்சண்டைகளை ஒழித்துக்கட்டி மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஓங்கச் செய்தார். தானே அதற்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டினார்.

இந்தத் திருவிழா ஒருங்கிணைப்புகளையும் திருப்பணிகளையும் அவர் தான் தோன்றித்தனமாக, சர்வாதிகாரியைப் போல் செய்யவில்லை. தமது குருவும், சாக்த உபாசகரும், ஆகம விற்பன்னருமான நீலகண்ட தீட்சதர், கோவில் ஸ்தானீக பட்டர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக் கேட்டே செய்தார். அதனால்தான் அவர் பெயர் சொல்லும் அளவில் இன்று வரை சித்திரைப் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் 

மதுரை நகரில் இரண்டு கோபுரங்களைக் கட்டியதைப் பற்றி சொன்னீர்கள், மற்ற இரண்டு கோபுரங்களும் எப்போது கட்டப்பட்டன என்று ஒருவர் கேட்டிருந்தார். தெற்கு கோபுரத்தை 14ம் நூற்றாண்டின் மத்தியில் சிராப்பள்ளில் சிவத்தலிங்கம் செட்டி என்பவர் கட்டியிருக்கிறார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வடக்கு கோபுரத்தை நாயக்கர்கள் கட்ட முயன்று பாதியில் அந்தப் பணி நின்று போய் விட்டது.  அதனால் அது மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில், 19ம் நூற்றாண்டில், அன்பர்கள் பலரால் அந்தப் பணி நிறைவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரை இவ்வளவு நாள் பொறுமையுடன் படித்து வந்து, ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.










2 comments:

  1. அருமையான தொடர். நல்ல பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி :-}

    amas32

    ReplyDelete